புதுடெல்லி அனைத்துலக விமான நிலையத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானியாக ஆள்மாறாட்டாம் செய்த ஆடவர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் ஏப்ரல் 25ஆம் தேதியன்று நிகழ்ந்தது.
விமானிச் சீருடை அணிந்து 24 வயது சங்கீத் சிங், விமான நிலையத்தில் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர் கடற்படை விமானிச் சீருடை அணிந்திருந்ததாகவும் போலி சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அடையாள அட்டையைத் தமது கழுத்தில் தொங்கவிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
அவரை அதிகாரிகள் அணுகி விசாரித்தபோது அவர் வைத்திருந்த அடையாள அட்டை போலியானது என்பது வெளிச்சத்துக்கு வந்தது.
அந்த அடையாள அட்டையை சிங் ‘ பிஸ்னஸ் கார்டு மேக்கர்’ எனும் செயலியைப் பயன்படுத்தி தாமாகவே செய்ததாகவும் விமானிச் சீருடையை டெல்லியில் உள்ள ஒரு கடையில் வாங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தாம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானியாகப் பணிபுரிவதாகத் தமது குடும்பத்தினரிடம் சிங் பொய் சொல்லியிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மும்பையில் உள்ள கல்விக் கழகம் ஒன்றில் விமானப் போக்குவரத்து விருந்தோம்பலுக்கான ஓராண்டு பயிற்சியை சிங் பூர்த்தி செய்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சிங் மீது மோசடி, போலி ஆவணம் தயாரித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
விசாரணை தொடர்கிறது.
இதற்கிடையே, சிங் பிடிபட்டதில் இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வோங் தமது எக்ஸ் தளம் வாயிலாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.