fontsize: 60% 70% 80% 90%

மருத்துவர் 6 மாத இடைநீக்கம்

மருத்துவர் ஒருவர் சிங்கப்பூர் மருத்துவ மன்றத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் 6 மாத காலம் பணி செய்ய தடையும், தொழில் நிபுணத்துவ நன்னடத்தையை மீறியதற்காக $6,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.

ஹவ்காங் ஸ்திரீட் 22ல் உள்ள புளோக் 246ல் உள்ள கேடி நிங் மருந்தகத்தில் டாக்டர் நிங் குவெய் டியோ புரிந்ததான குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

தேசிய சேவையாளர் மீது குற்றச்சாட்டு

தனது அலுவலக நண்பர்களை துப்பாக்கியால் குறிவைத்து ஒரு முறை சுட்டதால் தேசிய சேவை போலிஸ் பிரிவைச் சார்ந்த சிறப்பு போலிசார் ஒருவர் மீது மற்றவர்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவித்ததான குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதிபர் விருது பெற்ற ஆசிரியர்கள்

தொடக்கநிலை 6ம் வகுப்பில் படித்த அந்த மாணவர் அடிக்கடி பள்ளிக்கு வராமல் இருந்தார்.

இரவில் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்ததால் அடுத்த நாள் பள்ளி வர அந்த மாணவர் சோம்பல்படுவதை செங்காங் தொடக்கப் பள்ளியின் மாணவர் கட்டொழுங்குத் துறைக்குத் தலைவரான திரு தேவேந்திரசபை, அறிந்தார்.

அந்த மாணவருடன் பேசி, அவரின் நேர ஒழங்கை சரிப்படுத்தினார். அவர் பள்ளிக்கு வராவிட்டால், நேராக மாணவரின் வீட்டுக்குச் சென்று அழைத்து வருவார்.

“உயர்நிலை ஒன்றில் இப்போது பயிலும் அந்த மாணவர் ஆசிரியர் தினத்தன்று வாழ்த்துச் சொன்னபோது, மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது,” என்றார் இந்த ஆண்டின் முன்னுதாராண ஆசிரியருக்கான அதிபர் விருதை வென்ற நான்கு ஆசிரியர்களில் ஒருவரான திரு தேவேந்திரசபை.

பழக்கவழக்க அல்லது சமூகப் பிரச்னைகள் உள்ள மாணவர்களுக்காக நேரம் ஒதுக்குவதோடு, சமூகவிரோதப் போக்கை வெளிப்படுத்தும் மாணவர் களுக்குத் தனிப்பட்ட முறையில் வழிகாட்ட தனது சக ஆசிரியர்களையும் இவர் ஊக்குவிக்கிறார்.

ஆங்கில மொழி ஆசிரியராகப் பணிபுரியும் 45 வயது தேவேந்திரசபை, பள்ளியில் உடற்பயிற்சிக் கல்விக்கும் பொறுப்பாளாராக உள்ளார்.

இவரின் திட்டங்களும் முயற்சிகளும் மாணவரின் முழுமையான வளர்ச்சிக்கு உதவுகின்றன. அதிபர் விருதையும் பெற்றுத் தந்துள்ளன.

“இந்த விருது எனது பள்ளிக்கும் திட்டங்களில் ஒன்றுபட்டு செயலாற்றும் முதல்வர் மற்றும் ஆசிரியர்களுக்கும் கிடைத்த விருது,” என்று பெருமையுடன் கூறினார் திரு தேவேந்திரசபை.

ரீஜென்ட் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் திருமதி மோகனா ஈஸ்வரன், டவுன்ஸ்வில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் குமாரி தே வான், சிஎச்ஐஜே (கெலோக்) ஆசிரியர் திருவாட்டி எமிலின் சூன், இந்த ஆண்டின் விருதை பெற்ற மற்ற மூவர்.

முன்னுதாரண ஆசிரியர் விருதுக்கு இந்த ஆண்டு சாதனை அளவாக 9,700க்கும் மேற்பட்ட நியமனங்களை பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் அனுப்பியிருந்ததாக கல்வி அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.

டிசம்பரில் விலகல் இல்லை: சாமிவேலு

மலேசிய இந்தியர் காங்கிரஸ் தலைவர் டத்தோ சாமிவேலு, டிசம்பரில் தான் பதவி விலகப்போவதாகப் பேச்சு அடிபடுவதை மறுத்துள்ளார்.

அத்தகைய பேச்சு சிலருடைய கற்பனையே என்று அவர் சொன்னார்.

“விலகப் போகிறேன் என்று நான் சொன்னேன். இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால் நான் குறித்திருக்கும் தேதியில்தான் விலக முடியும்,” என்று செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் குறிப்பிட்டார்.

சிரம்பானில் நடந்த ஒரு புரிந்துணர்வு கையெழுத்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டத்தோ சாமிவேலு, பதவி விலகல் பற்றி கருத்து தெரிவித்தார்.

சாமிவேலு டிசம்பரில் பதவி விலகப் போவதாக தனக்கு அணுக்கமானவர்களிடம் தெரிவித்து இருக்கிறார் எனத் தெரிகிறது என்று ஆங்கில மொழி நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது.

பதவி விலக இருக்கும் சாமிவேலுவுக்கு பிரியாவிடை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நாளிதழ் தெரிவித்தது.

அதுபற்றி கருத்துத் தெரிவித்த சாமிவேலு, தான் குறித்துள்ள நாளன்று பதவியில் இருந்து விலகப் போவதாகச் சொன்னார்.
“சிலருக்கு என்னைப் பிடிக்க வில்லை. நான் இன்றே விலக வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

“நான் விரும்பும்போது விலகிடுவேன்,” என்று சாமிவேலு சொன்னார்.

தனது பதவி காலம் 2012ல் முடிவடைவதாகவும் அப்போது பதவியில் இருந்து தான் விலக இருப்பதாகவும் சாமிவேலு முன்பு தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் சூது: விளையாட்டாளர்களுக்கு எதிராகத் தேசத் துரோக வழக்கு தாக்கல்

விஸ்வரூபம் எடுத்து இருக்கும் சூதாட்ட விவகாரம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை உருக்குலைத்து விட்டது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களில் முகமது ஆசிப், முகமது ஆமிர், டெஸ்ட் அணித் தலைவர் சல்மான் பட், விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மல் உள்பட 7 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகப் புகார் கிளம்பி இருக்கிறது.

இதன் தொடர்பில் சூதாட்டத் தரகர் மஷார் மஜீத் என்பவர் கைதாகி பிணையில் விடுவிக்கப் பட்டுள்ளார்.

சூதாட்டப் பிரச்சினை குறித்து பாகிஸ்தானின் புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

பாகிஸ்தான் வீரர்களை சூதாட்டத்தில் ஈடுபடுத்திய விவகாரம் தொடர்பாக லண்டனைச் சேர்ந்த 35 வயது பெண் உள்பட மேலும் மூவர் கைதாகி இருக்கிறார்கள்.

இதற்கிடையே சூதாட்டத்தில் சிக்கியதாகக் கூறப்படும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மீது லாகூர் உயர்நீதி மன்றத்தில் இஸ்தியாக் அகம்மது என்ற வழக்கறிஞர் தொடுத்த தேசத் துரோக வழக்கு விசாரணைக்கு ஏற்கப் பட்டுள்ளது.

தேச துரோக குற்றச் சாட்டில் அதிகபட்சமாக மரண தண்டனை வரை விதிக்கப்பட வழிவகை உண்டு.

பள்ளிகளில் நிதியறிவை வளர்க்க $760,000 கூடுதல் நிதி

பள்ளிகளில் நிதியறிவை வளர்க்கும் திட்டத்திற்காகக் கூடுதல் பணம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதுவரை $1 மில்லியன் நிதி பெற்றிருக்கும் சிட்டி - தேசிய கல்விக் கழக நிதியறிவுத் திட்டத்திற்குக் கூடுதலாக $760,000 நிதி ஒதுக்கப்படுகிறது. தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் இடையிலான வேறுபாட்டைக் கற்றுக் கொள்ளுதல் போன்ற அடிப்படை நிதித் திறன்களை மாணவர்களிடம் வளர்ப்பது நிதியறிவுத் திட்டத்தின் நோக்கம். எதிர்வரும் 2012ம் ஆண்டுக்குள் 400,000 மாணவர்களும் 5,000 ஆசிரியர்களும் இத்திட்டத்தில் பலனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நிதியறிவுத் தூதர்களாகப் பொறுப்பேற்க உதவும் புதிய வழிகாட்டித் திட்டம் இவ்வாண்டு அறிமுகமாகும். இந்த ஆசிரியர்கள் தங்களது சக ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயிற்சியளிப்பதற்குத் தேவையான திறன்களைக் கற்றுக் கொள்வார்கள்.

சந்திரமோகன் மறைவுக்குப் பிரதமர் இரங்கல்

ஒளிபரப்புத் துறையில் முத்திரை பதித்த திரு சந்திரமோகனின் மறைவால் ஆழ்ந்த துயரம் அடைவதாக அவரின் மனைவி திருவாட்டி சந்திரமோகன் நிர்மலாவுக்கு அனுப்பிய இரங்கல் கடிதத்தில் பிரதமர் திரு லீ சியன் லூங் குறிப்பிட்டிருக்கிறார்.

நுட்பமான அரசியல் அறிவுபெற்ற திரு சந்திரமோகன், மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்தபோது
9 ஆகஸ்ட் 1965 அன்று மதியுரை அமைச்சர் அளித்த தொலைக்காட்சி செய்தியாளர் கூட்ட நிகழ்ச்சியை தயாரித்தார் என்று திரு லீ குறிப்பிட்டார்.

அதோடு, பல ஆண்டுகளாகத் தேசிய தின கூட்டங்களின் தயாரிப்பையும், நமது பொதுத் தேர்தல் செய்திகளையும் மேற்பார்வையிட்டார்.

திரு சந்திராவை 1980களில் தனக்குத் தெரியவந்ததாகப் பிரதமர் கடிதத்தில் குறிப்பிட்டார். அப்போது சிங்கப்பூர் ஒளிபரப்புக் கழகத்தின் நடப்பு விவகாரப் பிரிவுக்கு அவர் பொறுப்பேற்றி இருந்தார்.

நடப்பு விவகாரங்களை யும் அரசியல் விவகாரங்களையும் விளக்கிச் சொல்லவும் கலந்து பேசவும் தொலைக்காட்சியை அதிகமாகப் பயன்படுத்த வேண்டிய அவசியம் அப்போது எழுந்ததாகத் திரு லீ கடிதத்தில் எழுதியிருந்தார்.

சிங்கப்பூர் ஒளிபரப்புக் கழகம் “டுடே இன் பார்லிமென்ட்” எனும் நிகழ்ச்சியைத் தொடங்கியது. பல மணி நேர விவாதத்தை 45 நிமிடத் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக அதே நாளில் தயாரிக்கும் மிகச் சிரமமான பணி இது.

அதற்குமுன் நாடாளுமன்ற விவாதங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவில்லை. ஆனால், திரு சந்திரா இந்நிகழ்ச்சிகளின் தயாரிப்பைத் தாமே கவனித்து, அவை தெளிவாகவும் நடுநிலை யாகவும் இருப்பதை உறுதிப்படுத்தியதாகத்
திரு லீ சுட்டிக்காட்டினார்.

திரு லீ பங்கெடுத்த சில நிகழ்ச்சிகளையும் திரு சந்திரா தயாரித்துள்ளார்.
ஒருமுறை, ஸ்டூடியோவில் நடந்த கலந்துரையாடல் திட்டமிட்ட நேரத்தைவிடக் கூடுதல் நேரம் நடந்ததாகத் திரு லீ நினைவுகூர்ந்தார். கலந்துரையாடலில் இடம்பெற்ற எல்லாமே அவசியமானவை என்பதால், நேரத்தைச் சுருக்குவது சிரமமாக இருக்கும் என திரு சந்திரா விடம் கூறினார் திரு லீ. ஆனால், சீரிய அனுபவம் பெற்ற அவர், அணுக்கமாகக் கவனித்தால் சில பகுதிகளை நீக்கமுடியும் என்று பதிலளித்தார்.

அவர் சொன்னது சரியாக இருந்ததாகக் குறிப்பிட்டார் திரு லீ.

திரு சந்திரா மீடியாகார்ப் நிறுவனத்தி லிருந்து ஓய்வுபெற்ற பிறகும் தொடர்ந்து உதவி செய்ததாகத் திரு லீ தெரிவித்தார்.

கவலைகளைக் களையும் மருந்து

குடியிருப்பு, போக்குவரத்து, கல்வி, முக்கியமாக சிங்கப்பூரர்களுக்கு இந்நாட்டில் உரிய இடம் ஆகியவை குறித்த மக்களின் கவலைகளைத் தீர்க்கும் மருந்தாக அமைந்தது இந்த ஆண்டின் தேசிய நாள் பேருரை.

சிங்கப்பூர் மக்களுக்கே இந்நாட்டில் முதன்மைச் சலுகை என்பதற்கு ஒரு சான்றாக, தேசிய சேவை முடித்த சிங்கபூரர்களுக்கு $9,000 தேசிய சேவை அங்கீகார விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது வீடமைப்பு வீடுகள் மக்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில் தொடர்ந்து இருப்பதை அரசாங்கம் உறுதிசெய்யும்.
இதன் விளைவாக நாளுக்குநாள் அதிகரித்து வரும் தனியார் வீட்டு விலையை நிலைப்படுத்தவும் முயற்சி எடுக்கும்.
மக்களுக்குப் போதிய வீடுகள் இருப்பதை உறுதி செய்யும் வகையில், வீடு கட்ட அதிக நிலம், 22,000 புதிய வீவக வீடுகள், முதல் முறையாக வீடு வாங்கு வோருக்கான சலுகைகள் எல்லாம் இடம்பெறுகின்றன.

நெரிசலைக் குறைக்கும் வகையில் பொதுப் போக்குவரத்து மேம்படுத்தப்படவுள்ளது.
$60 பில்லியனில் ரயில் போக்குவரத்து இரு மடங்காகப் பெருகும்.
சிங்கப்பூரின் அனைத்து மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கும் வழி வகுக்கப்பட்டுள்ளது.

வழக்கநிலையில் பயிலும் மாணவர்கள் நேரடியாக பலதுறை தொழில் கல்லூரிக்குச் செல்ல வாய்ப்பு, வழக்கநிலை (தொழில் நுட்ப) மாணவர்களுக்காக இரு புதிய பள்ளிகள், மேலும் ஏழு பள்ளிகளில் ஒருங்கிணைந்த பாடத்திட்டம் (ஐபி), மூன்றாவது மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுடன் சிங்கப்பூர் பல்கலைக்கழக அறக்கட்டளையும் அமைக்கப்படவுள்ளது.

இவையெல்லாம் சிங்கப்பூரர்களுக்காகவே அமலாக இருக்கின்றன.
என்றாலும் பொருளியல் வளர்ச்சிக்கு ஏதுவாக வெளிநாட்டினருக்கும் கதவைத் திறக்க வேண்டிய ஒரு நிலை நமக்கு உள்ளது.
போட்டித்தன்மை மிக்க முதல் தர உலக நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் நீடித்து நிலைத்திருக்க வெளிநாட்டினர் தேவை என்பதையும் பிரதமர் லீ பேருரையில் பல உதாரணங்களை எடுத்துக் காட்டி விளக்கி இருக்கிறார்.

சிங்கப்பூரர்களின் அக்கறைகளில் கவனம் செலுத்தும் அதே நேரத்தில், ஆற்றல்மிக்க வெளிநாட்டினரை அனுமதித்து அவர்களை சிங்கப்பூரர்கள் ஏற்றுக்கொள்ளும்படி செய்வது எப்படி என்பதே சிங்கப்பூரின் சவாலாக உள்ளது.

மக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஏற்படும் புறச் சிரமங்களைக் களைவதற்கான முயற்சிகளை அரசாங்கம் எடுத்து வருகிறது. அகப் பக்குவத்தை மக்கள்தான் பெற வேண்டும்.

உள்துறை அமைச்சு பிரிவுகளில் தலைமைத்துவ மாற்றங்கள்

குடிநுழைவுச் சோதனைச்சாவடி ஆணையத்தின் ஆணையாளர் திரு எரிக் டான் ச்சொங் சியன்,
1 அக்டோபர் 2010 தேதியிலிருந்து ஊழல் விசாரணை இலாகாவின் இயக்குநராகப் பொறுப்பேற்கிறார்.

ஊழல் விசாரணை இலாகாவின் தற்போதைய இயக்குநர் திரு சோ கீ ஹியன் தேசிய வளர்ச்சி அமைச்சின் எஸ்டேட் ஏஜன்சீஸ் மன்றத்தின் துணை நிர்வாக இயக்குநராக நியமிக்கப்படுவார். எஸ்டேட் ஏஜன்சீஸ் மன்றம் இவ்வாண்டு இறுதியில் அமைக்கப்படும்.
திரு எரிக் டான் 1 செப்டம்பர் 2010 அன்று ஆணையாளர் பதவியிலிருந்து விலகுவார்.

திரு சோ கீ ஹியன் 2005ம் ஆண்டு ஊழல் விசாரணை இலாகாவின் இயக்குநராகப் பொறுப்பேற்றார்.

அவரது தலைமைத்துவத்தின்கீழ், தலையெடுத்துவரும் சவால்களைக் கையாளக்கூடிய புதிய ஆற்றல்களை இலாகா மேம்படுத்தியதோடு, அனைத்துலக ஊழல் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் பங்காற்றியது.

சென்ற ஆண்டு ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு ஊழல் தடுப்பு மற்றும் வெளிப்படைப்போக்கு வல்லுநர்கள் பணிக் குழுவுக்கு அவர் தலைமை ஏற்றிருந்தார்.

பொதுத் துறையையும் வர்த்தகச் சமூகத்தையும் சென்றடையும் முயற்சிகளையும் இலாகா விரிவுபடுத்தியது.

குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையத்தின் தற்போதைய துணை ஆணையாளரான 51 வயது திரு கிளாரன்ஸ் இயோ கெக் லியோங், 1 செப்டம்பர் 2010 முதல் ஆணையாளராகப் பொறுப்பேற்பார்.

ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன்தான் கூட்டணி - ப.சிதம்பரம்

தமிழகத்தில் 1967ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சி என்பது கனவாகவே போய்விட்டது.

“மீண்டும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி வேண்டும் என்பதே எனது நாற்பதாண்டு கால ஆசை,” என்று கூறியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

நேற்று கோயம்புத்தூர் சிறைச்சாலை மைதானத்தில் காங்கிரஸ் தலைவர் சி.சுப்பிரமணியம் நூற்றாண்டு விழா நடைபெற்றது.
அந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அந்நிகழ்ச்சியில் உரையாற்றிய ப.சிதம்பரம், இன்றைக்குத் தமிழகம் கல்வியில் முதலிடம் வகிக்கிறது. அதற்குக் காரணம் காங்கிரஸ் கட்சி அன்றைக்கு அமைத்த அடித்தளம்தான் என்று கூறினார்.

எனவே மீண்டும் காங்கிரஸ் ஆட்சி வரவேண்டும்.
இந்தியாவை ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சியால் தமிழகத்தில் மட்டும் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியவில்லையே என்ற ஏக்கமும் ஆதங்கமும் எங்கள் கட்சித் தொண்டர்களுக்கு இருக்கவே செய்கிறது.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியையே மக்கள் விரும்புகின்றனர். நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக கூட்டணி ஆட்சிதான் நிலவுகிறது.
தமிழகத்திலும் கூட்டணி தான் வெற்றிபெறும் என்ற நிலை இருந்தாலும், வெற்றி பெறும் கூட்டணி காங்கிரஸ் கூட்டணியாகவே இருக்கும்.
அடுத்த தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் அமையும் அரசு, காங்கிரஸ் கட்சிக்கு இடம் தரும் அரசாக இருக்கும் என்று கூறியுள்ளார் அமைச்சர் ப.சிதம்பரம்.
அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசுகையில், தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி வருவதற்குத் தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர்களின் இந்தப் போக்கு தமிழக அரசியல் கட்சிகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
அதிமுக அல்லது தேமுதிக போன்ற கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டுச் சேர்ந்து பெரிய அரசியல் திருப்பத்திற்கு வழி வகுக்குமோ என்று அரசியல் நோக்கர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், திமுகவுடன் கூட்டு சேரும் பாமகவின் முயற்சி தோற்றதால், பாமக தன்னிச்சையாகவே போட்டியிடும் என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

Syndicate content
Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838