இளைஞர்கள் பலர், தாங்களும் சமூக ஊடகத் தளங்களில் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கில், கேளிக்கை என்ற பெயரில் பல விஷயங்களைச் செய்கின்றனர்.
தமிழகத்தில் அரியலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இன்று வரை சிறுத்தைகளைப் பிடிக்காமல் இருப்பதாலும் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் பகுதியில், நாய்க்குப் புலி வேடமிட்டு அதனை வீதியில் இளைஞர்கள் சிலர் உலாவவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதனைக் கண்ட அப்பகுதி மக்களும், அவ்வழியே சென்றவர்களும் ஊருக்குள் புலிதான் வந்துவிட்டது என்று பதறிப்போயினர்.
இந்தச் செய்தி அப்பகுதியில் காட்டுத்தீயைப் போல் பரவியது. அதனைத் தொடர்ந்து சில இளைஞர்கள் அருகே சென்று பார்த்தபோது, நாய்க்குப் புலி வேடமிட்டு இருப்பது தெரியவந்தது. பொதுமக்களை அச்சுறுத்தவே சில இளைஞர்கள் அத்தகைய செயல்களில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது.
நாய்க்குப் புலி வேடமிட்டு வீதியில் உலாவவிட்ட இளைஞர்கள், அதைக் காணொளியாகப் பதிவு செய்து இணையத்தில் பரப்பி வருகின்றனர். இதன் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் இருக்கும் நிலையில், நாய்க்குப் புலிவேடமிட்டு அதை வீதியில் உலாவிட்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.