செம்பவாங்கில் உள்ள வாடகை வீட்டில் 2021 செப்டம்பரில் மாது ஒருவர் தீ மூட்டியதைத் தொடர்ந்து, அவருடைய முன்னாள் காதலருக்கு உடலில் 15 விழுக்காடு அளவுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன.
அப்போது 32 வயதாக இருந்த திரு பிரேம்ராஜ் ரகுவிற்கு முதுகிலும் இடது பிட்டத்திலும் தீக்காயங்கள் ஏற்பட்டன. மலேசியரான அவர் இச்சம்பவத்தைத் தொடர்ந்து மனச்சோர்வுக்கு ஆளானதாகவும் அவரது கைகளில் நிரந்தர தழும்பு இருப்பதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
வழக்கு விசாரணைக்குப் பிறகு மார்ச் மாதம், டல்ஜீத் கோர் தரம் சாண்ட், 35, மீது தீ மூட்டுவதற்கு கண்மூடித்தனமாக செயல்பட்ட குற்றம் நிரூபணமானதாக மாவட்ட நீதிபதி கோவ் கெங் சியோங் தீர்ப்பளித்தார்.
சிங்கப்பூரரான அவருக்கு புதன்கிழமை (ஏப்ரல் 24) தண்டனை விதிக்கப்படவிருந்தது. ஆனால், அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
கர்ப்பமாக இருக்கும் தம்முடைய கட்சிக்காரர், கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் இருந்ததாக தம்மை தொலைபேசியில் அழைத்துக் கூறியதாக நீதிபதி கோவ்விடம் தற்காப்பு வழக்கறிஞர் அசோக மார்க்கண்டு கூறினார்.
கோரின் வயிற்றில் இருக்கும் குழந்தையுடைய தந்தையின் அடையாளம் நீதிமன்றத்தில் குறிப்பிடப்படவில்லை. பிந்தைய ஒரு தேதியில் கோருக்கு தண்டனை விதிக்கப்படும்.