சென்னை: பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமை மாலை நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி முதலில் பந்தடித்தது.
46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் 270 ஓட்டங்கள் எடுத்தது.
அதிரடியாக இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்கா 33வது ஓவரில் 4 விக்கெட்டுகள் மட்டும் இழந்து 206 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இனி எளிதில் வெற்றி கிடைத்துவிடும் என்று நினைத்தபோது பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவுக்கு நெருக்கடி தந்தனர்.
இறுதியில் பொறுமையாக ஆடிய ஷம்சி, கேசவ் மகாராஜ் ஜோடி தென்னாப்பிரிக்காவை வெற்றிபெறச் செய்தது.
இந்த தோல்வியால் பாகிஸ்தான் அணியின் அரையிறுதிக் கனவு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக கிரிக்கெட் கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.