தொடக்கநிலை 6ம் வகுப்பில் படித்த அந்த மாணவர் அடிக்கடி பள்ளிக்கு வராமல் இருந்தார்.
இரவில் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்ததால் அடுத்த நாள் பள்ளி வர அந்த மாணவர் சோம்பல்படுவதை செங்காங் தொடக்கப் பள்ளியின் மாணவர் கட்டொழுங்குத் துறைக்குத் தலைவரான திரு தேவேந்திரசபை, அறிந்தார்.
அந்த மாணவருடன் பேசி, அவரின் நேர ஒழங்கை சரிப்படுத்தினார். அவர் பள்ளிக்கு வராவிட்டால், நேராக மாணவரின் வீட்டுக்குச் சென்று அழைத்து வருவார்.
“உயர்நிலை ஒன்றில் இப்போது பயிலும் அந்த மாணவர் ஆசிரியர் தினத்தன்று வாழ்த்துச் சொன்னபோது, மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது,” என்றார் இந்த ஆண்டின் முன்னுதாராண ஆசிரியருக்கான அதிபர் விருதை வென்ற நான்கு ஆசிரியர்களில் ஒருவரான திரு தேவேந்திரசபை.
பழக்கவழக்க அல்லது சமூகப் பிரச்னைகள் உள்ள மாணவர்களுக்காக நேரம் ஒதுக்குவதோடு, சமூகவிரோதப் போக்கை வெளிப்படுத்தும் மாணவர் களுக்குத் தனிப்பட்ட முறையில் வழிகாட்ட தனது சக ஆசிரியர்களையும் இவர் ஊக்குவிக்கிறார்.
ஆங்கில மொழி ஆசிரியராகப் பணிபுரியும் 45 வயது தேவேந்திரசபை, பள்ளியில் உடற்பயிற்சிக் கல்விக்கும் பொறுப்பாளாராக உள்ளார்.
இவரின் திட்டங்களும் முயற்சிகளும் மாணவரின் முழுமையான வளர்ச்சிக்கு உதவுகின்றன. அதிபர் விருதையும் பெற்றுத் தந்துள்ளன.
“இந்த விருது எனது பள்ளிக்கும் திட்டங்களில் ஒன்றுபட்டு செயலாற்றும் முதல்வர் மற்றும் ஆசிரியர்களுக்கும் கிடைத்த விருது,” என்று பெருமையுடன் கூறினார் திரு தேவேந்திரசபை.
ரீஜென்ட் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் திருமதி மோகனா ஈஸ்வரன், டவுன்ஸ்வில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் குமாரி தே வான், சிஎச்ஐஜே (கெலோக்) ஆசிரியர் திருவாட்டி எமிலின் சூன், இந்த ஆண்டின் விருதை பெற்ற மற்ற மூவர்.
முன்னுதாரண ஆசிரியர் விருதுக்கு இந்த ஆண்டு சாதனை அளவாக 9,700க்கும் மேற்பட்ட நியமனங்களை பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் அனுப்பியிருந்ததாக கல்வி அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.