சிவகாசி: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் உள்ள பேக்கரி ஒன்றில் ‘பப்ஸ்’ வாங்கிய வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வழக்கமாக அவர், பப்ஸை அப்படியே வாயில் வைத்து கடித்துச் சாப்பிடுவது வழக்கம். ஆனால், அன்று அவர் அதை இரண்டாகப் பிய்த்திருக்கிறார்.
அவர் பிய்த்த பப்ஸின் ஒரு பாதியில் இருந்து கரப்பான் பூச்சியின் கால்கள் எட்டிப்பார்த்தன. பயந்துபோன அவர், அதை முழுமையாகப் பிரித்துப் பார்த்தார். உள்ளே அப்படியே ஒரு முழு கரப்பான் பூச்சி இருந்தது.
அதனால் கோபமடைந்த அந்த வாடிக்கையாளர் கடைக்காரரிடம் அதைக் காண்பித்து சத்தம் போட்டிருக்கிறார். அதையடுத்து கடைக்காரர் அவருக்கு புதிய பப்ஸ் ஒன்றைக் கொடுத்துச் சமாதானப்படுத்திவிட்டார்.
புது பப்ஸை சாப்பிட்டும் அவருக்கு மனம் ஆறவில்லை. இதுகுறித்து அந்த வாடிக்கையாளர் சிவகாசி மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தார். அதையடுத்து அங்கு வந்த மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜாமுத்து, பேக்கிரியை ஆய்வுசெய்து, அதில் உள்ள குறைபாடுகளுக்கு குறிப்பாணை வழங்கி, ரூபாய் பத்தாயிரம் அபராதம் விதித்தாா்.