கொழும்பு: ஈரானிய அதிபர் இப்ராகிம் ரய்சி புதன்கிழமையன்று (ஏப்ரல் 23) இலங்கைக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இருநாட்டு உறவை வலுப்படுத்தும் நோக்கில் திரு ரய்சி இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். தமது பயணத்தின்போது 514 மில்லியன் வெள்ளி மதிப்பிலான நீர்மின்சக்தித் திட்டம் ஒன்றையும் அவர் திறந்துவைப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு ஈரானிய அதிபர் ஒருவர் இலங்கைக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும். திரு ரய்சியின் தற்போதைய பயணத்தின்போது இலங்கையும் ஈரானும் ஐந்து இணக்கக் குறிப்புகளில் கையெழுத்திடும்.
இலங்கையில் நீர்மின்சக்தி நிலையத்தைக் கட்ட ஈரான், 2010ஆம் ஆண்டில் ஒப்புக்கொண்டது. எனினும், 50 மில்லியன் வெள்ளியை வழங்கிய பிறகு ஈரானுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டது.
அதற்கு அமெரிக்கா, ஈரான் மீது தடை உத்தரவுகளைப் பிறப்பித்ததே காரணம். அதனால் ஈரான், இலங்கைக்குப் பணம் அனுப்புவது சவாலானது. பிறகு எஞ்சிய தொகையை இலங்கை வழங்கியது.
கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலாலும் நீர்மின்சக்தி நிலையத்தைக் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டது.