திரைச்செய்தி

asin
Friday, February 17th, 2012
இந்தி திரையுலகில் கால்பதித்த போது கிடைத்த வரவேற்பு அசினுக்கு இப்போது இல்லை என்கிறார்கள். ஆனால் அவரோ, தான் உண்டு தன் வேலை உண்டு என்று சமர்த்துப் பெண்ணாக அமைதி காக்கிறார்.
இந்த நேரம் பார்த்து கமல்ஹாசனின் புதுப் படத்தில் அசின் அவருக்கு ஜோடியாக நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மற்ற கிசுகிசுக்கள் வெளியான போதெல்லாம் அமைதி காத்த அசின், இந்தச் செய்தியைக் கண்டதும் அதிர்ந்தே போனாராம்.
“இதற்கும் மறுப்பு சொல்லவில்லை என்றால், நானே இப்படியொரு செய்தியை உலவ விட்டதாக பிறகு இன்னொரு கிசுகிசுவும் வெளியாகும். அதனால்தான் இந்த விளக்கம். கமல் சார் படத்தில் அவருக்கு ஜோடியாக என்னை ஒப்பந்தம் செய்திருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. அதிலும் அது ஷங்கர் இயக்கும் படம் என்று வேறு செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். ஷங்கர் சார் என்னுடன் நல்ல நண்பராகப் பழகுகிறார். அவர் மீது எனக்கும் மிகுந்த மரியாதை உண்டு. எங்கேனும் பொது நிகழ்ச்சிகளில் சந்தித்துக் கொண்டால் சிறிது நேரம் பேசுவோம். தவிர என்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அவரும் ஒரு உறுப்பினர். அவரது வலைதளப் பக்கத்தில் நான் எப்போதே உறுப்பினராகி விட்டேன். வாய்ப்பு கிடைக்கும்போது இணையம் வழியும் பேசிக் கொள்வோம். ஆனால் இதுவரை தன் புதுப் படத்தில் என்னை நடிக்க வைப்பது குறித்து அவர் எதுவுமே சொல்லவில்லை” என்கிறார் அசின்.
ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால்?
“ஷங்கர் படம் என்றால் எந்த நடிகைதான் மறுக்கப் போகிறார்? நானும் அதற்கு விதி விலக்கல்ல. ஷங்கர் சார் உண்மையாகவே என்னிடம் இதுகுறித்துப் பேசும்போது கை வசம் கால்ஷீட் இருந்தால் நிச்சயமாக அவர் படத்தில் நடிப்பேன். கமல் சாருடன் ஏற்கனவே நடித்த அனுபவம் இருப்பதால் மீண்டும் அவருடன் ஜோடி சேர்வதிலும் எனக்கு மகிழ்ச்சிதான்” என்று உற்சாகம் குறையாமல் சொல்கிறார் அசின்.

முழு விவரம் 17.2.2012 தமிழ்முரசில்

ANJALI
Friday, February 17th, 2012
“இப்போதெல்லாம் பேட்டி என்றாலே முகத்தை திருப்பிக் கொள்கிறார். சமீப காலமாக பத்திரிகையாளர்கள் யாரையும் சந்திப்பதில்லை. கால்ஷீட்டில் கெடுபிடி காட்டுபவர், சம்பள விஷயத்தில் மட்டும் கறாராக உள்ளார்” என்று அஞ்சலியைப் பற்றி அவ்வப்போது எக்குத்தப்பான தகவல்கள் வெளியானபடி இருக்கிறது.
ஆனால் அவரோ, தனக்கும் இச்செய்திகளுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்கிற ரீதியில் கூலாக உள்ளார்.
“என்னைப் பொறுத்தவரையில் வாங்கும் சம்பளத்திற்கு ஏற்ப உண்மையாக உழைக்க வேண்டும். இந்த விஷயத்தில் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறேன். என்னைப் பற்றி நாலு பேர் நாலு விதமாகப் பேசலாம். ஆனால் அவற்றுக்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருந்தால் சினிமாவில் காலம்தள்ள முடியாது. பிழைப்பு கெட்டுவிடும். என்னை ஒப்பந்தம் செய்த இயக்குநரும், தயாரிப்பாளரும் என்னைப் பற்றி குற்றம் குறைகள் சொன்னால் மட்டுமே கவலைப்படுவேன். மற்றபடி நடிகைகளைப் பற்றி ஏதாவது சொன்னால் அது சர்ச்சையை ஏற்படுத்தும், அதன் மூலம் விளம்பரம் தேடிக் கொள்ளலாம் என்று நினைப்பவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது” என்று திட்டவட்டமாகப் பேசுகிறார் அஞ்சலி.
அது போகட்டும். தன்னைப் பற்றி வெளிவரும் கிசுகிசுக்களுக்கு நேர்மாறாக கடந்த சில நாட்களாகப் பொது நிகழ்ச்சிகளிலும் அஞ்சலி கலந்து கொள்கிறார். இந்த வகையில் அண்மையில் ஈரோட்டில் நடைபெற்ற பெண்களுக்கான கபடிப் போட்டி நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ளார்.
“கபடி தமிழர்களுக்கான வீர விளையாட்டுகளில் ஒன்று என்று சொல்லலாம். நல்ல திடகாத்திரமான உடல்வாகும், வலிமையும் உள்ளவர்களால்தான் கபடி ஆட முடியும். என் வயதுள்ள இளம் பெண்கள் இந்த விளையாட்டில் ஈடுபட்டிருப்பது உண்மையிலேயே பாராட்ட வேண்டிய விஷயம்” என்று போட்டியில் பங்கேற்ற இளம் பெண்களுக்குப் பாராட்டு தெரிவித்து உற்சாகப்படுத்தினார் அஞ்சலி.
அப்பெண்களோ, விளையாட்டைப் பற்றி பேசாமல், அஞ்சலியின் அழகு ரகசியம் குறித்து விசாரித்தனர்.

“அஞ்சலி அக்கா... ரொம்ப கலரா இருக்கீங்க. உங்களை மாதிரி நாங்களும் ஆகணும்னா என்ன செய்யணும்?” என்று கேட்டார் ஒரு வீராங்கனை.
“நான் உங்களைப் போல் வெயிலில் ஓடியாடி விளையாடுவதில்லை. அதனால் வெளுப்பாக இருக்கிறேன். ஏசியில் குளிரில் நிம்மதியாக இருக்கும் என்னைப் போன்ற நடிகைகள், நான்கு நாட்கள் உங்களைப் போல் வெயிலில் கபடி ஆடினால் உடனே கருப்பாகிவிடுவோம்” என்று சொல்ல வீராங்கனைகள் மத்தியில் சிரிப்பொலி.

போட்டியில் பங்கேற்ற ஒரு வீராங்கனைக்கு அன்று பிறந்த நாள் என்று யாரோ காதில் கிசுகிசுக்க, உடனே சத்தமில்லாமல் ஒரு கேக் வாங்கி வரச் செய்து, அதை அப்பெண்ணுக்குப் பரிசாக அளித்து பரவசப்படுத்தினார் அஞ்சலி. பிறகு எல்லோருமாகச் சேர்ந்து பிறந்த நாள் வாழ்த்துப் பாடலைப் பாட, அந்தக் கிராமத்து இளம் வீராங்கனையின் முகத்தில் அப்படியொரு பூரிப்பு.

போட்டி முடிந்து வெற்றியாளர்களும் தேர்வான பின்னர் இளம் பெண்களுடன் கைகுலுக்கிவிட்டு விடை பெற்றார் அஞ்சலி. அப்போது ஒரு பெண், “அக்கா, இத்தனை நேரம் எங்ககூட இருந்தீங்க. ஒரு ஆட்டத்தில் கூட பங்கெடுக்கலை. எங்களுக்காக ஒருமுறை கபடி ஆடுங்களேன்” என்று கேட்க, “ஐய்யய்யோ... ஜாலிக்காக விளையாடி எங்காவது அடிபட்டால் படப்பிடிப்பு ரத்தாகிவிடும். அப்புறம் என் கதி அதோ கதிதான்” என்று சொல்லிவிட்டு சிரித்தபடியே கிளம்பினார் அழகுப் பெண் அஞ்சலி.

SONIA-AGARWAL
Wednesday, February 15th, 2012
‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’  படத்தின் மூலம் கோடம்பாக்கத்தில்  மறு பிரவேசம் செய்துள்ளார் சோனியா அகர்வால்.
படம் வெற்றியா என்பது தனிக் கதை. ஆனால் சோனியாவுக்கு இப்படம் நல்ல திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை.
“போகிற இடத்தில் எல்லாம் என் நடிப்பைப் பாராட்டுகிறார்கள். அதிலும் வாய்ப்பு கேட்டு வரும் புது முகங்கள் இயக்குநர்களிடம் சிக்கித் தவிக்கும் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் செமத்தியான பாராட்டு கிடைத்துள்ளது. என் அம்மாவும் என்னுடன் சேர்ந்து இப் படத்தைப் பார்த்தார். எதிர்பார்த்தது போலவே சில காட்சிகளை கண்டு அவர் கண்ணீர் விட்டு அழுதார். அதைக் கண்டு நானும் அழுதேன். அதேசமயம் என் நடிப்பிற்கும் யதார்த்தமான திரைக்கதைக்கும் வெற்றியாகவே என் அம்மாவின் கண்ணீரைக் கண்டேன்” என்று நெகிழும் சோனியா அகர்வால் மறு மணம் குறித்து இப்போது யோசிப்பதாக இல்லையாம்.
AMALAPAUL-SIDHARTH
Monday, February 13th, 2012
இணையத்தில் தான் கண்டு ரசித்த ஒரு குறும்படத்தையே தற்போது திரைப்படமாக தயாரித்து நாயகனாகவும் நடித்து வருகிறார் இளம் நாயகன் சித்தார்த்.
‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற வித்தியாசமான தலைப்பில் தயாராகி வரும் இப்படத்தில் சித்தார்த் ஜோடியாக நடிப்பவர் அமலா பால். பாலாஜி மோகன் இயக்கி உள்ளார்.
இதில் முன்னாள் கதாநாயகன் சுரேஷ் முக்கிய வேடத்தில் நடிக்க மேலும் பல புது முகங்களையும் நடிக்க வைத்துள்ளனர்.
அண்மையில் இப்படம் குறித்த சில தகவல்களை தனக்கு மிகவும் நெருக்கமான பத்திரிகையாளர்கள் சிலருடன் பகிர்ந்து கொண்டார் சித்தார்த். அவர் ஜாலியாக கூறிய சில விவரங்கள்:
“இந்தப் படத்தை நான் மட்டும் தயாரிக்கவில்லை. நான் இணை தயாரிப்பாளர் மட்டுமே. இதற்கு முன் தமிழில் ‘குவாட்டர் கட்டிங்’, ‘தமிழ்ப்படம்’ ஆகிய படங்களைத் தயாரித்துள்ள சசிகாந்த் தான் இப்படத்தின் முழுத் தயாரிப்பாளர். அவர் தயாரிக்கும் மூன்றாவது படம் இது. தவிர ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவும் எங்களுடன் சேர்ந்து முதலீடு செய்துள்ளார். மூன்று பேரும் இணைந்து தயாரித்துள்ள இப்படம் நிச்சயம் வெற்றி பெறும்.”
காதல் படங்களில் மட்டுமே நடித்து வரும் நீங்கள் காதலில் சொதப்புவது தொடர்பான ஒரு கதையில் நடிப்பது சரிதானா?
“சினிமா என்பது கற்பனையான ஒரு விஷயம். அதேசமயம் இதில் யதார்த்தமும் இருந்தால் மட்டுமே வெற்றி பெறும். ஒரு உண்மையைச் சொல்லட்டுமா? நானும் சின்ன வயதில் இருந்தே காதலித்துக் கொண்டு இருக்கிறேன். ஆனால் இன்று வரை காதலில் சொதப்பல் செய்ததுதான் அதிகம். இன்னும் இந்தச் சொதப்பல் மாறியபாடு இல்லை. நானும் ஒரு காதல் சொதப்பன் என்பதால் இப்படத்தில் நான் நாயகனாக நடிப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.”


முழு விவரம் 13.2.2012 தமிழ் முரசில்
MARINA
Monday, February 13th, 2012
படத்தைப் பார்த்ததும் இளம் நாயகி ஓவியாவுக்கோ அல்லது நாயகன் சிவகார்த்திகேயனுக்கோ பிறந்த நாள் என்று நினைத்துவிட வேண்டாம். இருவரும் இணைந்து நடித்த ‘மெரினா’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பாம். இதையடுத்து படத்தில் பணியாற்றிய அனைத்துக் கலைர்களுக்கும் விருந்து கொடுத்துள்ளார் இயக்குநர் பாண்டிராஜ். இதில் பங்கேற்றபோதுதான் சிவகார்த்திகேயனும், அமலாவும் கேக்கில் இருந்த மெழுகுவர்த்தியை ஊதி அணைத்தனர். இந்த விருந்து நிகழ்வில் நடிகர் விமல் உள்ளிட்ட ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

முழு விவரம் 13.2.2012 தமிழ் முரசில்
JOTHIRMAYE
Monday, February 13th, 2012
நடிக்க வந்த புதிதில் மட்டுமல்ல திரையுலகில் இருந்து விலகிய  பின்னரும் கூட பரபரப்பாகப் பேசப்பட்ட நடிகை ஜோதிர்மயி.
இப்போது திருமண வாழ்க்கை முறிந்து, விவாகரத்தும் பெற்ற நிலையில் மீண்டும் திரையுலகில் கால் பதித்துள்ளார் இவர்.
“மீண்டும் நடிக்க வந்ததில் மகிழ்ச்சியாக உள்ளேன். ஆனால் சிலர் தேவையின்றி கசந்துவிட்ட திருமண வாழ்க்கையைப் பற்றியே கேள்வி கேட்கிறார்கள். என் வாழ்க்கையில் நான் மறந்துவிட நினைக்கும் ஒரு நிகழ்ச்சியை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த சிலர் முயற்சிப்பது எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. இனி நடிப்பை பற்றி மட்டுமே பேசுவேன்” என்று சொல்லும் ஜோதிர்மயி, தற்போது ‘ஸ்தலம்’ என்ற மலை யாளப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
மறுமணம் குறித்தும் பேச மறுப்பவர், கடந்த கால திருமண வாழ்க்கை தொடர்பிலான மனக் காயங்கள் ஆறிய பின்னரே அது குறித்து யோசிக்க முடியும் என்கிறார் பரிதாபமாக.

முழு விவரம் 13.2.2012 தமிழ் முரசில்
RAMYA NAMBEESAN
Monday, February 13th, 2012
கோடம்பாக்கத்தில் கால்பதித்த வேளையில், ‘தமிழுக்கு கிடைத்த இன்னொரு குஷ்பு’ என்று இளம் நாயகி ரம்யா நம்பீசனை தலையில் தூக்கி வைத்துக் கொண்டினார்கள்.
ஆனால் அதன் பிறகு சில படங்களில் தலைகாட்டினாரே தவிர, பெயர் சொல்லும்படியான வாய்ப்புகள் ஏதும் தனக்கு அமையவில்லை என்பதில் மிகுந்த வருத்தத்தில் இருந்தார் ரம்யா. கடைசியாக ‘குள்ளநரிக் கூட்டம்’ படத்தில் நடித்தவருக்கு கோடம்பாக்கம் கசந்து போனதோ என்னவோ, சத்தமில்லாமல் மலையாளக் கரையோரம் ஒதுங்கிவிட்டார்.
ஆனால் மலையாளத்தில் இன்று பரபரப்பான நடிகை என்றால் அது ரம்யாதான் எனுமளவிற்கு நிலைமை மாறி விட்டது. கூடவே சில சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார் அம்மணி.
‘சப்ப குரிஷு’ படத்தில் இளம் நாயகன் ஃபஹட் ஃபசிலுக்கு உதட்டோடு உதடு பொருத்தி ரம்யா கொடுத்த முத்தம்தான் இன்று மோலிவுட்டின் ஹாட் செய்தி. இதுவரை எந்த மலையாளப் படத்திலும் இப்படி ரசிகர்களைச் சூடேற்றும் முத்தக்காட்சி இடம்பெற்றதே இல்லையாம்.
“ரம்யா கொடுத்த முத்தம் சூப்பர்” என்று இளம் ரசிகர்கள் கைதட்டி ஆர்ப்பரித்தாலும் கேரளாவில் உள்ள சில சமூக அமைப்புகள் இந்த முத்தக் காட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
சரி... ரம்யா என்ன சொல்கிறார்?
“பொதுவாக மலையாள நடிகைகள் தங்களை கவர்ச்சிக் கன்னி என்று அழைப்பதை விரும்புவதில்லை. எனக்கும் இது தெரியும். ஆனால் இதற்காக நானும் அவர்களைப் போல் இருந்துவிட முடியாது. எனக்கென தனி அடையாளம் வேண்டும் என்று நினைக்கிறேன். எப்படிப்பட்ட சவாலான பாத்திரத்தையும் ஏற்று நடிக்கத் தயார். அந்த தைரியத்தின் வெளிப்பாடுதான் இந்த முத்தக் காட்சி” என்கிறார் ரம்யா.

முழு விவரம் 13.2.2012 தமிழ் முரசில்
muyal
Tuesday, February 7th, 2012

ஐந்தாயிரம் புகைப்பட கலைஞர்களும், வீடியோ கலைர்களும் இணைந்து ‘பி அண்ட் வி எண்டர் டெய்ன்மென்ட்’ என்ற புதிய நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் படம் ‘முயல்’. இதில் கதாநாயகனாக முரளியும், நாயகியாக ‘பேராண்மை’ சரண்யாவும் நடிக்கிறார்கள். “துன்பத்தையே தங்கள் வாழ்க்கையில் சந்திக்காத மூன்று நண்பர்கள், கல்லூரிப் படிப்பை முடித்தபின், தொழில் தொடங்க முயற்சிக்கிறார்கள். அப்போது நடக்கும் ஒரு சம்பவம், அவர்களது வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது. இதனால் பாதிக்கப்படும் அவர்கள், இனிமேல் யாருக்கும் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை வரக்கூடாது என்று தீர்மானிக்கிறார்கள். தங்கள் சீரிய முயற்சி மூலம் மூவரும் எப்படி வாழ்க்கையில் வெற்றி அடைகிறார்கள் என்பதை காதல், நகைச்சுவை, சென்டிமென்ட், ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் காக்டெயில் ஆக பரிமாறி இருக்கிறேன். இது இளையர்களுக்கான படம்” என்கிறார் இப்படத்தின் இயக்குநர் எஸ்.பி.எஸ்.குகன்.

priyamani
Tuesday, February 7th, 2012

தலைப்பை பார்த்ததும் கிரிக்கெட் வீரர் சச்சினுக்கும் ப்ரியாமணிக்கும் இடையே ஏதோ ‘லடாய்’ என்று நினைத்துவிட வேண்டாம். இது இளம் இந்தி நடிகர் சச்சின் ஜோஷியைப் பற்றிய செய்தி.
“ஒரு இரவு விருந்தில் ப்ரியாமணியிடம் அத்துமீறி நடந்து கொண்டார் நடிகர் சச்சின். இதனால் அவர் மீது ப்ரியா கடும் கோபத்தில் இருக்கிறார்” என்று அண்மையில் வெளியான செய்தியால் போலிவுட் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது. உண்மையில் என்னதான் நடந்ததாம்?
சில தினங்களுக்கு முன்பு திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்ற நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி ஒன்று மும்பையில் நடைபெற்றது. இதில் மும்பை ஹீரோக்கள் அணியில் இடம்பெற்றிருந்தார் நடிகர் சச்சின் ஜோஷி.
போட்டி முடிந்ததும் திரையுலகத்தினருக்காக சிறப்பு விருந்து நிகழ்வு நடைபெற்றது. இதில் ப்ரியாமணியும் கலந்து கொண்டார். அப்போது ஓர் ஓரமாக தனிமையில் அமர்ந்திருந்த ப்ரியாவை அணுகிய சச்சின், காதல் வசனங்களாகப் பேசினாராம். பிறகு ஒரு கட்டத்தில் அவர் அத்துமீறி நடந்து கொண்டதாகத் தகவல்.
இந்தச் சம்பவம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் ப்ரியாமணி மேலோட்டமாக சில வரிகள் எழுதப் போக, ஊடகங்களும் இதுதான் வாய்ப்பு என்று சச்சினைப் புரட்டி எடுத்துவிட்டன. விஷயம் ஏகத்துக்கும் பரபரப்பான பிறகு இப்போது திருவாய் மலர்ந்து, “அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை” என்கிறார் ப்ரியாமணி.
“சச்சின் ஜோஷி நல்ல மனிதர், நடிகர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த விருந்து நிகழ்ச்சியில் பத்திரிகைகள் குறிப்பிடுவதுபோல் எந்த தகாத சம்பவமும் நடக்கவில்லை. சச்சினை சிலர் எனக்கு அறிமுகம் செய்து வைத்தனர். அவரது அணியில் உள்ள சிலரை எனக்கு முன்பே தெரியும். அதனால் எல்லோரும் சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தோம். ஒரு மோசமான சம்பவம் நடந்திருந்தால் அதை மறக்க முயற்சிப்பேனே தவிர, அதுகுறித்து பகிரங்கமாக எழுதமாட்டேன்” என்று புலம்புகிறார் அம்மணி.
இப்படி சச்சின் மீது திடீர் பாசம் கொண்டு பல்டி அடித்த இவரை வட இந்தியப் பத்திரிகைகள் கடுமையாக விமர்சித்து எழுதி வருகின்றன.
இதனால் சில காலம் மும்பை பக்கமே போவதில்லை என்று முடிவு செய்துள்ளாராம் ப்ரியாமணி.

madhushalini
Tuesday, February 7th, 2012

இயக்குநர் பாலாவின் ‘அவன் இவன்’ படத்தின் மூலம் அடையாளம் காணப்பட்ட இளம் நாயகி மதுஷாலினியை பிறகு எந்தப் படத்திலும் காண முடியவில்லை.
அம்மணி என்ன ஆனார்? எப்படி இருக்கிறார்? என்று விசாரித்தால், இயக்குநர் ராம்கோபால் வர்மாவின் படத்தில் நடிப்பதாக தகவல் கிடைத்தது.
திடீரென இந்திப் பக்கம் போய்விட்டீர்களே, ஏன்?
“திடீரென்று போகவில்லை. அதிர்ஷ்டம் இருந்தது. அதனால் இந்திப் பட வாய்ப்பு கிடைத்தது. உடனே அதைப் பிடித்துக் கொண்டேன். அவ்வளவுதான். மற்றபடி ராம்கோபால் வர்மாவைப் போன்ற பிரபல இயக்குநரின் படத்தில் நடிக்க யாருக்குதான் கசக்கும்” என்று சொல்லி உற்சாக சிரிப்பை உதிர்க்கிறார் மது ஷாலினி.
‘அவன் இவன்’ படத்திற்குப் பிறகு தமிழில் நல்ல வாய்ப்புகளும் கதாபாத்திரங்களும் என ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்து இருந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியதாம். சொல்லி வைத்தாற்போல் எல்லாரும் ஒரே மாதிரியான பாத்திரங்களில் நடிக்க அழைத்ததால், தேடி வந்த வாய்ப்புகளை எல்லாம் வேண்டாம் என ஒதுக்கிவிட்டராம்.
“பாலா சார் படம் எனக்கு நல்ல விசிட்டிங் கார்ட் மாதிரி. அதை வைத்துக் கொண்டு சில காட்சிகளில் மட்டும் சும்மா வந்து போகிற நாயகி வேடங்களில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. அப்படி நடிக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. இன்ஜினியரிங் படித்திருக்கிறேன். இப்போதும் கூட பெரிய நிறுவனங்களில் வேலை கிடைக்கும். ஆனால் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற முடிவிலும் லட்சியத்திலும்தான் இந்தத் துறைக்கு வந்திருக்கிறேன். அதனால் நல்ல வேடங்கள் கிடைக்கும் வரை காத்திருப்பதில் தவறில்லை.”
நடிகையாகப் போவதாக தன் குடும்பத்தாரிடம் சொன்னபோது முதலில் ரொம்ப பயந்தார்களாம். பிறகு பலவிதமாகப் பேசி தன் பெற்றோரை சம்மதிக்க வைத்ததாகச் சொல்கிறார் மது.
ராம்கோபால் பட வாய்ப்பு எப்படி கிடைத்தது?
“தமிழில் நான் அறிமுகமான படம் ‘பதினாறு’. அதைப் பார்த்துவிட்டுதான் பாலா சார் தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார். அதற்கு முன்பு ஒன்றிரண்டு தெலுங்குப் படங்களில் நடித்த அனுபவம் உண்டு. ஆனாலும் ‘அவன் இவன்’ படம்தான் எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இந்தப் படத்தைப் பார்த்த ராம்கோபால் வர்மா திடீரென ஒருநாள் தொடர்பு கொண்டு பேசினார். அவரைச் சந்தித்தபோது தன் அடுத்த படத்தின் கதையை சில வரிகளில் சொல்லி நடிக்கச் சம்மதமா? என்று கேட்டார். உடனே ஓ.கே. சொல்லிவிட்டேன். படத்தின் தலைப்பே ‘டிபார்ட்மெண்ட் ஸ்டோர்’ என்று வித்தியாசமாக உள்ளது. கதையும் அப்படிப் பட்டதுதான். அவருடைய படங்கள் பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன். அவர் இயக்கத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி.”
நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே திரையுலகில் நிறைய தோழிகளைச் சம்பாதித்துள்ளார் மதுஷாலினி. ஜனனி அய்யர், பூனம் பாஜ்வா, அமலா பால், சமீரா ரெட்டி, சமந்தா என்று இவரது நட்புப் பட்டியல் ரொம்ப நீளமாகவே இருக்கிறது.
“ஜனனியுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசுவேன். மற்ற அனைவரும் நடிப்பில் பிஸியாக இருப்பதால் எப்போதாவது வாய்ப்பு கிடைக்கும் போது நேரில் சந்தித்துக் கொள்வோம். அப்போது ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என பொழுது போவதே தெரியாது. அவ்வளவு ஜாலியாக இருக்கும்.”
“காதலிக்கும் எண்ணம் உண்டா?”
“நான் ரொம்ப சின்னப்பொண்ணுங்க. இப்போதைக்கு நடிப்பு மட்டுமே முக்கியம். வேறு எதைப் பற்றியும் யோசிப்பதாக இல்லை” என்று நழுவுகிறார் மதுஷாலினி.

Syndicate content