குறைந்த ஊதியம் ஈட்டும் தன் உறுப்பினர்களுக்காகவும் அவர்களுடைய குடும்பத்தினருக்காகவும் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் அதன் ‘என்டியுசி-யு கேர்’ நிதித் திட்டத்தின்வழி இவ்வாண்டு மொத்தம் $7.25 மில்லியன் திரட்டியுள்ளது.
பல்வேறு உதவித் திட்டங்களால் 2023ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 10,000 தொழிற்சங்க உறுப்பினர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பலனடைந்துள்ளனர்.
உறுப்பினர்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்கான செலவைக் குறைப்பதை இந்தத் திட்டங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன.
குறிப்பாக, உறுப்பினர்களின் பள்ளி செல்லும் குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்திச் செய்வதே இந்தத் திட்டங்களின் முக்கிய நோக்கமாகும்.
அனைத்துலக நிதி நெருக்கடியால் ஏற்படும் பொருளியல் வீழ்ச்சியில் பாதிக்கப்பட்ட தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு உதவும் வகையில் ‘யு கேர் ஃபண்ட்’ 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
“தொடர்ச்சியான பொருளியல் நிச்சயமற்றத்தன்மை, வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு ஆகியவற்றால் குறைந்த ஊதியம் ஈட்டும் தொழிற்சங்க உறுப்பினர்கள் பாதிக்கப்படும் நிலையில், அவர்களுக்கு இந்த நிதி தொடர்ந்து உதவுகிறது,” எனத் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் புதன்கிழமை தெரிவித்தது.
இதற்கிடையே, நீண்டகால ஆதரவாளர்களுக்கும் புதிய நன்கொடையாளர்களுக்கும் என்டியுசியின் பராமரிப்புப் பிரிவு இயக்குநர் மெல்வின் யோங் நன்றி தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 100 நன்கொடையாளர்கள் இந்தத் திட்டத்திற்கு நிதி அளித்தனர். குறிப்பாக, சிங்கப்பூர் தொழிலாளர் அறநிறுவனம், என்டியுசி சமூகநல நிறுவனங்கள் ஆகியவை $4.2 மில்லியனை நன்கொடையாக என்டியுசிக்கு வழங்கின.
என்டியுசியுடன் இணைந்து பணியாற்றும் தொழிற்சங்கங்களும் கழகங்களும் கிட்டத்தட்ட $900,000ஐ நன்கொடையாக வழங்கின.