Friday, February 17th, 2012
“இப்போதெல்லாம் பேட்டி என்றாலே முகத்தை திருப்பிக் கொள்கிறார். சமீப காலமாக பத்திரிகையாளர்கள் யாரையும் சந்திப்பதில்லை. கால்ஷீட்டில் கெடுபிடி காட்டுபவர், சம்பள விஷயத்தில் மட்டும் கறாராக உள்ளார்” என்று அஞ்சலியைப் பற்றி அவ்வப்போது எக்குத்தப்பான தகவல்கள் வெளியானபடி இருக்கிறது.
ஆனால் அவரோ, தனக்கும் இச்செய்திகளுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்கிற ரீதியில் கூலாக உள்ளார்.
“என்னைப் பொறுத்தவரையில் வாங்கும் சம்பளத்திற்கு ஏற்ப உண்மையாக உழைக்க வேண்டும். இந்த விஷயத்தில் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறேன். என்னைப் பற்றி நாலு பேர் நாலு விதமாகப் பேசலாம். ஆனால் அவற்றுக்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருந்தால் சினிமாவில் காலம்தள்ள முடியாது. பிழைப்பு கெட்டுவிடும். என்னை ஒப்பந்தம் செய்த இயக்குநரும், தயாரிப்பாளரும் என்னைப் பற்றி குற்றம் குறைகள் சொன்னால் மட்டுமே கவலைப்படுவேன். மற்றபடி நடிகைகளைப் பற்றி ஏதாவது சொன்னால் அது சர்ச்சையை ஏற்படுத்தும், அதன் மூலம் விளம்பரம் தேடிக் கொள்ளலாம் என்று நினைப்பவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது” என்று திட்டவட்டமாகப் பேசுகிறார் அஞ்சலி.
அது போகட்டும். தன்னைப் பற்றி வெளிவரும் கிசுகிசுக்களுக்கு நேர்மாறாக கடந்த சில நாட்களாகப் பொது நிகழ்ச்சிகளிலும் அஞ்சலி கலந்து கொள்கிறார். இந்த வகையில் அண்மையில் ஈரோட்டில் நடைபெற்ற பெண்களுக்கான கபடிப் போட்டி நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ளார்.
“கபடி தமிழர்களுக்கான வீர விளையாட்டுகளில் ஒன்று என்று சொல்லலாம். நல்ல திடகாத்திரமான உடல்வாகும், வலிமையும் உள்ளவர்களால்தான் கபடி ஆட முடியும். என் வயதுள்ள இளம் பெண்கள் இந்த விளையாட்டில் ஈடுபட்டிருப்பது உண்மையிலேயே பாராட்ட வேண்டிய விஷயம்” என்று போட்டியில் பங்கேற்ற இளம் பெண்களுக்குப் பாராட்டு தெரிவித்து உற்சாகப்படுத்தினார் அஞ்சலி.
அப்பெண்களோ, விளையாட்டைப் பற்றி பேசாமல், அஞ்சலியின் அழகு ரகசியம் குறித்து விசாரித்தனர்.
“அஞ்சலி அக்கா... ரொம்ப கலரா இருக்கீங்க. உங்களை மாதிரி நாங்களும் ஆகணும்னா என்ன செய்யணும்?” என்று கேட்டார் ஒரு வீராங்கனை.
“நான் உங்களைப் போல் வெயிலில் ஓடியாடி விளையாடுவதில்லை. அதனால் வெளுப்பாக இருக்கிறேன். ஏசியில் குளிரில் நிம்மதியாக இருக்கும் என்னைப் போன்ற நடிகைகள், நான்கு நாட்கள் உங்களைப் போல் வெயிலில் கபடி ஆடினால் உடனே கருப்பாகிவிடுவோம்” என்று சொல்ல வீராங்கனைகள் மத்தியில் சிரிப்பொலி.
போட்டியில் பங்கேற்ற ஒரு வீராங்கனைக்கு அன்று பிறந்த நாள் என்று யாரோ காதில் கிசுகிசுக்க, உடனே சத்தமில்லாமல் ஒரு கேக் வாங்கி வரச் செய்து, அதை அப்பெண்ணுக்குப் பரிசாக அளித்து பரவசப்படுத்தினார் அஞ்சலி. பிறகு எல்லோருமாகச் சேர்ந்து பிறந்த நாள் வாழ்த்துப் பாடலைப் பாட, அந்தக் கிராமத்து இளம் வீராங்கனையின் முகத்தில் அப்படியொரு பூரிப்பு.
போட்டி முடிந்து வெற்றியாளர்களும் தேர்வான பின்னர் இளம் பெண்களுடன் கைகுலுக்கிவிட்டு விடை பெற்றார் அஞ்சலி. அப்போது ஒரு பெண், “அக்கா, இத்தனை நேரம் எங்ககூட இருந்தீங்க. ஒரு ஆட்டத்தில் கூட பங்கெடுக்கலை. எங்களுக்காக ஒருமுறை கபடி ஆடுங்களேன்” என்று கேட்க, “ஐய்யய்யோ... ஜாலிக்காக விளையாடி எங்காவது அடிபட்டால் படப்பிடிப்பு ரத்தாகிவிடும். அப்புறம் என் கதி அதோ கதிதான்” என்று சொல்லிவிட்டு சிரித்தபடியே கிளம்பினார் அழகுப் பெண் அஞ்சலி.