தேசிய நூலக வாரியத்தின் ஏற்பாட்டில், ஞாயிறு ஜனவரி 7ஆம் தேதி மாலை 2 முதல் 3.30 மணி வரை ‘மானுட அறிவை நம்புதல்’ எனும் தலைப்பில் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் இணையம் வழியாக உரையாற்றினார்.
திரு ஜெயமோகனின் எழுத்திற்கும் கருத்துகளுக்கும் ரசிகர்களான கிட்டத்தட்ட 90 பேர் அதைக் கேட்க இணைந்திருந்தனர்.
அவரது உரையையும் கேள்வி-பதில் அங்கத்தையும் வழிநடத்தினார் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத் தலைவர் அருண் மகிழ்நன்.
“திரு ஜெயமோகன் தம் எழுத்திற்கு அப்பால் எழுத்தாளர், வாசகர் இருவகையினரையும் உள்ளடக்கிய எழுத்துச் சமூகத்தையே உருவாக்கியுள்ளார். புனைவு, அல்புனைவு எனப் பல துறைகளில் சிறக்கும் தசாவதானியாகத் திகழ்கிறார்,” என திரு ஜெயமோகனை அறிமுகப்படுத்தினார் திரு அருண் மகிழ்நன்.
அண்மைக்காலத்தில் அறிவியலுக்கு எதிராக இடம்பெற்றுவரும் மூன்று தரப்பு வாதங்களை விவரித்தார் திரு ஜெயமோகன்.
ஒன்று, அறிவியல் என்பது புனைவே, மற்ற அனைத்துப் புனைவுகளையும் போல என்பது; இரண்டாவது, அறிவியல் ஒருவிதமான சமயம், முதலாளித்துவத்தின் ஆதிக்கத்தை செலுத்தப் பயன்படும் ஒரு கருவி என்பது; இறுதியாக, அறிவியல் உண்டாக்கும் அழிவுகளே முன்னிலை வகிக்கின்றன என்பது.
இவை அனைத்தும் ஒருதரப்பட்ட வாதங்களே என்ற கருத்தை ஆணித்தரமாக முன்வைத்தார் திரு ஜெயமோகன்.
சென்ற நூறாண்டுகளில் தொற்றுநோய், பஞ்சம் ஆகிய இரண்டு முக்கிய பிரச்சினைகளுக்கு அறிவியல் தீர்வுகண்டுள்ளது என்பதைச் சுட்டி, அறிவியலின் முக்கியப் பயன்களை அவர் எடுத்துரைத்தார்.
அதனால் உண்டாகிய நுகர்வு அதிகரிப்பு, சூழலியல் அழிவுகள், மருத்துவப் பின்விளைவுகளையும் அறிவியல் எதிர்கொள்ளும் என நம்புவதாகவும் கூறினார் திரு ஜெயமோகன்.
“பொய்ப்பித்தலில்தான் அறிவியலை உருவாக்கமுடியும். நான் கூறும் கருத்திற்கு ஒருவர் சான்றுகளோடு மறுப்புத் தெரிவித்து மெய்ப்பித்தால் நான் ஒப்புக்கொள்வேன்; அதுதான் அறிவியல்.
“ஓர் உண்மையைப் புறவயமான சான்றுகளோடு முன்வைக்கும்போதும், அதற்கு எதிராக உலகமே நின்று பொய்ப்பிக்க முயலும்போதுதான் அது அறிவியலாகத் தகுதிபெறுகிறது,” என்றார் திரு ஜெயமோகன்.
அதன்பிறகு, சுவாரசியமான கேள்வி-பதில் அங்கத்தில் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் கூறினார்.
“அறிவியல் மனநிலையை ஒரு சமூகமாகப் பெறவேண்டியதன் அவசியம், அறிவியலையும் ஆன்மிகத்தையும் குழப்பிக்கொள்ளாமல் அதனதன் தளங்களில் வைத்துப் பரிசீலித்தல் என விரிவாகவும் ஆழமாகவும் அமைந்தது ஜெயமோகனின் பயனுள்ள உரை,” என்றார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொறியாளர் சிவானந்தம் நீலகண்டன்.
“அறிவியல் என்பது அறிவை மேம்படுத்தி, அதன்மூலம் உண்மைகளை அறிதல். அறிவியல் மானுட அறிவைக் கொண்டு செம்மைப்படுகிறது. அறிவியல் சார்ந்து தொழில்நுட்பம் வளர்கிறது. ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சி மட்டும் அறிவியலன்று,” என்பதைத் தான் இவ்வுரையின்மூலம் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டார் ஆசிரியை சித்ரா ரமேஷ்.
திரு ஜெயமோகனின் உரையைக் கேட்க http://tinyurl.com/jeyamohantalk எனும் இணையப்பக்கத்தை நாடலாம்.