புக்கிட் தீமா விரைவுச்சாலையில் புதன்கிழமை (ஜனவரி 17) காலை நிகழ்ந்த விபத்தில் 27 வயது மோட்டார்சைக்கிளோட்டி மாண்டுபோனார்.
தீவு விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் புக்கிட் தீமா விரைவுச்சாலையில், டெய்ரி ஃபார்ம் வெளிவழிக்கு அருகே காலை 8.10 மணியளவில் அவ்விபத்து நிகழ்ந்தது.
ஒரு காரும் இரு மோட்டார்சைக்கிள்களும் தொடர்புடைய அவ்விபத்தில், மோட்டார்சைக்கிளோட்டிகள் இருவரும் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
அப்போது, அவர்களில் 29 வயது ஆடவர் சுயநினைவுடனும் 27 வயது ஆடவர் சுயநினைவின்றியும் இருந்ததாகக் கூறப்பட்டது.
மருத்துவமனையில் 27 வயது ஆடவர் இறந்துவிட்டார்.
இதுதொடர்பான காணொளியை எஸ்ஜி ரோடு விஜிலண்ட் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
முன்னால் சென்ற சிவப்பு நிற கார் திடீரென நிறுத்தப்பட, பின்னால் வந்த மோட்டார்சைக்கிள் அதன்மீது மோதியதாகக் கூறப்படுகிறது.
இதனால், அந்த மோட்டார்சைக்கிளோட்டி தம் மோட்டார்சைக்கிளுடன் பக்கவாட்டில் விழுந்ததும் அவ்வழியாக வந்த இன்னொரு மோட்டார்சைக்கிள் அவர்மீது மோதியதும் காணொளியில் தெரிந்தது.
அவர்மீது மோதிய மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்தவர் தரையில் விழுந்து கிடந்ததையும் அவ்வண்டியின் பல பாகங்கள் விரைவுச்சாலையில் சிதறிக் கிடந்ததையும் காணொளி காட்டியது.