சென்னை: நியாய விலைக்கடைகளில் விற்கப்படும் அரிசி, நீரில் மிதப்பதாக வெளியான தகவலால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனினும், இவ்வாறு பீதி அடையத் தேவை இல்லை என்று பொது விநியோகத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக சீனாவில் இருந்து முறைகேடாக வரவழைக்கப்பட்ட கலப்பட அரிசி தமிழகச் சந்தையில் விற்கப்படுவதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வலம் வருகிறது. குறிப்பாக நெகிழி (பிளாஸ்டிக்) அரிசி விற்கப்படுவதாகவும் விலை குறைவாக இருப்பதால் அதைப் பலரும் வாங்குவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி நீரில் மிதப்பதால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக சில காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இது நெகிழி அரிசியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எனினும் மக்கள் பீதியடையத் தேவையில்லை என்று அரசு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நீரில் மிதக்கும் அரிசி மணிகள் செறிவூட்டப்பட்டவை என்றும் இந்த அரிசி வைட்டமின் பி12 உள்ளிட்ட பல்வேறு சத்துக் களைக் கொண்டுள்ளது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
“இதில் சேர்க்கப்படும் ஊட்டச்சத்து பொருள்கள் காரணமாக அரிசி நீரில் மூழ்காது. எனவே, செறிவூட்டப்பட்ட அரிசி என்பதை அறியாமல் இதைப் பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டாம்.
“அனைவருக்கும் உணவு, ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டத்தின்கீழ் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது,” என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.