வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கான சேவை, பராமரிப்புக் கட்டணம் விரைவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனினும், இதனால் ஏற்படும் பாதிப்பை குறைக்க அரசாங்கம் குடும்பங்களுக்குத் தற்காலிக ஆதரவை வழங்கும்.
சேவை, பராமரிப்புக் கட்டணத்தில் தகுந்த அதிகரிப்பை தீர்மானிக்க நகர மன்றங்கள் தங்கள் நிதியை மதிப்பீடு செய்து வருகின்றன. இந்த ஆய்வுகள் முடிந்த பிறகு கூடுதல் விவரங்கள் வழங்கப்படும் என்று மக்கள் செயல் கட்சி நகர மன்றங்களுக்கான ஒருங்கிணைப்புத் தலைவர் லிம் பியோவ் சுவான் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தார்.
சேவை, பராமரிப்புக் கட்டணம் கடைசியாக 2017ல் உயர்த்தப்பட்டது. ஒரு மாதத்திற்கு $1 முதல் $17 வரை என இரண்டு ஆண்டு காலத்தில் உயர்த்தப்பட்டது. வட்டாரத்தை சுத்தம் செய்தல், இயற்கைப் பகுதிகளைப் பராமரித்தல், குப்பைச் சேகரிப்பு, பூச்சிக் கட்டுப்பாடு, மின்தூக்கி, விளக்குகள் போன்ற இயந்திர, மின்சாதனங்களைப் பராமரித்தல் போன்றவற்றுக்கு இந்தக் கட்டணம் செலுத்தப்படுகிறது.
கட்டணம் மாற்றப்படும்போது, அதிகக் கட்டணத்தைச் சமாளிக்க குடியிருப்பாளர்களுக்கு உதவ, ‘குறிப்பிட்ட காலத்துக்கான சிறப்பு நிதியுதவி’ வழங்கப்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ ஏப்ரல் மாதம், புக்கிட் பாத்தோக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கான எழுத்துபூர்வமான பதிலில் தெரிவித்தார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் கேள்விகளுக்கு பதிலளித்த திரு லிம், அதிகரித்துள்ள எரிசக்திக் கட்டணம், பராமரிப்புச் செலவு, மனிதவளச் செலவு காரணமாக நகர மன்றங்கள் அழுத்தத்தை எதிர்கொள்கின்றன என்றார். இதில் சில செலவுகள் மிகவும் அதிகரித்துள்ளன. குறிப்பாக எரிசக்திக் கட்டணம் 2018க்கும் 2023க்கும் இடையில் 23% உயர்ந்துள்ளது என்றார் அவர்.
மின்தூக்கி பராமரிப்பாளர் சம்பள உயர்வு, பொருள் செலவு அதிகரிப்பு காரணமாக மின்தூக்கி பராமரிப்புச் செலவும் அதிகரித்துள்ளது.
“குறைந்த வருவாய் ஊழியர்களை மேம்படுத்துவதற்காக படிப்படியான சம்பள உயர்வு முறையை செயல்படுத்துவதன் மூலம், சுத்திகரிப்பு மற்றும் தோட்டக்கலை ஒப்பந்தங்களுக்கான ஒப்பந்தப் புள்ளி அதிகரிப்பதால், நகர மன்றங்களின் பராமரிப்புச் செலவுகளும் அதிகரித்துள்ளன,” என்று அவர் கூறினார்.
“குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டுமென்றால் இந்தச் செலவு அதிகரிப்பைத் தவிர்க்க முடியாது,” என்றார் அவர்.
மவுண்ட்பேட்டன் தனித் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினருமான திரு லிம், மசெக நகர மன்றங்கள் செலவுகளை நிர்வகிப்பதில் கவனமாக இருப்பதாகவும் உற்பத்தி மேம்பாட்டை தொடர்ந்து நாடுவதாகவும் சொன்னார்.
“நகரமன்ற செயல்பாடுகளுக்கு தொடர்ச்சியான மானியங்களை வழங்குவதற்காக தேசிய வளர்ச்சி அமைச்சுக்கு நகர மன்றங்கள் நன்றி தெரிவிக்கின்றன. இது சேவை பராமரிப்புக் கட்டணத்தைக் குறைவாக வைத்திருக்க உதவுகிறது,” என்றார் அவர்.
முழுச் சுமையும் குடியிருப்பாளர்கள் மீது சுமத்தப்படாமல் இருப்பதற்காக, பராமரிப்புச் செலவுகளைச் சமாளிக்க ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட $240 மில்லியன் மானியம் நகர மன்றங்களுக்கு வழங்கப்படுகின்றன.
முதிர்ச்சியடைந்த வீவக குடியிருப்புப் பேட்டைகளுக்கான பராமரிப்புச் செலவு புதிய பேட்டைகளைவிட வேகமாக உயரும் என்பது ஒரு முக்கியக் கவலையாக உள்ளது என்று திரு முரளி கூறினார்.
“அண்மைய நிதிநிலை அறிக்கைகளின் அடிப்படையில், கணிசமான எண்ணிக்கையிலான முதிர்ச்சியடைந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளை நிர்வகிக்கும் நகர மன்றங்கள் அரசாங்க மானியத்தைச் சேர்க்காமல், செயல்பாட்டு பற்றாக்குறையை எதிர்நோக்குகின்றன,” என்று அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
முதிர்ச்சியடைந்த குடியிருப்புப் பேட்டைகளில் பராமரிக்க நிறைய விஷயங்கள் உள்ளன என்றார் அவர்.
மசெக அல்லது பாட்டாளிக் கட்சியால் நடத்தப்படும் கிட்டத்தட்ட அனைத்து 17 நகர மன்றங்களையும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்டது. ஆனால், அவை கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டன அல்லது பதிலளிக்கவில்லை.