சென்னை: உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் 26வது ஆட்டத்தில் பாகிஸ்தானும் தென்னாப்பிரிக்காவும் வெள்ளிக்கிழமை மோதுகின்றன.
ஆட்டம் மாலை 4.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் விளையாட்டரங்கில் நடக்கிறது.
ஆப்கானிஸ்தானுடன் தோற்ற விரக்தியியில் உள்ளது பாகிஸ்தான்.
இதுவரை ஐந்து ஆட்டங்களில் விளையாடியுள்ள பாகிஸ்தான் மூன்றில் தோல்வியும் இரண்டில் வெற்றியும் பெற்றுள்ளது.
இந்த ஆட்டத்தில் வென்றால் தான் பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு சற்றுகூடும், தோல்வி ஏற்பட்டால் அரையிறுதிக்கு செல்வது மிகவும் கடினமாகக் கூடும்.
அதனால் பாகிஸ்தான் வீரர்கள் தங்களது முழுபலத்தையும் காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
அணித்தலைவர் பாபர் ஆசமும் அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு இட்டுச்செல்ல வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.
மறுமுனையில் தென்னாப்பிரிக்கா அசத்தலாக விளையாடி வருகிறது.
அதன் பந்தடிப்பாளர்கள் தொடர்ந்து அதிக அளவில் ஓட்டங்கள் குவித்து நம்பிக்கைத் தருகின்றனர்.
நெதர்லாந்திடம் தடுமாறிய தென்னாப்பிரிக்கா அதன் பின்னர் சுதாரித்துக்கொண்டு சிறப்பாக விளையாடியுள்ளது.
சென்னை ஆடுகளத்தில் ஓட்டங்கள் குவிப்பது கடினம் என்பதால் தென்னாப்பிரிக்கா பந்தடிப்பாளர்களுக்கு இது சவாலான ஆட்டமாக இருக்கக்கூடும் என்று கிரிக்கெட் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
இதுவரை ஐந்து ஆட்டங்களில் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்கா நான்கில் வெற்றிபெற்றுள்ளது.