பெட்டாலிங் ஜெயா: மலேசிய இந்தியர்கள் குறித்து சர்ச்சையாகப் பேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ‘மூடா’ கட்சியின் இடைக்காலத் தலைவர் அமிரா அய்சியா அப்துல் அஸிஸி வலியுறுத்தியுள்ளார்.
“மலேசிய இந்தியர்கள் மலேசியாவிற்கு முழுவதும் உண்மையாக இல்லை,” என்று டாக்டர் மகாதீர் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
இதனையடுத்து, “டாக்டர் மகாதீரின் கருத்திற்குக் கண்டனம் தெரிவிக்கிறேன். அவரது கருத்தை ஏற்பதற்கில்லை. அவர் மிகுந்த பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்,” என்று அமிரா தெரிவித்தார்.
டாக்டர் மகாதீர் பொதுவெளியில் இப்படி மலேசியர்களைத் தாக்கிப் பேசியதும் குறைகூறியதும் இது முதன்முறையன்று என்றும் அவர் குறிப்பிட்டார்.
“பல்லாண்டுகாலம் டாக்டர் மகாதீர் மலேசியப் பிரதமராக இருந்தபோதும், தப்பெண்ணத்துடன் கூடிய அவரது கருத்துகளில் இருந்து இந்தியச் சமூகம் தங்களைத் தற்காத்துக்கொள்ள வேண்டிய சுமையுடன் இருக்கிறது. மலேசியர்களின் நாட்டுப்பற்றுமீது குற்றம் சுமத்தக்கூடாது, சிறுமைப்படுத்தக்கூடாது. நாம் அனைவருமே மலேசியாவிற்கு உண்மையாக இருக்கிறோம்,” என்று அமிரா தமது ‘எக்ஸ்’ சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மலேசிய இந்தியர்கள் இன்னமும் தாங்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்ற உணர்வுடன் வாழ்கின்றனர் என்றும் அவர்கள் மலேசியாவிற்கு முழுவதும் உண்மையாக இல்லை என்றும் டாக்டர் மகாதீர், தந்தித் தொலைக்காட்சிக்கு அண்மையில் அளித்த நேர்காணலின்போது சொல்லியிருந்தார்.
மலேசிய இந்தியர்கள் மலாய் மொழி பேசாமல் தமிழ் பேசுகின்றனர் என்றும் அவர் கூறியிருந்தார்.
டாக்டர் மகாதீரின் இக்கருத்துகளைப் பல்வேறு தலைவர்களும் சாடியுள்ளனர்.
டாக்டர் மகாதீரின் கருத்துகள் வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்ட மலேசிய தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஏரன் அகோ டாகாங், இன, சமய உணர்வைத் தூண்டும் வகையில் அறிக்கை வெளியிடுவதிலிருந்து அரசியல் தலைவர்கள் விலகியிருக்க வேண்டும் என்றும் சொன்னார்.