இதயக் கோளாறோடு கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் டிசம்பர் 8ஆம்தேதி பிறந்த லியோன் எனப் பெயரிடப்பட்ட குழந்தையின் மருத்துவச் செலவுகளுக்காக அக்குழந்தையின் பெற்றோர் நிதி திரட்டுகின்றனர்.
‘பல்மனேரி அட்ரேசியா’ எனும் இதய நோயோடு பிறந்த லியோனுக்குப் பிறந்த மூன்று வாரங்களில் இரண்டு முறை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு, லியோனுக்கு இருமுறை பக்கவாதம் ஏற்பட்டது என்றும் இதனால் அக்குழந்தையின் கண்ணும் உடலின் வலது பக்கமும் பாதிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டது.
லியோன் இன்னும் கேகே மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறான் எனவும் ஒரு நாளைக்கு இருமுறை ரத்தத்தை மெலிவூட்டுவதற்கான ஊசி அவனுக்குச் செலுத்தப்பட்டுவருவதாகவும் குறிப்பிடப்பட்டது.
இந்த மருத்துவ நடைமுறை லியோனுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்குத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தன் குழந்தையைக் தங்கள் கைகளில் தாங்க வேண்டும் என்பதே லியோனின் பெற்றோரான திரு ஜேமி கோயிட், திருவாட்டி பெல்லா லுவாங் ஆகிய இருவரின் விருப்பமாக உள்ளது.
“ஒவ்வொரு நாளும் அவனைக் காணும்போது எனது இதயம் வலிக்கிறது. என் குழந்தை கஷ்டப்படுவதைப் பார்த்தும் அவனுக்கு எந்தவோர் உதவியும் செய்ய முடியாமல் இருப்பதை எண்ணி ஒரு பெற்றோராக என் இதயம் வேதனை அடைகிறது,” என லியோனின் தந்தை மிகுந்த மனவேதனையோடு கூறினார்.
இதற்கிடையில், லியோனின் மருத்துவச் செலவுகளுக்காக $70,000 திரட்டும் நோக்கத்துடன் குடும்பம் Give.asia வில் நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். லியோனின் மருத்துவச் செலவுக்கு உதவ விரும்புவோர் give.asia/campaign/big-heart-for-baby-leon எனும் இணைய இணைப்பை அணுகலாம்.