லாகூர்: உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி மோசமாக ஆடி வருவதாக புகார் எழுந்துள்ளது. முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோற்றது.
கடந்த திங்கட்கிழமை சென்னையில் ஆப்கானிஸ்தானிடம் மோதிய ஆட்டத்தில் முதல் முறையாக தோல்வியைத் தழுவியது.
இந்தத் தோல்வியால் எஞ்சிய 4 ஆட்டங்களில் வெற்றி பெறவேண்டிய கட்டாயம் பாகிஸ்தானுக்கு உள்ளது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 282 ஓட்டங்கள் குவித்தும் தோற்றது அந்த அணிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. மோசமான பந்து வீச்சு, பீல்டிங் இதற்குக் காரணமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் அணியிடம் அடைந்த தோல்விக்கு முன்னதாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடம் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்து இருந்தது.
மொத்தம் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி, அனைத்துப் போட்டிகளிலும் பீல்டிங்கில் கோட்டைவிட்டது. இதை அடுத்து பாகிஸ்தான் அணி வீரர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடற்தகுதித் தேர்வு செய்யவில்லை என்ற உண்மை வெளியாகி இருந்தது.
இந்நிலையில், இந்த தோல்வியால் அணித்தலைவர் பதவியில் இருந்து பாபர் அசாமை நீக்க வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பாக். வீரர்களுக்கு உடற்தகுதியில்லை
வாசிம் அக்ரம்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பாகிஸ்தான் வீரர்கள் பீல்டிங் செய்த விதம் மிகவும் மோசமாக இருந்தது. 282 ஓட்டங்கள் என்பது நல்ல ஸ்கோராகும். பந்துவீச்சு மிகவும் சராசரியாகவே இருந்தது.
ஆனால், கடந்த ஓர் ஆண்டாகவே பாகிஸ்தான் வீரர்களுக்கு உடல் தகுதித் தேர்வு மேற்கொள்ளப்படவில்லை. பாகிஸ்தான் வீரர்கள் பலர் உடற்தகுதியுடன் இல்லை. நவீன கிரிக்கெட் உலகில் நீங்கள் முழு உடல் தகுதியுடன் இல்லையென்றால் கேட்ச் பிடிப்பது எப்படி? பவுண்டரியை எப்படி தடுக்க முடியும் என்று கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் அவர், பாகிஸ்தான் வீரர்கள் அதிக அளவில் ஆட்டுக் கறி உண்பதாகத் தகவல் ஒன்றையும் கூறி பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.
பாபர் அசாமுக்குப் பதில் ஷகின் ஷா அப்ரி
முன்னாள் பாகிஸ்தான் வீரர் அக்யூப் ஜாவித்: பாபர் அசாமை கேப்டன் பதவியில் இருந்து நீக்கவேண்டும். அவருக்கு பதிலாக ஷகின் ஷா அப்ரிடியை டி 20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவராக நியமிக்க வேண்டும். அணியின் எதிர்காலத்துக்கு இது நல்லது. பாபர் அசாம் தன்னை ஒரு சிறந்த அணித்தலைவராக நிரூபிக்க தவறிவிட்டார்.
புதிய அணித்தலைவர் போல் விளையாடினார்
மிஸ்பா-உல்-ஹக்: பாபர் அசாம் அணியை வழிநடத்துவது மிகவும் சாதாரணமாக இருந்தது. அவரின் பீல்டிங் வியூகம், பந்து வீச்சாளர்களுக்கு அவர் கொடுக்கும் விதம் ஏதோ புதிதாக அணித்தலைவர் பதவியில் இருப்பவர் மேற்கொள்வது போல் இருந்தது. ஹாரிஸ் ரவூப்புக்கு பவர் பிளேயில் பந்துவீச கொடுத்ததால் ஒரு சில பவுண்டரிகளால் அவரது நம்பிக்கை உடைந்துவிட்டது. இதுவும் தவறான முடிவாகும் என்று கூறியுள்ளார்.
ரமீஸ் ராஜா, ரஷீத் லத்தீப், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், சோயிப் அக்தர், மொயின்கான் உள்ளிட்ட முன்னாள் வீரர்களும் பாகிஸ்தான் அணியின் மோசமான ஆட்டத்தையும், அணித்தலைவர் பாபர் அசாமையும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.