கருணாநிதி துர்கா
தேசிய வாசிப்பு இயக்கத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்படும் வாசிப்பு விழா ஜூன் 23ஆம் தேதி முதல் ஜூலை 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
சிங்கப்பூரில் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் புதிய இணையச் செயல் திட்டங்கள், நூல் பரிந்துரைகள் முதலான பலவற்றோடு இந்த ஆண்டு வாசிப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாற்றங்களுக்கு மத்தியிலும் ஏற்றங்களைப் பெற்றுச் செழிப்பதற்கான வழிமுறைகள் (Flourish) என்ற கருப்பொருளுடன் 70க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் ஆங்கிலம், தமிழ், சீனம், மலாய் ஆகிய நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்தக் கருப்பொருளையொட்டி 12 தலைப்புகளில் 12 நூல்கள் இந்த ஆண்டு வாசிப்பு விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தமிழின் முதன்மை எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயமோகனின் ‘அறம்: உண்மை மனிதர்களின் கதைகள்’, வழக்கறிஞர் சுமதி எழுதிய ‘ரௌத்திரம் பழகு’ ஆகிய இரு தமிழ் நூல்களும் அவற்றில் அடங்கும். உண்மை மனிதர்களின் கதைகளைத் தழுவிய அறம் தொகுப்பின் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றிச் சுழல்பவை.
தமிழ் வார இதழான துக்ளக்கில் வெளியான வழக்கறிஞர் சுமதியின் கட்டுரைகளின் தொகுப்பு ரௌத்திரம் பழகு. இந்நூலிலுள்ள கட்டுரைகள் பெரும்பாலும் பெண்களின் போராட்டங்களை முன்னிலைப்படுத்துகின்றன. சமூகப் பிரச்சினைகளை எடுத்துரைப்பதோடு, சில வேளைகளில் தீர்வுகளையும் நூலில் பரிந்துரைக்கிறார் சுமதி.
வாசிப்பு விழா தமிழ் நிகழ்ச்சிகளில் தமிழக எழுத்தாளர்கள் ஜெயமோகன், சுனில் கிருஷ்ணன், இலங்கை எழுத்தாளர் அகரமுதல்வன், உள்ளூர் எழுத்தாளர்கள் ஹேமலதா, அழகுநிலா ஆகியோருடன் வழக்கறிஞர்களான தமிழகத்தின் சுமதி, சிங்கப்பூரின் வடிவழகன், ஸ்ரீநிவாசன் லலிதா ஆகியோர் பங்கேற்கின்றனர். விழாவில் மொத்தம் 12 தமிழ் நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
மாற்றத்திலும் ஏற்றம் பெற்று செழிப்பதற்கான வழியைக் கண்டறிய வழிகாட்டும் வகையில் உரைகள், பயிலரங்கு, கலந்துரையாடல்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தமிழ் நிகழ்ச்சிகள்
எழுத்தாளர் ஜெயமோகனின் சிறப்புரை - அறம் நூலின் உண்மைக் கதைகளைப் பற்றியும் அதன் பின்னணியில் உள்ள உண்மையான மனிதர்களைக் குறித்தும் அவர் உரையாற்றுவார்,
இந்தக் கதைகளை எழுத அவரைத் தூண்டியது எது, அவை மக்களிடத்திலும் சமூகத்திலும் ஏற்படுத்திய தாக்கம் என்ன, இக்கதைகள் வாசகர்களுக்கு எவ்வாறு பயனளிக்கும், நிஜ வாழ்க்கையில் அவர்களை எப்படி ஊக்குவிக்கும் என்பதையும் அவர் பகிர்ந்துகொள்வார்.
ஜூன் 24ஆம் தேதி, சனிக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இணையம் வழி இந்த நிகழ்ச்சி நடைபெறும்.
எழுத்தாளர் அகரமுதல்வன் ‘உண்மை மனிதர்களின் கதை’ எனும் தலைப்பில் ஜூன் 25ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 முதல் இரவு 7 மணி வரை ஸூமில் உரையாற்றுகிறார்.
ஜூலை 1ஆம் தேதி நடைபெறும் தமிழ் மேடை நகைச்சுவை எனும் நிகழ்ச்சியை ‘ரவா உப்புமா’ குழுவின் இராஜேஸ்குமார் தர்மலிங்கம், பரந்தாமன் சந்தோஷ் குமார் ஆகியோர் படைக்கின்றனர். உட்லண்ட்ஸ் வட்டார நூலத்தில் மாலை 5.30 முதல் இரவு 8 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெறும்.
கதை எழுதுவதைப் பற்றிய பல கேள்விகளுக்கு ஜூலை 1ஆம் தேதி நடக்கவிருக்கும் ‘உண்மையும் படைப்பும்’ என்ற பயிலரங்கில் எழுத்தாளர் அழகுநிலா விளக்குவார். பயிலரங்கு தேசிய நூலகம், 5வது மாடியிலுள்ள இமாஜினேஷன் அறையில் பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை நடைபெறும்.
‘அறம் செய்ய விரும்பு: ஒரு கதை சொல்லுதல், படைப்பாற்றல் போட்டி’ நிகழ்ச்சி ஜூலை 2ஆம் தேதி நடக்கும். இந்தப் போட்டியில் பெற்றோர்களும் சிறுவர்களும் கலந்துகொள்ளலாம்.
ஆசிரியர் ஜெயமோகனின் அறம் நூலில் இருந்து பெற்றோர்கள் கதை சொல்லுவார்கள். குழந்தைகள் நூலில் உள்ள கதைகளில் ஒன்றை அடிப்படையாகக்கொண்டு புத்தக அட்டைகளை உருவாக்குவார்கள்.
தேசிய நூலகம், 16வது மாடியிலுள்ள தி பாட்டில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும்.
ஜெயமோகனின் ‘அறம்’ சிறுகதைகள் குறித்து எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனுடனான உரையாடல் ஜூலை 10ஆம் தேதி மாலை 6 மணி முதல் இரவு மணி வரை ஸூமில் நடக்கும்.
‘அறம்: உண்மை மனிதர்களின் கதைகள்’ எனும் தலைப்பில் எழுத்தாளர் ஹேமலதாவுடனான கலந்துரையாடல் அங்கம் ஜூலை 8ஆம் தேதி, தேசிய நூலகம், 1ஆம் மாடி, விசிட்டர்ஸ் பிரீஃபிங் அறையில், சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையில் நடைபெறும்.
‘ரௌத்திரம் பழகு’ நூலாசிரியர் வழக்கறிஞர் சுமதியின் சிறப்புரை, ஜூலை 8ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஸூமில் நடக்கும்.
வழக்கறிஞர் திருமதி ஸ்ரீனிவாசன் லலிதாவுடன் ‘ரௌத்திரம் பழகு: எழுச்சியூட்டும் ஓர் அலசல்’ ஜூலை 9ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் 11.30 வரையில் தேசிய நூலகம், 16வது மாடியிலுள்ள தி பாட்டில் நடக்கும்.
‘நீதிமன்ற வழக்குகள் தரும் வாழ்க்கைப் பாடங்கள்’ என்ற தலைப்பில் ஜூலை 15ஆம் தேதி, மாலை 6 மணி முதல் இரவு 8 வரை ஸூமில் நடக்கும் கலந்துரை யாடலில் ‘ரௌத்திரம் பழகு’ நூலிலுள்ள சுவாரஸ்யமான வழக்குகள் பற்றியும் அவை என்னென்ன வாழ்க்கைப் பாடங்களைக் கற்பிக்கின்ற என்பது பற்றியும் வழக்கறிஞர் சுமதி பகிர்ந்துகொள்வார். அவருடன் இணைந்து கலந்துரையாடுகிறார் வழக்கறிஞர் வடிவழகன்.
‘வெற்றிக் கொடிகட்டு! ஒரு இசை கொண்டாட்டம்’ நிகழ்ச்சி ஜூலை 16ஆம் தேதி, தேசிய நூலகம், 16வது மாடியிலுள்ள தி பாட்டில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை கண்ணன் சேஷாத்ரி, இசைமணி பரசி கல்யாண் ஆகியோரால் நடத்தப்படுகிறது.
விழாவின் ஒரு நிகழ்ச்சியாக, தமிழ் பட்டிமன்றக் கழகத்தின் ஒத்துழைப்புடன் அஷ்வின் கணேசன், ஹரி நேத்ரா வெங்கடேசன், பாலகிருஷ்ணன் ராமநாதன், யூசுப் ராவுத்தர் ரஜித் ஆகியோர் பங்கேற்கும் ‘நமது சமூகத்தின் பச்சாதாப மனப்பாங்கு’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் இடம்பெறுகிறது.
இந்த நிகழ்ச்சி தேசிய நூலகம், 16வது மாடியிலுள்ள தி பாட்டில் ஜூலை 8ஆம் தேதி, சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறும்.
அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இலவசம்.
ஜூரோங் வட்டார நூலகம், பொங்கோல் வட்டார நூலகம், தெம்பனிஸ் வட்டார நூலகம் உட்லண்ட்ஸ் சிவிக் சென்டர் ஆகிய இடங்களில் நடைபெறும் வாசிப்பு விழா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பயன்பெறலாம்
நிகழ்ச்சிகளைப் பற்றிய மேல் விவரங்களுக்கு https://www.go.gov.sg/readfest23 என்ற இணையத்தளத்தை நாடலாம்.
மேலும், https://go.gov.sg/readfest23progs என்ற இணையத்தளத்தின் மூலம் நிகழ்ச்சிகளுக்குப் பதிவு செய்யலாம்.