மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம்மிடம் 150 மில்லியன் ரிங்கிட் (S$44.78 மில்லியன்) இழப்பு கோரி முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது அவதூறு வழக்குத் தொடுத்துள்ளார். தாமும் தமது குடும்பமும் பதவியைப் பயன்படுத்தி செல்வச் செழிப்புடன் வாழ்ந்ததாக திரு அன்வார் கூறியதற்கு எதிராக இந்த வழக்கைத் தொடுத்திருப்பதாக டாக்டர் மகாதீர் கூறியுள்ளார்.
ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை தொடுக்கப்பட்ட வழக்கில் பொது இழப்பீடாக 50 மில்லியன் ரிங்கிட்டும் தமக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு 100 மில்லியன் ரிங்கிட் இழப்பீடும் அவர் கோரியுள்ளார். கடந்த மார்ச் மாதம் திரு அன்வார் பிகேஆர் கட்சியின் மாநாட்டில் பேசும்போது தம்மைப் பற்றி அவதூறான கருத்துகளை வெளியிட்டதாக மனுவில் டாக்டர் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.
பில்லியன் கணக்கான சொத்துகளைச் சேர்த்ததாகவும் வரிகள் செலுத்துவதைத் தவிர்த்ததாகவும் தம்மீது திரு அன்வார் அவதூறு பரப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தாம் ஒரு இனவாதி என்பதுபோல அவர் சித்திரித்துள்ளதாகவும் டாக்டர் மகாதீர் தமது மனுவில் கூறியுள்ளார். ஒரு முன்னாள் பிரதமர் என்ற முறையில் உள்நாட்டிலும் உலக அரங்கிலும் தமக்கு இருக்கும் செல்வாக்கைக் கீழறுப்பதோடு தம் மீது தவறான கண்ணோட்டத்தை இந்த அவதூறுக் கருத்துகள் ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மார்ச் 18 பிகேஆர் கட்சி மாநாட்டில் பேசிய திரு அன்வார், பெயர் குறிப்பிடாமல், “22 ஆண்டு கள் பதவியில் இருந்த பின்னர், மேலும் 22 மாதங்கள் பதவியில் இருந்த ஒருவர் தமது பதவியைப் பயன்படுத்தி தம்மையும் தமது குடும்பத்தையும் வளப்படுத்திக்கொண்டார்,” என்று கூறினார்.
அது பற்றி அப்போது உடனடியாகக் கருத்துத் தெரிவித்த டாக்டர் மகாதீர், “நான்தான் 22 ஆண்டுகளும் பின்னர் 22 மாதங்களும் பதவியில் இருந்தேன். எனவே அன்வாரின் குற்றச்சாட்டு என்னைப் பற்றியது,” என்று கூறியிருந்தார்.
தற்போது 97 வயதாகும் டாக்டர் மகாதீர், 1981ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரையிலும் (22 ஆண்டு) அதன் பின்னர் 2018ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலும் (22 மாதம்) மலேசியாவின் பிரதமராகப் பதவி வகித்தார். இருப்பினும் கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் லாங்காவித் தொகுதியில் அவர் தோல்வியைத் தழுவினார்.
இந்நிலையில், தம்மீது தெரிவித்த அவதூறு கருத்துகளைத் திரும்பப் பெறாவிட்டால் சட்ட நடவடிக்கையை எதிர்நோக்க வேண்டி இருக்கும் என்று மார்ச் 27ஆம் தேதி டாக்டர் மகாதீர், வழக்கறிஞர் மூலம் திரு அன்வாருக்குக் கடிதம் அனுப்பினார்.
அதற்குக் கடந்த மாதம் பதிலளித்த திரு அன்வாரின் வழக்கறிஞர்கள், எந்தவிதக் குற்றச்சாட்டுக்கும் நீதிமன்றத்தில் பதிலளிக்கத் தயார் என்று பதில் அனுப்பினர்.
தற்போது தாக்கல் செய்திருக்கும் அவதூறு வழக்கில், “நான் பிரதமராக இருந்தபோது என்னுடைய தலையீடு எதுவும் இல்லாமலேயே எனது பிள்ளைகள் அனைவரும் தங்களது தொழிலில் சிறந்து விளங்கினார்கள்,” என்று டாக்டர் மகாதீர் கூறியுள்ளார்.எனவே திரு அன்வார் தமது கருத்துகளைத் திரும்பப் பெறுவதோடு நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட தாம் விரும்புவதாக அவர் தமது மனுவில் தெரிவித்துள்ளார்.
அவதூறு வழக்குத் தொடுக்கப்பட்டு இருப்பது குறித்து நேற்று முன்தினம் கருத்துக் கூறிய பிரதமர் அன்வார், “இதனை எனது வழக்கறிஞர்கள் பார்த்துக்கொள்வார்கள்,” என்றார்.