சிங்கப்பூர் தமிழ்ப் படைப்பிலக்கியத் துறைக்கு 70 ஆண்டு காலமாகப் பங்களித்து வரும் சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளரான 90 வயது திரு பி.கிருஷ்ணனை மலேசிய தமிழ் இலக்கிய உலகம் சிறப்பித்துக் கொண்டாடியுள்ளது. புதுமைதாசன் எனும் புனைபெயரில் எழுதும் பி.கிருஷ்ணனின் படைப்புகள் பற்றிய கருத்தரங்கு, அவரது ஷேக்ஸ்பியர் மொழி பெயர்ப்பு நூல்கள் வெளியீடு, ஷேக்ஸ்பியர் மொழிபெயர்ப்பு நாடக அரங்கேற்றம், பி.கிருஷ்ணனுடனான உரையாடல் என மூன்று நாள் நிகழ்ச்சி அண்மையில் மலேசியாவின் பினாங்கு நகரில் நடைபெற்றது.
ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவின் ஓர் அங்கமாக இந்நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. உலகப்புகழ் பெற்ற இந்த இலக்கிய விழாவில் இவ்வாண்டு முதல் முறையாக தமிழ் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றிருந்தன. மலேசியாவின் வல்லினம் இலக்கியக் குழு இவ்வரங்குகளை ஒருங்கிணைத்திருந்தது.
கூலில் பிரம்ம வித்யாரண்யத்தில் நவம்பர் 25ஆம் தேதி இரவு விழா தொடங்கியது. முதல் அங்கமாக ஜெயமோகன் உருவாக்கி வரும் தமிழ் விக்கியின் அறிமுக நிகழ்ச்சி. சிங்கப்பூர் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் நிறுவனத் தலைவர் அருண் மகிழ்நன் தமிழ் விக்கியை அறிமுகப்படுத்தினார். இந்தத் தளத்தில் இடம்பெற்றுள்ள 200க்கும் மேற்பட்ட மலேசியப் பதிவுகள் குறித்த கல்வியாளர்களுடான கலந்துரையாடலைத் தொடர்ந்து தமிழ் விக்கி குறித்த ஜெயமோகனின் உரை இடம்பெற்றது.
மறுநாள் காலையில் பி.கிருஷ்ணன் படைப்புலகம் குறித்த அரை நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. எழுத்தாளர் ஜெயமோகன் தலைமை உரையாற்றினார். மலேசியா, சிங்கப்பூர், தமிழக எழுத்தாளர்கள் பி.கிருஷ்ணனின் சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்பு உள்ளிட்ட படைப்புகள் குறித்த கட்டுரைகளைப் படைத்தனர்.
பி.கிருஷ்ணனின் நகைச்சுவை நாடகங்கள் குறித்து பேசிய எழுத்தாளர் அழகுநிலா, சிங்கப்பூர் வரலாற்றில் 1960, 1970களில் நிகழ்ந்த முக்கியமான சமூக மாற்றங்கள், அரசியல், பொருளாதார நெருக்கடிகளின் பின்னணியில் எழுதப்பட்ட இந்நாடகங்கள், எவ்வாறு சிங்கப்பூரின் ஒரு காலகட்டத்து வாழ்க்கை முறையையும் பேச்சுவழக்கையும் பிரதிபலிக்கின்றன என்பதை ஆராய்ந்தார்.
பி.கிருஷ்ணனின் துப்பறியும் நாடகங்கள் குறித்து பேசிய தமிழக எழுத்தாளர் ஜி.எஸ்.எல்.வி. நவீன், சிங்கப்பூரின் சமூகச் சித்திரத்தை பி.கிருஷ்ணனின் நாடகங்கள் பிரதி பலிப்பதையும் அவரது மொழியாளுமையையும் குறிப்பிட்டுப் பேசினார்.
பி.கிருஷ்ணனின் சிறுகதைகள் குறித்துப் பேசிய மலேசிய எழுத்தாளர் அ.பாண்டியன், பிரசாரத்தன்மை மிகுந்த படைப்புகள் வெளியான காலச்சூழலில் நவீன இலக்கியப் பிரக்ஞையுடன் மொழியைக் கையாண்டு மலாயா மண்ணின் வாசம் படிந்த கதைகளைக் எழுதிய முன்னோடி எழுத்தாளர் பி. கிருஷ்ணன் என்றார்.
பி.கிருஷ்ணனின் உலக இலக்கிய நாடகங்கள் குறித்துப் பேசிய மலேசிய எழுத்தாளர் அரவின் குமார், பி.கிருஷ்ணன் நவீன உலக இலக்கியம் தமிழில் பரவ வழிவகுத்த முன்னோடி ஆளுமை என்றார். தொடர்ந்து, பி.கிருஷ்ணன் மொழிபெயர்த்த ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ, மெக்பெத், ஜூலியஸ் சீசர் ஆகியவை குறித்து பேசிய தமிழக எழுத்தாளர் அருண்மொழி நங்கை, பி.கிருஷ்ணனின் தேடலும் மொழிபெயர்ப்பில் உள்ள நேர்த்தியும் அவரது மொழியாக்கத்தை ஷேக்ஸ்பியர் மொழிபெயர்ப்புகளுள் முதன்மையாக நிறுவுகின்றன என்றார்.
இறுதியாக, பி.கிருஷ்ணன் மொழிபெயர்த்த ஷேக்ஸ்பியரின் ஹேம்லெட், ரோமியோ ஜூலியட், கிங் லியர், சூறாவளி ஆகியவை குறித்து பேசிய சிங்கப்பூர் எழுத்தாளர் கணேஷ்பாபு, மொழிபெயர்ப்பில் அவர் பயன்படுத்திய அரிய தமிழ்ச் சொற்களை எடுத்துக்கூறி, ஷேக்ஸ்பியரின் கவிதைகளை இனிய யாப்பு வடிவத்தில் மொழிபெயர்த்ததில் பி.கிருஷ்ணன் பிற மொழிபெயர்ப்பாளர்களிடமிருந்து தனித்துத் தெரிவதாக குறிப்பிட்டார். அமர்வின் முடிவில், 'பி.கிருஷ்ணன் படைப்புலகம்' என்ற நூல் வெளியிடப்பட்டது. பி.கிருஷ் ணனின் ஓவியம் ஒன்றும் அவருக்குப் பரிசளிக்கப்பட்டது.
அன்று மாலை ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவில் 'மலேசிய சிங்கை இலக்கியக் கலந்துரையாடல்' இடம்பெற்றது. மலேசிய எழுத்தாளர்கள் அ.பாண்டியன், புண்ணியவான், சிங்கப்பூர் எழுத்தாளர் கனகலதா ஆகியோர் கலந்துகொண்டனர். மலேசிய எழுத்தாளர் அரவின் குமார் இந்த அரங்கை வழிநடத்தினார். மலேசியா- சிங்கப்பூர் இலக்கியத்தின் தனித்துவமான போக்குகளும், இருநாட்டு வரலாறு, பண்பாடு, கலாசாரம் ஆகியவை எவ்வகையில் இலக்கியப் படைப்புகளில் எதிரொலிக்கின்றன போன்ற கருத்துகளும் இவ்வமர்வில் விவாதிக்கப்பட்டன.
அடுத்த அமர்வில், சிங்கப்பூரின் கிரிம்சன் எர்த் பதிப்பகம் பதிப்பித்துள்ள பி.கிருஷ்ணனின் ஏழு ஷேக்ஸ்பியர் நாடக மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியிடப்பட்டன. அடுத்து, பி. கிருஷ்ணனுடன் வாசகர்கள் கலந்துரையாடும் அமர்வை எழுத்தாளர் கணேஷ்பாபு வழிநடத்தினார். இணையத்தை நீங்கள் ஏன் பயன்படுத்துவதில்லை என்ற கேள்விக்கு, "என் மனம் இணையத்தை விடவும் வேகமாக செயல்படுகிறது," என்று அவர் சொன்னபோது, அரங்கம் கைத்தட்டல்களால் நிரம்பியது.
நவம்பர் 27ஆம் தேதி காலை வாசகர்கள் எழுத்தாளர் ஜெயமோக னுடன் கலந்துரையாடும் நிகழ்வை மலேசிய எழுத்தாளர் ம.நவீன் வழி நடத்தினார். ஜெயமோகன் எழுதிய அறம் நூலின் ஆங்கில மொழி பெயர்ப்பான 'Stories of the true' நூல் வெளியிடப்பட்டது.
செய்தி: கணேஷ்பாபு