எதிர்வரும் சாங்கி விமான நிலைய ஐந்தாம் முனையத்துக்கான முதல் பெரிய கட்டுமான ஒப்பந்தப்புள்ளி சாங்கி விமான நிலையக் குழுமத்தால் மார்ச் மாதம் வெளியிடப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார்.
கட்டுமான ஒப்பந்தப்புள்ளி கட்டடத்தின் துணைக் கட்டமைப்பை உள்ளடக்கும் என்று வியாழக்கிழமை (ஏப்ரல் 25) சாங்கி ஏர்லைன் விருது நிகழ்ச்சியில் திரு சீ கூறினார். அந்தத் துணைக் கட்டமைப்பில் புதிய முனையத்துக்கான அடித்தள, நிலத்தடிப் பணிகள் இடம்பெறும்.
“ஐந்தாம் முனையத்தின் இதர அம்சங்களிலும் நாங்கள் பணியைத் தொடங்கியுள்ளோம். இரண்டாம் முனையத்தையும் ஐந்தாம் முனையத்தையும் இணைக்கும் நிலத்தடிப் பாதை (டி2சி) அவற்றில் அடங்கும்.
“ஐந்தாம் முனையத்துக்கும் சாங்கியில் உள்ள தற்போதைய முனையங்களுக்கும் இடையில் தடையற்ற இணைப்பை உறுதிசெய்ய பயணப்பெட்டி, முனையங்களுக்கு இடையிலான இணைப்புகளை டி2சி வழங்கும்,” என்று திரு சீ சொன்னார்.
2030களின் நடுப்பகுதியில் ஐந்தாம் முனையம் செயல்பாட்டுக்கு வரும்போது, அந்த முனையத்தால் ஆண்டுக்கு 50 மில்லியன் பயணிகள் வரை கையாள முடியும். ஒன்றாம், மூன்றாம் முனையங்களின் தற்போதைய ஆற்றலை இணைத்தாலும், அதைவிட ஐந்தாம் முனையத்தின் ஆற்றல் பெரியது.
1,080 ஹெக்டர் நிலப்பரப்பிலான புதிய சாங்கி ஈஸ்ட் மேம்பாட்டிற்குள் ஐந்தாம் முனையம் அமையும். சாங்கி விமான நிலையத்தின் ஆகப்பெரிய விரிவாக்கத் திட்டமான சாங்கி ஈஸ்ட், மரினா பேயின் அளவைவிட மும்மடங்கு பெரியது.