தர்மசாலா: நியூசிலாந்து அணிக்கெதிரான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அதிரடியாகத் தொடங்கி, மளமளவென ஓட்டம் குவித்து வருகிறது.
இந்தியாவில் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன.
தர்மசாலாவில் 28ஆம் தேதி சனிக்கிழமை இடம்பெற்றுவரும் முக்கியமான போட்டியில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் பொருதுகின்றன.
கேன் வில்லியம்சன் இல்லாத நிலையில் மீண்டும் டாம் லாதமே நியூசிலாந்து அணித்தலைவராகத் தொடர்கிறார். பூவா தலையாவில் வென்ற லாதம், முதலில் ஆஸ்திரேலிய அணியைப் பந்தடிக்க அழைத்தார்.
அதனையடுத்து, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னரும் டிராவிஸ் ஹெட்டும் களமிறங்கினர்.
இருவரும் தொடக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடி ஓட்டம் குவித்தனர். இதனால், ஆஸ்திரேலிய அணி 8.5 ஓவர்களில் 100 ஓட்டங்களை எட்டியது.
முதல் பத்து ஓவர்களில் 12 பவுண்டரிகளையும் பத்து சிக்சர்களையும் அவ்வணி அடித்தது.
இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 175 ஓட்டங்களைச் சேர்த்தனர். கிளென் ஃபிலிப்ஸ் வீசிய இன்னிங்சின் 20வது ஓவரில் முதல் விக்கெட் விழுந்தது. 65 பந்துகளில் 81 ஓட்டங்களை எடுத்த நிலையில் வார்னர் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சிறப்பாகப் பந்தடித்த ஹெட் 59 பந்துகளில் சதத்தை எட்டினார். 23 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 200 ஓட்டங்களை எடுத்திருந்தது.