குவெஸோன் சிட்டி (பிலிப்பீன்ஸ்): பிலிப்பீன்சில் இம்மாதம் வரலாறு காணாத வெப்பம் பதிவாகி வருவதால் சில பள்ளிகள், வீட்டிலிருந்து கற்பிக்கும் முறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளன.
கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தற்போதைய நிலை அந்தக் காலகட்டத்தை நினைவூட்டுவதாகக் கூறப்படுகிறது.
வரும் ஆண்டுகளில் மேலும் மோசமான பருவநிலையால் கல்வி சார்ந்த அம்சங்களில் மாணவர்களிடையே வேறுபாடுகள் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
கொவிட்-19 காலத்தில் ஆக அதிக நாள்களுக்குப் பள்ளிகள் மூடப்பட்ட நாடுகளில் பிலிப்பீன்சும் ஒன்று. கணினிகள், இணையத் தொடர்பு இல்லாத குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அது பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போது வழக்கத்துக்கு மாறாக அதிக வெப்பநிலையால் பிலிப்பீன்ஸ் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் சென்ற வாரம் அந்நாட்டில் உள்ள 7,000 பள்ளிகள் விட்டிலிருந்து கற்றல் முறையை நடைமுறைப்படுத்தின.
எல் நினோ பருவநிலை முறையால் பிலிப்பீன்சில் வெப்பநிலை அதிகமாக இருக்கிறது என்று வானிலை அதிகாரிகள் கணித்துள்ளனர்.
மணிலா மாநகரில் உள்ள அரசாங்கப் பள்ளிகளில் 87 விழுக்காட்டு மாணவர்கள் அதிக வெப்பத்தால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஆளானதாகத் தெரிவிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 8,000க்கும் அதிகமான ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்பட்ட கருத்தாய்வில் அந்த விவரம் தெரியவந்தது.