சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் இளையர் பிரிவு, ‘சிறுகதைகளை எவ்வாறு பயில்வது?’ என்ற தலைப்பில் பொங்கோல் சமூக நூலகத்தில் இளையர்களுக்கான கலந்துரையாடலை நடத்தியது.
நவம்பர் 26ஆம் தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெற்ற இக்கலந்துரையாடலை, புகழ்பெற்ற எழுத்தாளரும் தமிழ் விக்கி ஆசிரியர் குழு உறுப்பினரும் ஆயுர்வேத சித்தாந்தத்தில் ஈடுபாடு உடையவரும் காந்திய முற்போக்குவாதியுமான டாக்டர் சுனில் கிருஷ்ணன் வழிநடத்தினார்.
‘பொதுமக்களுக்கு எழுதப்பட்ட கதை என்றால், படிப்பதற்கு ஏன் இவ்வளவு கடினமாக இருக்கிறது?’, ‘குறை யாரிடம் உள்ளது - எழுதியவரிடமா படிப்பவரிடமா?’, ‘கடலளவில் சிறுகதைகள் உள்ளன - எவற்றிலிருந்து தொடங்குவது?’ போன்ற கேள்விகளோடு நிகழ்ச்சி தொடங்கியது.
‘உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார்?’ என்ற கேள்விக்கு புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுஜாதா, கல்கி, இந்திரா செளந்தரராஜன், வேற்றுமொழி எழுத்தாளர்கள் டொபேஷி, டேன் பிரௌன் போன்றோரின் பெயர்களைக் குறிப்பிட்டனர் பங்கேற்பாளர்கள்.
‘ஏன் சிறுகதைகள், இலக்கியம் படிக்கவேண்டும்?’ என்ற வினாவிற்கு விடையாக, நாம் நினைத்துப் பார்த்திராத எண்ண அலைகளுக்கு இட்டுச் சென்று, தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருக்கும் அட்சய பாத்திரமாக சிறுகதையின் சுவையை வர்ணித்தார் டாக்டர் சுனில்.
சிறுகதையின் கூறுகள்
‘சிறுகதை’ என்பது சிறிய கதையல்ல; முடிவிலிருந்து புதிதாகத் தன்னை உருவாக்கிக்கொள்ளும் கதைவடிவமே என்றார் டாக்டர் சுனில்.
‘நான்’ என்று சொல்லக்கூடிய தன்னிலைக் கதைக்கும், மூன்றாம் நபர் பார்வையிலான கதைக்கும் உள்ள வேறுபாடுகளையும் அவர் சுட்டினார்.
சிறுகதையின் கரு, படிமம், தலைப்பு, சொல்முறை, மையப் படம், உரையாடல், புற விவரணை, நுண்மை போன்ற கூறுகளையும் அவர் விவரித்தார்.
சுவையான சிறுகதை ஆய்வு
கருணைக் கொலை அல்லது மானக்கொலை, உறவில் மாட்டிக்கொண்டு தவிக்கும் பெண் ஆகிய சமூகப் பிரச்சினைகளை ஆராய்கிறது மயிலன் ஜி. சின்னப்பன் எழுதிய ‘ஆகுதி’ எனும் நூல்.
பூனையைத் தேடுவதுபோல் சமூகத்திலுள்ள நுண் உணர்வுகளை எடுத்துக்காட்டும் சுவாரசியமான கதை, லதாவின் ‘பச்சைக் கண்களுடன் ஒரு கறுப்புப் பூனை’.
இச்சிறுகதைகளில் இளையர்களின் கண்ணுக்குத் தென்பட்ட நுணுக்கங்கள், கதாபாத்திர விவரங்கள், படிப்பினைகள் பற்றி நிகழ்ச்சியில் கலந்துரையாடப்பட்டது.