இந்தோனீசியாவுக்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தலைநகர் ஜகார்த்தாவில் புதிய அதிபராக பொறுப்பு ஏற்கவிருக்கும் பிரபோவோ சுபியாந்தோவை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
ஏப்ரல் 23ஆம் தேதி மத்திய ஜாவாவில் உள்ள தற்காப்பு அமைச்சில் இருவரும் சந்தித்தனர்.
அதிபர் தர்மன் சண்முகரத்னம், பிரதமர் லீ சியன் லூங், துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் சார்பில் பிரபோவோவுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்ததாக அதே நாளில் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியிருந்தார்.
திரு பிராபோவோ தற்போது தற்காப்பு அமைச்சராக உள்ளார். பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெற்ற இந்தோனீசிய அதிபர் தேர்தலில் அவர் வெற்றி பெற்றார். மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ வாக்களிப்பு விவரங்களில் அவருக்கு 58 விழுக்காட்டுக்கு மேல் வாக்குகள் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
“பிரபோவோ சிங்கப்பூரின் உறுதியான நண்பர், அவரை மீண்டும் சந்திப்பது கௌரவமானது,” என்று டாக்டர் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
இந்தோனீசிய மக்களின் நல்வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் அவர் அசைக்க முடியாத அர்ப்பணிப்புமிக்க தேசபக்தராகத் திகழ்ந்தவர். பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கு இடையே நட்புணர்வு, புரிந்துணர்வு, ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் அவர் எண்ணற்ற வகையில் பங்காற்றியுள்ளார் என்றும் அவர் கூறினார்.
இரு தலைவர்கள் சந்திப்பின்போது தென்கிழக்கு ஆசியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அறியப்படுகிறது. மேலும் இரு தரப்பு உறவை இருவரும் மறுவுறுதிப்படுத்தினர்.
வலுவான தற்காப்பு ஒத்துழைப்பு, கடல்துறை பாதுகாப்பை உறுதி செய்தல், ராணுவ ஆற்றலை பலப்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்களில் இரு நாடுகளும் எடுத்துள்ள முயற்சிகளுக்கு திரு பிரபோவோ மகிழ்ச்சி தெரிவித்ததாக ஏப்ரல் 23ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் இந்தோனீசிய தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.