இவ்வாண்டின் தமிழ் மொழி விழாவை ஒட்டி அழகப்பா கல்வி நிலைய முன்னாள் மாணவர் குழு நடத்தும் ‘ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு” என்ற உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளின் இறுதி அங்கம் வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 27) காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடைபெறவுள்ளது.
தமிழ் இலக்கியப் படைப்புகளை செயற்கை நுண்ணறிவு ஆற்றல் மூலமாக மாணவர்கள் வெளிப்படுத்த ‘செயற்கை நுண்ணறிவில் திருக்குறள், பழமொழி’ என்ற தலைப்புகளில் உயர்நிலை 1, 2 மாணவர்களுக்கும் ‘செயற்கை நுண்ணறிவில் தமிழ்ச் சான்றோர்கள், சிறுகதைகள்’ என்ற தலைப்புகளில் உயர்நிலை 3, 4, 5 மாணவர்களுக்கும் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமைப்பினர் ஏற்பாடு செய்த பயிற்சிப் பட்டறையில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.
தாங்கள் பெற்ற பயிற்சியின் அடிப்படையில் 250 மாணவர்கள் குழுக்களாக போட்டிகளில் கலந்துகொண்டு செயற்கை நுண்ணறிவு ஆற்றல் மூலம் ஐந்து நிமிடத்திற்கு மிகாமல் காணொளிகளைப் படைத்துள்ளனர்.
அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களின் இறுதிப்போட்டி வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இறுதிப் போட்டியில் பங்குபெறும் குழுவினர் காணொளிகளைப் படைத்த பிறகு, படைத்த முறை பற்றியும் அதில் தாங்கள் கற்றுக்கொண்டவை பற்றியும் எடுத்துரைப்பர்.
போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
பயிற்சிப் பட்டறையையும் போட்டிகளையும் திறம்பட நடத்திட செயற்குழு உறுப்பினர்கள் திருமதி லதா அழகப்பனும் திரு கிருஷ்ணமூர்த்தி பாஸ்கரனும் கடுமையாக உழைத்துள்ளனர்.
மாணவர்களின் செயற்கை நுண்ணறிவு ஆற்றல் திறன்களைக் கண்டிடவும் கற்றிடவும் மகிழ்ந்திடவும் அழகப்பா கல்விநிலைய முன்னாள் மாணவர் குழு சிங்கப்பூரர் அனைவரையும் அழைக்கிறது.
செய்தி: அழகப்பா கல்விநிலைய முன்னாள் மாணவர் குழு