பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கனடா நாட்டு பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ அவரின் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
"சிறந்த அறுவடைக்கு நன்றி செலுத்துவதற்கு தைப் பொங்கல் வாய்ப்பளிக்கிறது. குடும்பத்தினர், நண்பர்கள் ஒன்றுசேர்ந்து நிம்மதி, மிகுதி, மகிழ்ச்சி ஆகியவற்றைக் கொண்டாடுவர். ஒர் இனிமையான அரிசி பொங்கலையும் பகிர்ந்து கொள்கிறார்கள்,” என்று கூறினார் திரு ஜஸ்டின்.
மேலும் ஜனவரியில் கனடாவில் தமிழ் மரபுடைமை மாதம் நடைபெறுவதைச் சுட்டிய பிரதமர் ஜஸ்டின் கனடாவின் தமிழ் சமூகத்தின் வலிமையான வரலாற்றை அவ்விழா அங்கீகரிக்கும் என்றும் குறிப்பிட்டார்.
கனடா நாட்டில் பெருமளவில் இந்திய சமூகத்தினர் வாழ்கிறார்கள். அதில் குறிப்பிடத்தக்கவர்கள் சீக்கியர்கள் மற்றும் தமிழ் சமூகத்தினர். தமிழ் சமூகத்தினர் இந்தியா, இலங்கை நாடுகள் உட்பட உலகத்தின் மற்ற பல பகுதிகளைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.