இனிவரும் ஆண்டுகளில் வளர்ச்சித் தேவைகளுடைய இளம் பிள்ளைகளுக்கு உதவும் கல்வியாளர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும்.
ஆரம்பகால் தலையீட்டு கல்வியாளர்கள் என்று அழைக்கப்படும் இவர்களுக்கு அடுத்த மூன்றாண்டுகளில் 3லிருந்து 16 விழுக்காடு வரை ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26) அன்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் சுல்கிஃப்லி தெரிவித்தார்.
இந்த ஊதிய உயர்வு, மாதந்தர சம்பள உயர்வு, போனஸ், மாறுவிகித ஊதியம் ஆகிய வழிகளில் இவர்களுக்கு வழங்கப்படும்.
கல்வி அமைச்சு சிறப்பு கல்வியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளித்த பின்னணியிலும் கல்வியில் ஆரம்பகால தலையீட்டுத் திட்டங்களை அரசு அதிகரித்துள்ள நிலையிலும் இந்த ஊதிய உயர்வுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆரம்பகால தலையீட்டுத் திட்டங்களில் பிள்ளைகளின் வளர்ச்சி, அவர்களுக்கு அளிக்கப்படும் இயன் சிகிச்சை, கல்வி தொடர்பில் ஆதரவு ஆகியவையும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊதிய உயர்வு இந்தத் துறையில் திறனாளர்களை ஈர்க்கவும் அவர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும் நோக்கமாகக் கொண்டது. இதை ஏப்ரல் 26ஆம் தேதி மரினா பே சேண்ட்சில் நடைபெற்ற ஆரம்பகால தலையீடு தொடர்பான மாநாட்டில் பேசிய சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் சுல்கிஃப்லி கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் திரு மசகோஸ், ஆரம்பகால பிள்ளைகள் மேம்பாட்டு அமைப்பு, சமுதாய சேவை அமைப்புகளில் ஆரம்பகால தலையீட்டு வேலைகளுக்கு ஊதிய வரையறைகளை ஏற்படுத்தியுள்ளதைச் சுட்டினார். இது சமுதாய துறையில் பணிபுரிவோருக்கு என்சிஎஸ்எஸ் எனப்படும் தேசிய சமுதாய சேவை மன்றம் பரிந்துரைத்திருக்கும் சம்பளங்களுக்கு இணையாக வகுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.