டொரான்டோ: தமிழர்களின் வரலாற்றையும் தொன்மையையும் தமிழ் மொழியின் சிறப்பையும் காலத்தால் அழியாத தமிழின் இளமையையும் வலிமையையும் கனடா நாட்டு மக்கள் அறிந்துகொள்ள ஊக்கமூட்டப்போவதாக அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொங்கல் செய்தியில் தெரிவித்து இருக்கிறார்.
‘குடும்பங்களுடன் சேர்ந்து கொண்டாடும் தைப் பொங்கல்’ என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்து இருக்கும் அவர், “நான்கு நாள் திருவிழாவின்போது, குடும்பத்தினரும் நண்பர்களும் ஆண்டின் சிறந்த அறுவடைக்கு நன்றி செலுத்துவதோடு, இனிமையான அரிசி பொங்கலைப் பகிர்ந்து கொள்கிறார்கள்,” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
கனடா பிரதமர், கொவிட்-19 காரணமாக பொது நிகழ்ச்சிகளைத் தவிர்த்து வருகிறார்.
“கனடாவிலும் உலக அளவிலும் தை பொங்கலைக் கொண்டாடும் அனைவருக்கும் அமைதி மற்றும் நல்ல ஆரோக்கியம் ஏற்பட நானும் என் மனைவியும் இனிய தைப் பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்,” என்று பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறி இருக்கிறார்.