மலேசியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கிருமித்தொற்று சம்பவங்கள்
கோலாலம்பூர்: மலேசியாவில் கிருமித்தொற்று சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், கடினமாக இருந்தாலும் மலேசிய மக்கள் நடமாட்ட கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என்று மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது அழைப்பு விடுத்துள்ளார்.
நேற்று அங்கு 6,806 பேர் தொற்றுக்கு ஆளானதாக சுகாதார அமைச்சு டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. 46 பேர் மாண்டனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக 6,000த்திற்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகின.
திடுக்கிடும் அளவில் அதிகரித்துள்ள கிருமித்தொற்று சம்பவங்கள் உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும் என்றும், இந்த கடினமான காலகட்டத்தை மக்கள் கடந்து வருவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும் மகாதீர் கூறினார்.
கொவிட்-19 கிருமிப் பரவல் சங்கிலியை உடைக்க மலேசியர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தங்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும், வருமானம் இல்லாதவர்
களுக்கு உணவு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் சொன்னார்.
"நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீண்டும் அறிமுகப்படுத்துவது சரியானது, ஆனால் அதை உடனடியாக செயல்படுத்துவதில் நாம் தயக்கம் காட்டுகிறோம்," என்று நேற்று வெளியிட்ட வலைப்
பதிவு ஒன்றில் மகாதீர் குறிப்பிட்டிருந்தார்.
தடுப்பூசி போடுவது விரைவுப்
படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
இதற்கிடையே, கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான அடுத்த நடவடிக்கைகள் குறித்து பிரதமர் முகைதீன் யாசின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை நடைமுறைப்படுத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, பேராக்கில் கிருமிப் பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து ஈப்போ, தைப்பிங் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் நாளை முதல் ஜூன் 4ஆம் தேதி வரை கடுமையான நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு நடப்பில் இருக்கும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியுள்ளார்.
எனினும் சென்ற ஆண்டைப் போல் கடுமையானதாக இல்லாமல், வீட்டிற்கு ஒருவர் வெளியே சென்று தேவையான பொருட்களை வாங்கி வர அனுமதி உண்டு என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் கிருமிப் பரவலைத் தடுக்க வெகுஜன பரிசோதனை செய்யுமாறும் தொடர்பு தடமறிய மருத்துவ மாணவர்களைப் பயன்
படுத்துமாறும் அரசாங்கத்தை
மலேசிய மருத்துவ முகமை
வலியுறுத்தியுள்ளது.