வேலூர்: சொத்துக்குவிப்பு புகார் தொடர்பாக ஊராட்சி மன்றச் செயலாளர், அவருடைய மனைவி மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் திருவலம் அடுத்துள்ள மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவர், பாலேகுப்பம் கிராம ஊராட்சி செயலாளராக உள்ளார். இவரது மனைவி கலையரசி.
இந்நிலையில், பிரபு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின்பேரில் வேலூர் லஞ்சஒழிப்புத் துறை விசாரணை மேற்கொண்டது. அதில், 2011 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2017 மே 31ஆம்தேதி வரையிலான காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.20.44 லட்சம் மதிப்பிலான சொத்துகளைச் சேர்த்தது தெரியவந்தது.
இதையடுத்து திருவலம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பிரபு வீட்டில் புதன்கிழமை காலை லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சுமார் நான்கு மணி நேரம் நடைபெற்ற சோதனையில், பிரபுவின் வீட்டில் இருந்து வங்கிக் கணக்குபுத்தகங்கள், பல்வேறு சொத்துகள் தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். விசாரணைக்குப் பிறகு அவரிடம் உள்ள சொத்துகள் குறித்த விவரங்கள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.