தர்மசாலா: இந்தியாவில் நடைபெற்றுவரும் ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் சனிக்கிழமை பரம வைரிகளான ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் மோதுகின்றன.
இவ்வாண்டுப் போட்டியில் அபாரமாக விளையாடி வந்த நியூசிலாந்து சென்ற ஆட்டத்தில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது. சுமார் 20 ஆண்டுகளில் முதன்முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் நியூசிலாந்தை வென்றது இந்தியா.
அந்த ஆட்டம் வரை இப்போட்டியில் அனைத்து ஆட்டங்களையும் வென்ற அணிகள் என்ற பெருமை நியூசிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இருந்தது. இப்போது இந்தியா மட்டும்தான் போட்டியில் தோல்வியடையாத அணியாக இருக்கிறது.
தடுமாறியபடி போட்டியைத் தொடங்கிய ஆஸ்திரேலியா நன்கு மீண்டுவந்து புத்துயிர் பெற்றுள்ளது. இதுவரை ஆடிய ஐந்து ஆட்டங்களில் இரண்டில் தோல்விகண்டு மூன்றில் வென்றுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான ஆட்டம் தரம்சாலாவில் அரங்கேறவுள்ளது.
இந்த உலகக் கிண்ணப் போட்டியில் ஆஸ்திரேலியா இதுவரை அந்நகரில் ஆடியதில்லை. நியூசிலாந்து அங்கு அடிக்கடி விளையாடியிருக்கிறது. இந்த அம்சம் நியூசிலாந்துக்கு சாதகமாக அமையலாம். அதேவேளை இந்தியாவிடம் கண்ட தோல்வி அதன் தன்னம்பிக்கையைப் பாதித்தால் அது ஆஸ்திரேலியா வெல்வதற்கு வழிவகுக்கலாம்.
வியாழக்கிழமை நடைபெற்ற மற்றோர் முதல் சுற்று ஆட்டத்தில் உலகக் கிண்ண நடப்பு வெற்றியாளரான இங்கிலாந்து, இலங்கையிடம் தோல்வியடைந்தது. அதனையடுத்து அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறாமல் போகக்கூடிய அபாயத்தை இங்கிலாந்து எதிர்நோக்குகிறது.
முதலில் பந்தடித்த இங்கிலாந்து, 33.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. 157 ஓட்டங்கள், இலங்கையின் வெற்றி இலக்காக இருந்தது.
25.4 ஓவர்களில் இலக்கை அடைந்தது இலங்கை. இரண்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ஓட்டங்களை எடுத்து இலங்கை எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.