மொடர்னா சிங்கப்பூர், ‘யூகவ்’ அமைப்புடன் இணைந்து வெளியிட்ட புதிய ஆய்வின் முடிவில், சிங்கப்பூரில் உள்ள மூத்தோரில் 40 விழுக்காட்டினர், மேம்படுத்தப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதற்கான எண்ணம் ஏதுமில்லை என்று கூறியதாகத் தெரியவந்துள்ளது.
இவ்வாண்டு மார்ச் 28ஆம் தேதிக்கும் ஏப்ரல் 5க்கும் இடையில் இணையம்வழி நடத்தப்பட்ட ஆய்வில், சிங்கப்பூரில் உள்ள 1,300 பேர் பங்கேற்றனர்.
ஏப்ரல் 24 முதல் 30ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்பட்ட உலகத் தடுப்பாற்றல் வாரத்தை முன்னிட்டு அந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன.
கடும் உடல்நலக்குறைவு, மருத்துவமனைச் சேர்க்கை, கொவிட்-19 தொற்றினால் மரணம் ஏற்படும் சாத்தியம் போன்ற அபாயங்களை எதிர்நோக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 43% விழுக்காட்டிற்கும் அதிகமானோர், நோய்த்தொற்றைக் குறைந்த அல்லது ஆகக் குறைந்த ஆபத்தை உண்டாக்கும் ஒன்றாகக் கருதுவது தெரியவந்துள்ளது.
சென்ற ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயது நிரம்பியோரில் 33.4 விழுக்காட்டினர் மட்டுமே அவ்வாறு கூறியிருந்தனர்.
இந்த ஆய்வில் பங்கேற்றோரிடம் ஆரோக்கியமாக வாழ்தல், கொவிட்-19 உள்ளிட்ட நோய்த்தடுப்பூசி மருந்துகள் குறித்த அவர்களின் தற்போதைய மனப்பாங்கு, அறிவுத்திறன், நடத்தைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய தேசிய மாதிரி அளவீடு பெறப்பட்டது.
புதுப்பிக்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகள் குறித்து சிங்கப்பூரர்கள் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருப்பதாக ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன.
ஆய்வில் பங்கேற்ற 49 விழுக்காட்டினர் தடுப்பூசி அவசியம் என்று கூறிய நிலையில், 51 விழுக்காட்டினர் அதற்கு நேர்மாறான கருத்தைத் தெரிவித்துள்ளனர்.
மேலும், வருங்காலத்தில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தங்களுக்குத் திட்டம் இல்லை என்று பதிலளித்த சிங்கப்பூர்க் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகவும் ஆய்வின் முடிவுகள் குறிப்பிடுகின்றன.
கொவிட்-19 பற்றிய எதார்த்தமான நிலவரத்திற்கும் நோய் குறித்த பொதுமக்களின் கண்ணோட்டத்திற்கும் இடையே தொடர்பற்ற நிலையே இன்னும் தென்படுவதாக மொடர்னா சிங்கப்பூர் நிறுவனத்தின் பொது மேலாளர் ஈவ்லின் பாங் தெரிவித்தார்.