கோலாலம்பூர்: தங்களின் தாய்மொழியில் பேசுவதோடு அவரவர் கலாசாரத்தைப் பின்பற்றுவதால் சீன, இந்திய இனத்தவரின் விசுவாசத்தை சந்தேகிக்கவேண்டாம் என்று திரு கோபிந்த் சிங் டியோ கூறியுள்ளார்.
மலேசியாவின் ஜனநாயக செயல் கட்சியின் தேசிய துணைத் தலைவரான திரு கோபிந்த், இனப் பாகுபாட்டை ஏற்படுத்தும் கருத்துகளை முன்வைக்கவேண்டாம் என்று முன்னாள் மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மதுக்கு நினைவூட்டினார். குறிப்பாக இனம் சார்ந்த விவகாரங்களில் அத்தகைய கருத்துகளை வெளியிடவேண்டாம் என்று திரு கோபிந்த் கேட்டுக்கொண்டார்.
“மலேசியா ஒரு பல்லின தேசம். அதன் மக்கள் பல்வேறு சமயங்களையும் கலாசாரங்களையும் சேர்ந்தவர்கள்.
“சமயம், இனம், வம்சாவளி, பிறப்பிடம், பாலினம் ஆகியவற்றைக் கொண்டு மக்களைப் பாரபட்சத்துடன் பார்க்கவோ நடத்தவோ கூடாது என்று அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டம் வழிவகுக்காவிட்டால் அவ்வாறு செய்யக்கூடாது,” என்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 14) வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் திரு கோபிந்த் சொன்னார்.
பல மலேசியர்கள் ஒரு மொழிக்கு மேல் பேசுவதையும் மின்னிலக்க அமைச்சரான திரு கோபிந்த் சுட்டினார்.