சிங்கப்பூரில் வசிப்போர், வேலை செய்வோர் மற்றும் சிங்கப்பூருக்கு வந்துசெல்வோர் அரசியல் நோக்கங்களுக்காக பிரசாரம் அல்லது நிதித் திரட்டில் ஈடுபடக்கூடாது என்று உள்துறை அமைச்சு தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக அமைச்சு வியாழக்கிழமை (ஜனவரி 4) அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
பிப்ரவரியில் நடைபெற இருக்கும் இந்தோனீசிய அதிபர் தேர்தலுக்கு சிங்கப்பூர் ஒரு தளமாகப் பயன்படுத்தப்படுவதாக இணையத்தில் அண்மையில் புகார்கள் பரவியது தமக்குத் தெரிய வந்ததாக அமைச்சு கூறியது.
மேலும், இந்தோனீசியாவில் உள்ள குறிப்பிட்ட சில வேட்பாளர்களுக்காக சிங்கப்பூரில் நிதி சேர்க்கப்பட்டிருப்பது தொடர்பான தகவலும் அந்தப் புகார்களில் அடங்கும் என்றது அமைச்சு.
“வேறு நாடுகளின் அரசியலை சிங்கப்பூருக்குள் கொண்டு வருவதற்கு எதிரான சிங்கப்பூர் அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவானது, கடுமையானது.
“சிங்கப்பூரில் வசிப்போர், வேலை செய்வோர் அல்லது சிங்கப்பூருக்கு வந்து செல்வோர் வெளிநாட்டில் உள்ள அரசியல் நிகழ்வுகளுக்காக நிதித் திரட்டவோ பிரசாரம் செய்யவோ சிங்கப்பூரைப் பயன்படுத்தக்கூடாது,” என்று அமைச்சு கூறியுள்ளது.
மேலும், தனிப்பட்டவரோ குழுவோ இச்செயல்களில் ஈடுபடுவது தெரியவந்தால் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சு எச்சரித்துள்ளது.
அத்துடன், சம்பந்தப்பட்டவர்களின் குடிநுழைவு வசதிகள், அதாவது குடியிருப்புவாசம், வேலை அனுமதி, வருகை அனுமதி போன்றவை ரத்து செய்யப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
அண்மையில் இந்தோனீசிய ஊழல் ஒழிப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் ஆப்ரஹாம் சமத் பதிவேற்றிய யூடியூப் காணொளி ஒன்றில், இந்தோனீசியத் தேர்தலில் சூழ்ச்சி செய்யத் திட்டமிட்டுள்ள நாடுகளின் பெயர்களில் சீனா, அமெரிக்காவுடன் சிங்கப்பூரும் குறிப்பிடப்பட்டிருந்தது.
திரு ஆப்ரஹாமும் புவிசார் அரசியல் ஆய்வாளர் ஒருவரும் விவாதத்தில் ஈடுபட்டதைக் காட்டும் அந்த 53 நிமிடக் காணொளி 2023 நவம்பர் 26ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனை இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.
ஒரு அதிபர் வேட்பாளரும் அவருடன் இணைந்து துணை அதிபராகப் போட்டியிடுபவரும் சிங்கப்பூரில் பெரும் பணத்தைச் சேர்த்து வைத்திருப்பதாகவும், தேவைப்பட்டால் அந்தப் பணம் தேர்தலுக்குப் பயன்படுத்தப்படலாம் என்றும் அவர்களின் விவாதத்தில் பேசப்பட்டது.
இருப்பினும் அந்த வேட்பாளர்களின் பெயரை அவர்கள் குறிப்பிடவில்லை.