பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் புதிய நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நாட்டின் சில பகுதிகளில் அண்மையில் ஏற் பட்ட பறவைக் காய்ச்சல், பருவகாலக் காய்ச்சல் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வரும் நிபுணர்கள், பருவநிலை மாற்றம்தான் இதற்கு காரணம் எனத் தற்போதைய நிலையில் உறுதியாகக் கூறமுடியாது. ஆனால், மறுக்கவும் இயலாது எனக் கூறியுள்ளனர்.
வெப்பநிலை தொடர்ந்து அதிகரிப்பது, தீநுண்மிகள் உள்ளிட்ட நோய்ப் பரப்பிகளின் வளர்ச்சியையும் செயல்பாட்டையும் மாறுபடுத்துகிறது. அது நோய்ப் பரவல் அபாயத்தையும் அதிகரிக்கிறது. வெப்பமான, ஈரப்பத சூழலானது நோய்ப் பரவல் வழிகளை அதிகரிப்பதோடு பரவல்தன்மை, தீவிரத்தையும் அதிகரிக்கிறது.
பல விலங்கினங்களில் தற்போது சுமார் 10,000 தீநுண்மிகள் (கிருமி/நுண்நஞ்சு) அமைதியாக உலவி வருகின்றன. பருவநிலை மாற்றத்தால் அவை தீவிரமடைந்து மனிதர்களுக்கு பரவும் அபாயம் காணப்படுகிறது. மேலும், அதிகரித்துள்ள குளிர்சாதனப் பயன்பாடு, பயிர் சுழற்சியில் ஏற்பட்டுள்ள மாற்றம், மக்களின் பெரும் இடப்பெயர்ச்சி உள்ளிட்டவையும் நோய்ப் பரவல் அபாயத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றனர் நிபுணர்கள்.