படுக்கை பற்றாக்குறைக்கான காரணங்கள் மருத்துவமனைகளில் புதிய வசதிகளைத் திறப்பதில் தாமதம்
பொது மருத்துவமனைகளில் நிலவும் படுக்கை நெருக்கடிக்கு புதிய மருத்துவமனை வசதிகளைத் திறப்பதில் ஏற்பட்டுள்ள தாமதமும் வயதான நோயாளிகள் நீண்ட காலம் தங்கி சிகிச்சை பெறுவதும் காரணங்கள் என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது. கொவிட்-19 தொற்றுநோய்ப் பரவல் சுகாதாரத் துறை உட்பட பல துறைகளில் கட்டுமானத் தாமதத்தை ஏற்படுத்தியது. மற்றது, மாறிவரும் நோயாளிகளின் வயது.
2019க்கும் 2022க்கும் இடைப்பட்ட காலத்தில், நோயாளிகள் சராசரியாக 15 விழுக்காடு அதிக காலம் தங்கியிருந்ததாக அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார். நாள் அடிப்படையில், இது 6.1 நாள்களிலிருந்து ஏழு நாள்களாக உயர்ந்துள்ளது.
“நீண்ட காலம் தங்கி சிகிச்சை பெறவேண்டிய சிக்கலான பிரச்சினைகள் உள்ள வய தான நோயாளிகளை அதிகம் பார்க்கிறோம். 65 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுமுள்ள நோயாளிகளின் விகிதம் 2019ல் 39 விழுக்காடாக இருந்தது. இது 2022ல் 43 விழுக்காடாக உயர்ந்துள்ளது,” என்றார் அவர்.
இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனை (என்டிஎஃப்ஜிஎச்), கூ டெக் புவாட் மருத்துவமனை (கேடிபிஎச்), சாங்கி பொது மருத்துவமனை ஆகியவற்றில், ஏப்ரல் மாதம் மூன்றாவது வாரத்தில் குறைந்தது ஒரு நாளாவது, 24 மணி நேரத்துக்குள் அனுமதிக்கப்பட வேண்டிய நோயாளிகளில் பாதி நோயாளி களுக்குக்கூட படுக்கை வழங்கமுடியாத நிலை காணப்பட்டது.
அத்தகையவர்கள் படுக்கை கிடைக்கும்வரை அவசர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்படுகிறார்கள். இருப்பினும், அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை தொடங்கப்பட்டுவிடுகிறது.
பல பொது மருத்துவமனைகளில் தற்போதைய படுக்கை நெருக்கடி வெளிநாட்டு நோயாளிகளால் ஏற்படவில்லை. மேலும் இந்த மருத்துவமனைகள் முக்கியமாக உள்ளூர் நோயாளிகளைப் பராமரிக்கின்றன என்று அமைச்சு உறுதியளித்தது.
“பொது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் வெளிநாட்டு நோயாளிகளின் விகிதம் மிகவும் குறைவாக, மொத்த நோயாளி சேர்க்கையில் 0.5 விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளது,” என்று அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறினார். 2018ல் நாடாளுமன்றத்தில் அமைச்சு வழங்கிய புள்ளிவிவரப்படி, இது 2017ம் ஆண்டுக்கான 1.5% அல்லது 10,900 வெளிநாட்டு நோயாளிகளின் எண்ணிக்கையைவிடக் குறைவு.
“கேடிபிஎச், டான் டோக் செங் மருத்துவமனைகள் மிக அதிகமான அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை நிர்வகிக்கின்றன,” என்று அவற்றை நிர்வகிக்கும் தேசிய ஹெல்த்கேர் குழுமத்தின் மருத்துவ இயக்குநர் சபைத் தலைவரான பேராசிரியர் லிம் டோக் ஹான் கூறினார்.
தேசிய சுகாதார பராமரிப்புக் குழுமம் சேவை வழங்கும், சிங்கப்பூரின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில் உள்ள நோயாளிகளில் அதிகமானோர் பொதுவாக வயதானவர்கள் என்றும் அவர்களின் சிக்கலான நிலைமைகளுக்கு சிறப்புக் கவனிப்புத் தேவை என்றும் அவர் கூறினார்.
கிழக்குப் பகுதி மருத்துவமனைகளை நிர்வகிக்கும் சிங்ஹெல்த், வெளிநாட்டவரோ உள்ளூர்வாசிகளோ சிகிச்சை தேவைப்படும் எந்த நோயாளியையும் திருப்பி அனுப்புவதில்லை என்று கூறியது.
“அந்த வட்டாரத்தில் உள்ள நோயாளிகள் தங்கள் சொந்த நாட்டில் சிகிச்சை கிடைக்காதபோது அல்லது அவர்களின் நிலை மிகவும் சிக்கலானதாக இருக்கும்போது நம்பிக்கையோடு எங்களிடம் வரக்கூடும்,” என்று அதன் மருந்து சேவைகளின் துணைக் குழும தலைமை நிர்வாகியான பேராசிரியர் ஃபாங் கோக் யோங் கூறினார்.
எல்லா நாடுகளிலும் கிடைக்காத சிறப்பு சேவைகளை சிங்ஹெல்த் வழங்குகிறது. உதாரணமாக, சிங்கப்பூர் பொது மருத்துவமனையிலுள்ள தீக்காய மையம் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரே மையம் என்றார் அவர்.
மேற்கில் பொது மருத்துவ மனைகளை நடத்தும் தேசிய பல்கலைக்கழக சுகாதார குழுமம் (என்யுஎச்எஸ்), சிங்கப்பூரர்களின் சுகாதாரத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றும் வெளிநாட்டு நோயாளிகள் சிங்கப்பூரர்களுக்கு சேவை வழங்குவதில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்றும் கூறியது.
“மருத்துவத் தேவை ஏற்படும்போது எங்கள் வாசலுக்கு வரும் அனைவரையும் கவனிக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. எந்த நாட்டுக்காரராக இருந்தாலும் சரியான நேரத்தில் சிகிச்சை வழங்குவது மறுக்கப்படாது,” என்று அது குறிப்பிட்டது.