ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ, அரிசி உற்பத்தியை பெருக்க விவசாயிகளுக்கு ராணுவம் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
எல் நினோ பருவ நிலை மாற்றம் தொடங்குவதாலும் உலகில் அரிசி ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் இந்தியா கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாலும் முக்கிய தானியங்களின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தோனீசிய அதிபரின் கோரிக்கை வெளியாகியுள்ளது.
நெற்பயிர்களை கண்காணித்தல், மானிய விலையில் வழங்கப்படும் உரத்தை விநியோகித்தல் ஆகியவற்றில் ராணுவம் உதவலாம் என்றார்.
முன்னதாக அண்மைய மழைக்காலத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு விரைவில் விதை விதைப்பதில் ஈடுபடுமாறு அவர் விவசாயிகளை வலியுறுத்தியிருந்தார்.
பருவமழையால் பொதுவாக ஆசியாவின் சில பகுதிகளுக்கு வறண்ட பருவநிலையைக் கொண்டு வரும் எல்நினோ தாமதமானது.
“பயிரிடுவது முதல் அறுவடை வரை எல்லாமே நல்லபடியாக நடப்பதை கிராமத்தில் உள்ள வேளாண்மை பயிற்றுவிப்பாளர்களும் ராணுவ மேற்பார்வை அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்,” என்று டிசம்பர் 13ஆம் தேதி மத்திய ஜாவாவில் பெக்காலொங்கான் என்ற முக்கிய நெல் விளையும் பகுதியில் அதிபர் ஜோக்கோ விடோடோ தெரிவித்தார்.
இந்தியா, உள்நாட்டு விலையைக் கட்டுப்படுத்துவதற்காக ஜூலை இறுதியில் அரிசி ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை அதிகரித்தது. இதனால் இந்தோனீசியா உள்ளிட்ட சந்தைகளில் அரிசி விலை அதிகரித்தது. பணவீக்கமும் கூடியது.
மேலும் மிரட்டலாக இருக்கும் எல்நினோ பருவநிலை மாற்றம் ஆசியாவில் தாய்லாந்து முதல் வியட்னாம் வரை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாதத் தொடக்கத்தில், இந்தோனீசியாவின் வேளாண் அமைச்சர், ஆயுதப் படைகளுக்குச் சொந்தமான வெற்று நிலங்களில் நெல் பயிரிடுவதற்குப் பயன்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ராணுவத் தலைவருடன் புதுப்பித்துக் கொண்டார்.
இந்த ஒப்பந்தம், 2011ல் முதன்முதலில் கையெழுத்திடப்பட்டது.