கனடாவில் வசிக்கும் தமிழர்கள் ஒவ்வோர் ஆண்டும் தைத்திங்களைத் தமிழ் மரபுடைமை மாதமாகக் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அங்குள்ள தமிழ் மக்களுடன் இணைந்து தமிழ் மரபுடைமை மாதக் கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.
“என்னுடன் இணைந்து கொண்டாடியவர்களுக்கும் நாடு முழுவதுமுள்ள தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் மரபுடைமை மாத வாழ்த்துகள்!
“ஆண்டாண்டு காலமாக, நாமறிந்த, நாம் நேசிக்கும் கனடாவை வடிவமைக்க தமிழ்ச் சமுதாயம் கைகொடுத்து வருகிறது. நாட்டின் வெற்றியில் தமிழ்ச் சமுதாயம் பெரும்பங்களித்து இருக்கிறது. தமிழ் மரபுடைமை மாதத்தைக் கொண்டாடுவதற்குக் கூடியுள்ள நாம், அந்தப் பங்களிப்புகளைக் கொண்டாடுவோம். நன்றி!” என்று திரு ட்ரூடோ தமது இன்ஸ்டகிராம் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பொங்கல் திருநாளுக்கும் அவர் வாழ்த்து கூறியிருந்தார்.
“அமோகமான அறுவடைக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவும் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் தொடங்கும் நாளாகவும் தைத்திங்கள் முதல் நாளை தமிழ்ச் சமுதாயம் கொண்டாடுகிறது. அவர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்,” என்று ட்ரூடோ தெரிவித்திருந்தார்.