இக்காலகட்டத்தில் உலகம் நிலையற்ற தன்மையில் இருப்பதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஆகையினால், அண்டை நாடுகளுடனான உறவை சிங்கப்பூர் வலுப்படுத்திக்கொள்வது மிகவும் முக்கியம் என அவர் வலியுறுத்தினார்.
இந்தோனீசியாவுடனான நல்லுறவை வலுப்படுத்துவதற்கு சிங்கப்பூர் முன்னுரிமை வழங்கும் என்று ஏப்ரல் 26ஆம் தேதியன்று டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவுக்கு அவர் நான்கு நாள் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் விவியன், ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் தலைவிரித்தாடும் போர் கூடிய விரைவில் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை என்று கூறினார்.
போரின் காரணமாகப் பல நாடுகளுக்கிடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக அவர் கவலை தெரிவித்தார்.
சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் கையெழுத்திட்ட மூன்று ஒப்பந்தங்கள் கடந்த மார்ச் மாதம் நடப்புக்கு வந்ததாகவும் இருநாடுகளுக்கும் இடையிலான உறவில் அவை மிகவும் முக்கியம் என்றும் டாக்டர் விவியன் கூறினார்.
இந்தோனீசியா மற்றும் சிங்கப்பூரின் வான்வெளித் தகவல், எச்சரிக்கை சேவையின் எல்லை ஜனவரி 2022ஆம் ஆண்டில் மாற்றியமைக்கப்பட்டது.
குற்றம் புரிந்துவிட்டு நாட்டைவிட்டுத் தப்பி ஓடுபவர்களைத் திருப்பி ஒப்படைப்பது குறித்த ஒப்பந்தத்தை இருநாடுகளும் 2022ஆம் ஆண்டில் கையெழுத்திட்டன.
இந்தோனீசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான தற்காப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் 2007ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டது.
இந்த மூன்று ஒப்பந்தங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டது இந்தோனீசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான உறவில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், மற்ற ஒப்பந்தங்கள் குறித்தும் இருநாடுகள் பரிசீலனை செய்து வருவதாக டாக்டர் விவியன் தெரிவித்தார்.
பசுமைப் பொருளியல், மின்னிலக்கப் பொருளியல் ஆகியவை அவற்றில் அடங்கும் என்றார் அவர்.
இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவை வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் சந்தித்துப் பேசினார்.