fontsize: 60% 70% 80% 90%

உற்பத்தித்திறன் உயர்வை தலைமை நிர்வாகிகளே வழிநடத்த வேண்டும்: பிரதமர் லீ

உற்பத்தித்திறன் உயர்வை வழிநடத்திச் செல்லுமாறு தலைமை நிர்வாகிகளுக்கும் உச்சத் தொழிலதிபர்களுக்கும் பிரதமர் லீ சியன் லூங் சவால் விட்டிருக்கிறார்.

உற்பத்தித்திறனை உயர்த்துவதில் இவர்களுக்குப் பெரும்பங்கு இருப்பதாக அவர் கூறினார்.

துரித மாற்றம் காணும் பொருளியல், தொழில் சூழலில் உடனுக்குடன் செயல்படக்கூடிய வகையில் நீக்குப் போக்கான நடைமுறைகளையும் மனப்போக்கையும் அவர்கள் ஏற்கவேண்டும்.

இவ்வாண்டு அமலாகும் 1% மத்திய சேமநிதி சந்தா விகித உயர்வு, சம்பள ஏற்பாடுகளில் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் திரு லீ கூறினார்.

இவ்வாண்டின் சம்பள உயர்வை அடிப்படை சம்பளம், மாதாந்தர மாறுவிகிதத் தொகை, வருடாந்தர மாறுவிகிதத் தொகை ஆகியவற்றுகு இடையில் பிரித்தளிக்கவேண்டும் என்றும் அவர் சொன்னார்.

நெருக்குதலான தொழிலாளர் சந்தையில், சம்பள ஏற்பாடுகளிலும் முதலாளிகள் விவேகமாக இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

திறன் மேம்பாட்டையும் புத்தாக்கத்தையும் ஊக்குவித்தும், பணி நடைமுறைகளில் செயல்திறனைக் கட்டிக் காத்தும், உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் புதிய சந்தைகளைத் தேடியும் முதலாளிகள் உற்பத்தித்திறனை ஊக்குவிக்கலாம் என்றார் திரு லீ.

இவ்வாறு செய்வதால், நல்ல ஆதாயம் கிட்டி, போட்டித்திறன் மேம்பட்டு, ஊழியர் களுக்கும் சமூகத்திற்கும் தத்தம் பொறுப்பு களையும் முதலாளிகள் பங்காற்ற முடியும் என்று, சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனத்தின் 30வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட உச்சநிலை மாநாட்டில் பிரதமர் லீ கூறினார்.

“உங்கள் நிறுவனங்களின் உற்பத்தித்திறன் மேம்பாட்டில் உங்கள் தலைமைத்துவம் முக்கியம்” என்று சுமார் 900 தலைமை நிர்வாகிகள், மூத்த மேலாளர்கள் ஆகியோரிடம் திரு லீ சொன்னார். இரண்டு நாள் உச்சநிலை மாநாடு புதன்கிழமை காலை ரிசோர்ட்ஸ் வோர்ல்டு செந்தோசாவில் தொடங்கியது.

பிற்பாடு நடந்த கலந்துரையாடலின்போது, வெளிநாட்டு ஊழியர்கள் உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்குப் பங்களிக்காத குறைந்த திறன்பெற்றவர்களாக இல்லாதவரை, வெளிநாட்டு ஊழியர்களைத் தொழிற் சங்கம் எதிர்க்கவில்லை என்று தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் தலைவர் லிம் சுவீ சே முதலாளிகளுக்கு உறுதியளித்தார். கலந்துரையாடலில் மனிதவள அமைச்சர் கான் கிம் யோங், தேசிய முதலாளிகள் சம்மேளனத்தின் தலைவர் ஸ்டீவன் லீ ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மரம் வீழ்ந்து கார் சேதம்

அப்பர் ஈஸ்ட் கோஸ்ட் ரோடு-பிடோக் சவுத் அவென்யு 1 சந்திப்பில் கார் ஒன்றின் முன்பக்கக் கண்ணாடி மீது மரம் விழுந்தது.
ஆனால் காரின் உள்ளே உட்கார்ந் திருந்த ஔட்டுநருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

நேற்று புதன்கிழமை காலை 8.30 மணிக்கு அப்பர் ஈஸ்ட் கோஸ்ட் ரோடு-பிடோக் சவுத் அவென்யு 1 சாலைப் போக்குவரத்து சந்திப்பில் வாகனத்தை ஔட்டுவதற்கான அறிகுறியான பச்சை விளக்குக்காக வாகன ஔட்டி ஒருவர் காத்திருந்தார்.
அப்பொழுது அவரது காரின் முன்பக்கக் கண்ணாடி மீது மரம் ஒன்று விழுந்தது.

இது கடந்த இரண்டு வாரங்களில் நிகழ்ந்துள்ள மூன்றாவது சம்பவம் இது.

முதல் சம்பவத்தில் இம்மாதம் 20ம் தேதி இயோ சூ காங் ரோடில் திரு சுவா லூங் வாய் என்பவரின் கார் மீது மரம் விழுந்ததால் அவர் உயிரிழந்தார்.

இதே போன்று இரண்டு நாட்கள் கழித்து அங் மோ கியோவில் நிகழ்ந்த சம்பவத்தில் மூவருக்கு காயம் ஏற்பட்டது.

முன்னாள் வங்கி அதிகாரிக்கு $10,000 அபராதம்

சிங்கப்பூரிலுள்ள யுபிஎஸ் வங்கியில் தகவல் தொழில்நுட்ப வல்லுநராக வேலை செய்து கொண்டிருந்தபோதே, தனியார் முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ய நண்பர்களிடமிருந்து நிதி திரட்டினார் மார்க் ஆன்ட்ரூ ராபர்ட்சன்.
ஆனால், அவர் திட்டமிட்டபடி முதலீட்டுத் திட்டம் நிறைவேறவில்லை.

அதனால், கணினி துஷ்பிரயோகச் சட்டத்தின்கீழ் போலி பத்திரம் தயாரித்ததற்காக ராபர்ட்சனுக்கு $8,000 அபராதம் விதிக்கப்பட்டது.

நம்பிக்கை மோசடி குற்றத்திற்காக அவருக்கு மேலும் $2,000 அபராதம் விதிக்கப்பட்டது.

பிரிட்டனைச் சேர்ந்த சிங்கப்பூர் நிரந்தரவாசியான 41 வயது ராபர்ட்சன், யுபிஎஸ் வங்கியின் தகவல் தொழில்நுட்ப அடிப்படை வசதிகள் பிரிவின் இணை இயக்குநராகப் பதவி வகித்தபோது, பெர்டோமோ சிகார்ஸ் ஏஷியா நிறுவனத்திற்காக முதலீடுகள் திரட்டினார்.

இந்நிறுவனம் பேங்காக்கில் ஆடவர் மன்றம் நடத்துகிறது.

நிறுவனத்தில் ஆறு மாதகாலம் முதலீடு செய்வோருக்கு 15 விழுக்காடு வட்டி தருவதாக நிறுவனம் உறுதியளித்தது.

தனது இந்தோனீசிய மனைவியின் இரு நண்பர்களிடம் முதலீட்டுத் திட்டத்திற்கு நிதி திரட்டினார் ராபர்ட்சன். குமாரி சுகந்தி கண்ணாயிரம் $200,000 தொகையும், குமாரி ரத்னா கில்லிலாண்ட் $80,000 தொகையும் தந்தனர். இந்த முதலீட்டை யுபிஎஸ் வங்கி ஆதரிப்பதாகவும் குமாரி கில்லிலாண்டிடம் ராபர்ட்சன் கூறினார்.

ஜூலை 2008ல், வங்கியின் பெயருடன் போலி வைப்புச் சான்றிதழைத் தயாரித்து குமாரி கில்லிலாண்ட்டிடம் கொடுத்தார் ராபர்ட்சன்.

முதலீட்டுக்கு பெர்டோமோ தரும் 15 விழுக்காடு வட்டியில் மூன்று விழுக்காட்டைத் தான் வைத்துக் கொண்டு, முதலீடு செய்த பெண்களுக்கு 12 விழுக்காடு வட்டி தருவது ராபர்ட்சனின் திட்டம்.

ஆனால், இதை அவர் தெரிவிக்காததால், ராபர்ட்சன் கையாடல் செய்ததாகச் சட்டப்படி கருதப்படுகிறது.

குமாரி கண்ணாயிரத்திடம் கொடுக்கவேண்டிய வட்டியில் $2,980 எடுத்துக்கொண்டதாக ராபர்ட்சன் ஒப்புக்கொண்டார்.

மேலும் $3,500 கையாடல் செய்த குற்றச்சாட்டுகளை மாவட்ட நீதிபதி சர்ஜித் சிங் தீர்ப்பளிக்கும்போது கவனத்தில் கொண்டார்.

சுமத்ரா கதையை விவரிக்கும் புத்தம் புதிய கண்காட்சி

இந்தோனீசியாவின் சுமத்ரா தீவின் கதையை விவரிக்கும் புத்தம் புதிய கண்காட்சி ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில் நடைபெறவிருக்கிறது.

“சுமத்ரா: பொற்தீவு” எனும் கண்காட்சி ஜூலை 30 முதல் நவம்பர்
7 வரை நடைபெறும்.

சுமத்ராவின் தனித்தன்மை வாய்ந்த கலாசார அடையாளத்தை எடுத்துக்காட்டும் 300க்கும் மேற்பட்ட காட்சிப்பொருட்கள் கண்காட்சியில் இடம்பெறும்.

ஆதிகாலத்திலிருந்து இன்றைய காலம்வரை, பல்வேறு கலாசார தாக்கங்களால் சுமத்ராவில் ஏற்பட்ட மாற்றங்கள் கண்காட்சியில் விவரிக்கப்படும்.

இடைக்காலத் தகவல், தொடர்பு, கலைகள் அமைச்சர் திரு லுய் டக் இயூ, வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்குக் கண்காட்சியைத் தொடங்கி வைப்பார்.

ஆசிய நாகரிக அரும்பொருளகம், இந்தோனீசியத் தேசிய அரும்பொருளகம், லெய்டனின் தேசிய இனவியல் அரும் பொருளகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்யும் இக்கண்காட்சி, சுமத்ரா கலாசாரத்தை எடுத்துக்காட்டும் முதல் அனைத்துலக நடமாடும் கண்காட்சியாகும்.

“பல்வேறு ஊடகங்களில் வெளிப்படும் அழகிய காட்சிப்பொருட்களுடன் சுமத்ராவின் வளமான கலாசார வரலாறு விவரிக்கப்படும்” என்று ஆசிய நாகரிக அரும்பொருளகத்தின் இயக்குநர் டாக்டர் அலன் ச்சொங் கூறினார்.

முதியவரின் மரணத்திற்கு காரணமானவருக்கு 30 மாத சிறை

இங் யாம் சோக் என்ற 78 வயது முதியவரைக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி முகத்தில் குத்தினார் யோங் ஹோங் பெங் என்ற 40 வயது ஆடவர்.

இதனால் யாம் பின்னோக்கி விழுந்ததால் அவரது தலை சாலை நடைபாதை விளிம்பில் மோதி அவரின் மண்டை ஔட்டில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் மாண்டார்.

இந்தச் சம்பவம் கேலாங் லொரோங் 14 மற்றும் டால்மா ரோடு சந்திப்பில் நிகழ்ந்தது.

நீதிமன்றத்தில் நேற்று யோங் முதியவரைத் தாம் கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்கவில்லை என்றும் தமது தோழி முதியவர் தம்மைத் தாக்கினார் என்று கூறியதால் முதியவரைக் குத்தியதாகக் கூறினார்.

பாகிஸ்தான் விமானம் மலைப்பகுதியில் விழுந்து வெடித்தது

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்தில் தரை இறங்குவதற்கு சற்று நேரத்துக்கு முன்பு அடர்ந்த மலைப்பகுதியில் விழுந்த விமானம் தீப்பிழம்புகளாக வெடித்துச் சிதறியது.

விமானத்தில் ஆறு விமான ஊழியர்களும் 146 பயணிகளும் இருந்தனர்.

மேகமும் பனியும் சூழ்ந்த நுழைய முடியாத மார்கல்லா மலைப் பகுதியில் கிடந்த விமானத்தின் சிதைந்த பாகங்களுக்கு அருகே உடல்கள் சிதறிக் கிடந்தன என்று போலிசார் தெரிவித்தனர்.

முன்னதாக ஐந்து பேர் காயங்களுடன் மீட்கப் பட்டனர் என்றும் பின்னர் ஒருவரும் உயிர் பிழைக்க வில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து சுமார் 50 உடல்கள் மீட்கப்பட்டது என்று நம்பப்படுகிறது.

கராச்சியிலிருந்து புறப்பட்ட ஏர்புளு விமானம் நேற்று காலை 7.45 மணிக்கு தரை இறங்குவதற்கு தயாரானபோது விபத்தில் சிக்கியது என்று சிவில் விமானப் போக்குவரத்தின் பேச்சாளர் பெர்வஸ் ஜார்ஜ் தெரிவித்தார்.

ஏர்புளு விமானத்தின் பேச்சாளர் ரஹில் அஹ்மது, “மோசமான பருவநிலையே விபத்துக்கு காரணம், ஆனால் இந்த விவகாரத்தை விசாரணையாளர்களிடம் விட்டு விடுகிறேன்,” என்றார்.

விமானம் இறங்குவதற்கு முன்பு விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப் பட்டது என்று விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.
விபத்து நிகழ்ந்த மலைப்பகுதியில் வெளியான அடர்ந்த புகையில் நிவாரணப் பணி ஊழியர்கள் நுழைவதற்கு சிரமம் ஏற்பட்டது.
அப்பகுதிக்கு மேலே ஹெலிகாப்டர்கள் வட்டமடித்தன.

“பல குழுக்களை அனுப்பியிருக்கிறோம், ஆனால் ஒவ்வொரு பயணியை நெருங்கி உதவி செய்வது சிரமமான காரியமாக இருக்கிறது,” என்று நகர போலிஸ் தலைவர் பானி அமின் சொன்னார்.

சம்பவ இடத்தில் இருந்த தொலைக்காட்சி செய்தியாளர், “துண்டிக்கப் பட்ட உடற்பாகங்கள் எரிந்து கிடந்தன, இறந்தவர்களில் இரண்டு பெண்களின் உடல்களும் இருந்தன,” என்று கூறியதாக பிபிசி செய்தி குறிப்பிட்டது.

“கருகிய கைகளையும் கால்களையும்தான் பார்க்க முடிந்தது, நான் இரண்டு தலைகளையும் இரண்டு கால்களையும் இரண்டு கைகளையும் சேகரித்து பையில் போட்டேன்,” என்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரி அர்ஷாத் ஜாவித் சொன்னார்.
வீட்டின் மாடியில் விமானம் பறந்து சென்றதைப் பார்த்த 24 மணி தொலைக் காட்சி செய்தியாளர் அன்ஜும் ரஹ்மான், “மலைப் பகுதியில் விமானம் ஏன் உயரத்தில் பறக்கவில்லை என்பது வியப்பாக இருந்தது,” என்றார்.

நான்கு வீடுகளை வீவக பறிமுதல் செய்தது

அனுமதியின்றி வீட்டை வாடகைக்கு விட்ட நான்கு வீட்டு உரிமையாளர்களின் வீடுகளை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) பறிமுதல் செய்துவிட்டது.

இந்நால்வரும் தங்களது வீட்டில் குடியிருக்க வில்லை. இவர்களில் ஒருவர், கடன்முதலைக்கு தனது வீட்டை வாடகைக்கு விட்டு, வாடகைப் பணத்தைக் கடன் தவணைத் தொகையாகப் பெற்றுக் கொள்ள அனுமதித்ததால், சொந்த வீட்டுக்குள் நுழைய முடியாத நிலைக்கு உள்ளானார்.

அனுமதியின்றி வீட்டை வாடகைக்கு விட்ட மேலும் அறுவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக வீவக செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில் 2,600 வீடுகளில் வீவக சோதனையிட்டது.

சோதிக்கப்பட்ட வீடுகளில் 740 வீடுகள், பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் சோதிக்கப்பட்டன.

“கிட்டத்தட்ட 2,300 வீடுகளில் எந்தப் பிரச்சினையும் இல்லை. மீதி 300 வீடுகள் குறித்து இன்னமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

“இவற்றில் 59 வீடுகளில் வாடகை விதிகள் மீறப் பட்டதாகச் சந்தேகிக்கப் படுகிறது,” என்றது வீவக.
வீட்டில் தங்கா விட்டாலும் ஓர் அறையைப் பூட்டி வைத்துவிட்டு, மீதி வீட்டை வாடகைக்கு விடும் வீட்டுரிமையாளர் களையும் வீவக கண்டுபிடித்தது.

“குறைந்தபட்ச குடியிருப்பு கால கட்டத்தை நிறை வேற்றாமலும், வீவக-வின் அனுமதியைப் பெறாமலும் வீட்டு உரிமையாளர்கள் வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால், இத்தகைய சம்பவங்களும் அனுமதியின்றி வாடகைக்கு விட்டதாகவே கருதப்படும்” என்று வீவக தெரிவித்தது.

அதோடு, கடன் முதலைகள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வீட்டைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என்றும் வீட்டு உரிமையாளர்களை வீவக எச்சரித்தது.

வீட்டை வாடகைக்கு விட விரும்புவோர் வீவக-விடம் அனுமதி பெற வேண்டும். வீட்டில் அறைகளை வாடகைக்கு விட்டால், வாடகைக்குத் தங்கியிருப்பவர்களின் விவரங்களைப் பதிவு செய்யவேண்டும்.

அநாகரிகமான வார்த்தைகளை ஜெயலலிதா நிறுத்தவேண்டும்: கருணாநிதி

தமிழக முதல்வர் கருணாநிதி தமக்கு எதிரான அநாகரிகமான வார்த்தைகளை நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவியும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவை கேட்டுக் கொண்டார்.

தஞ்சாவூர் திலகர் திடலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் கருணாநிதி, “குடும்பத்துடன் திருவாரூரில் இருந்து டிக்கெட் இல்லாமல் ரயில் ஏறி வந்ததாக ஜெயலலிதா கூறியிருக்கிறார். நான் அப்படி பயணம் செய்ததே கிடையாது,” என்றார்.

“நான் அவரை ஜெயலலிதா அம்மையார் என்றுதான் கூறி வருகிறேன். ஆனால், அவர் என்னை கருணாநிதி என்றே பெயரைச் சொல்லி பேசுகிறார்,” என்றும் திரு கருணாநிதி சொன்னார்.

அசின் படங்களுக்குத் தடை: உலகத் தமிழ் அமைப்பு

அசின் நடித்த அனைத்து திரைப்படங்களையும் புறக்கணிக்க அமெரிக்காவில் செயல்பட்டு வரும் உலகத்தமிழ் அமைப்பு முடிவெடுத்துள்ளது.

அமெரிக்கா, கனடா நாடுகளில் இந்த முடிவை நிறைவேற்றுவோம் என்று அதன் தலைவர் நாஞ்சில் பீட்டர், வடஅமெரிக்க தமிழ் சங்க பேரவை தலைவர் பழனிசுந்தரம் ஆகியோர் நடிகர் சங்கத்துக்கு அனுப்பிய அறிக்கையில் கூறியதாக இந்தியச் செய்திகள் கூறுகின்றன.

நடிகை அசின் இந்தி படப்பிடிப்புக்காக இலங்கை சென்றது சர்ச்சையைக் கிளப்பியது.

ராஜபக்சே மனைவியுடன் யாழ்ப்பாணம், வவுனியா போன்ற தமிழர் பகுதிகளுக்கு சென்றது திரைப்பட அமைப்பினருக்கு மேலும் ஆத்திரமூட்டியது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டன.

நடிகர் சங்க பொதுக்குழுவில் அசின் விவகாரம் பற்றி விவாதிக்கப்பட்டது.

ராதாரவி, சத்யராஜ் இருவரும் அசின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.

இனிமேல் நடிகர்-நடிகைகள் இலங்கை செல்வதாக இருந்தால் நடிகர் சங்கத்திடம் அனுமதி பெற வேண்டும்;

தொழில் ரீதியாகவோ, தனிப்பட்ட முறையிலோ இலங்கை செல்லும் நடிகர்களை யாரும் தடுக்க கூடாது என்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்தத் தீர்மானத்துக்கு அசின் பதில் அளித்தபோது மன்னிப்பு கேட்க மாட்டேன். இனிமேல் தமிழ் படத்தில் நடிக்கக் கூடாது என்று நடிகர் சங்கம் தடை விதித்தால், தமிழ் படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியதாக செய்திகள் வெளியாயின.
அசின் ஆணவமாக பேசுவதாக நடிகர் சங்க நிர்வாகிகள் ஆத்திரப்பட்டனர்.

இதற்கு அசின் விளக்கம் அளித்துள்ளார். மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சொல்லவில்லை என்றும் நான் சொல்லாததை செய்தியாக வெளியிட்டு என் மீது அவதூறு பரப்பியுள்ளனர் என்று பதிலளித்துள்ளார்.

இதற்கிடையே இலங்கை செல்வதால் எஸ்.எம்.எஸ். மூலம் தனக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக நடிகர் கருணாஸ் போலிசில் புகார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை முடக்குவோம்: பாஜக எச்சரிக்கை

விலைவாசி உயர்வு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் வரையில் அவையை இயங்க விடமாட்டோம் என்று பாரதிய ஜனதா கட்சி எச்சரித்துள்ளது.

ஒத்தி வைப்புத் தீர்மானத்தின் முடிவில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், தங்களது கோரிக்கைக்கு இதர முக்கிய எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன என்றும் அக்கட்சி கூறியுள்ளது.

“விலைவாசி உயர்வுப் பிரச்சினை, பாப்ளி அணை விவகாரம் என பல விஷயங்களில் மத்திய அரசின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வருவதில் எந்தத் தவறும் இல்லை,” என்றார் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு.

இதனிடையே முன்பே நாடாளுமன்ற அவையில் விவாதிக்கப்பட்ட பழைய பிரச்சினைகள் குறித்து மீண்டும் ஒத்தி வைப்புத் தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்கத் தேவையில்லை என்று சபாநாயகர் மீராகுமார் எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கூறியிருப்பதாகத் தெரிகிறது. எனினும் ஒத்திவைப்புத் தீர்மானம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் நாடாளுமன்ற சபாநாயகருக்கு உண்டு.

கடைசியாகக் கிடைத்த தகவல்களின்படி இன்று (புதன்கிழமை) விலைவாசி உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இன்றி விவாதம் நடத்த மத்திய அரசு ஒப்புக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

எனினும் வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்தையே எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வந்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்திருப்பது மத்திய அரசுக்கும் காங்கிரசுக்கும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

Syndicate content
Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838