கனமழை காரணத்தால் சிங்கப்பூர் முழுவதும் பல இடங்களில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் சாங்கி விமான நிலையத்தில் தாமதமும் ஏற்பட்டது.
சிங்கப்பூரின் பல இடங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுவதாக மே 4ஆம் தேதி காலை 6.27 மணி முதல் பொதுப் பயனீட்டுக் கழகம் அதன் ‘எக்ஸ்’ தளத்தின்வழி பல அறிவிப்புகளை வெளியிட்டுத் தெரிவித்தது.
குறிப்பிட்ட சில சாலைகளைத் தவிர்க்குமாறும் அது அறிவுறுத்தியிருந்தது.
மோசமான வானிலை காரணமாக சாங்கி விமான நிலையத்தை வந்தடைந்த சில பயணிகள், தங்களின் பயணப்பெட்டிகளுக்காக கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.
மேலும், மூன்றாவது முனையத்தில் குறைந்தது எட்டு விமானங்கள் புறப்படத் தாமதமானதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர் அனுப்பிய படம் ஒன்று காட்டியது.
துபாய், மியூனிக் ஆகியவற்றிலிருந்து வந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் உட்பட நான்கு விமானங்களிலிருந்து வெளியேறிய பயணிகள் பலர், பயணப்பெட்டி பெறும் இடத்தில் காத்திருக்கும் காட்சியை இரண்டாவது முனையத்தில் காண முடிந்தது.
காத்திருப்போருக்காக சாங்கி விமான நிலையப் பணியாளர்கள் ‘மைலோ’ பானத்தையும் ‘ஓரியோ’ பிஸ்கட்டுகளையும் விநியோகிப்பதையும் பார்க்க முடிந்தது.
பயணப் பெட்டிகளை இலவசமாகப் பயணிகளுக்கு விநியோகிக்கும் சேவையை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வழங்குவதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வானிலையாலும் மின்னல் எச்சரிக்கைகளாலும் தன் ஊழியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்ததன் காரணமாகப் பயணப் பெட்டிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது என்று சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்தது.
இதற்கிடையே, விமானப் பயணங்கள் தொடர்பான அண்மைய விவரங்கள் யாவும் முனையங்களில் அறிவிக்கப்பட்டு வருவதாகவும் பயணிகள் அவரவரது விமான நிறுவனத்திடமிருந்து தகவல் பெறலாம் என்றும் குழுமம் குறிப்பிட்டது.
இதற்கிடையே, செந்தோசா கோல்ஃப் கிளப்பில் காலை 9.15 மணிக்குத் தொடங்குவதாக இருந்த குழிப்பந்தாட்டப் போட்டி நிகழ்வு, மழை காரணமாகப பகல் 12.45 மணிக்குத் ஒத்திவைக்கப்பட்டது. அதையடுத்து போட்டி பகல் 2 மணிக்குத்தான் தொடங்கியது.
மே மாதத் தொடக்கத்தில் மழையை எதிர்பார்க்கலாம் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையம் மே 2ஆம் தேதி எச்சரித்திருந்தது.