அங் மோ கியோ அவென்யூ 1ல் நிகழ்ந்த மோசமான விபத்தில் 21 வயது இளையர் ஒருவர் கொல்லப்பட்டார்.
ஜனவரி 17ஆம் தேதி அங் மோ கியோ ஸ்திரீட் 22, அங் மோ கியோ அவென்யூ 1 சந்திப்பில் மாலை 6.15 மணியளவில் விபத்து நிகழ்ந்தது.
சாலையின் நடுவே மோட்டார்சைக்கிள் ஓட்டி அசைவின்றி கிடந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியதாக சீன நாளிதழ் ஷின் மின் டெய்லி தெரிவித்தது.
காயம் அடைந்த மோட்டார்சைக்கிள் ஓட்டிக்கு சிலர் உதவி செய்ததாகவும் மற்றொருவர் போக்குவரத்துக்கு உதவியதாகவும் 3வது நபர் உதவிக்கு கைப்பேசியில் அழைப்பு விடுத்ததாகவும் அவர் சொன்னார்.
லாரி ஓட்டுநர், 29, அதிர்ச்சியுடன் சாலையோரத்தில் அமர்ந்திருந்ததாக ஷின் மின் குறிப்பிட்டது.
சம்பவத்தின்போது தான் வலதுபக்கம் திரும்பத் தயாரானதாக அவர் கூறினார்.
“திடீரென பெரும் சத்தம் கேட்டது. லாரி அதிர்ந்தது,” என்று லாரி ஓட்டுநர் சொன்னார்.
வேலைக்குப் பிறகு ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக லாரி சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியது.
விபத்துக்குப் பிறகு உடனே லாரியிலிருந்து இறங்கி மோட்டார்சைக்கிள் ஓட்டியை சோதனையிட்டதாகவும் சம்பவம் குறித்து தனது மேலதிகாரிக்கு தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.