செங்கடல் நெருக்கடிநிலை காரணமாக சிங்கப்பூரில் பணவீக்கமும் உணவு விலையும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இருப்பினும், கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது ஏற்பட்ட பணவீக்க அதிகரிப்பைப் போன்று இம்முறை பாதிப்பு கடுமையானதாக இருக்காது என்று பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தன்னால் முடிந்த வரை பொருள்களின் விலையைச் சீராக வைத்திருக்கப்போவதாக என்டியுசி ஃபேர்பிரைஸ் உறுதி அளித்துள்ளது.
காஸாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானின் ஆதரவைப் பெற்ற ஹூதி போராளிகள் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்துகின்றனர்.
ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் முக்கிய கடற்பகுதியாக செங்கடல் விளங்குகிறது.
ஹூதி போராளிகள் நடத்தும் தாக்குதல்கள் காரணமாக வழக்கமாக செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களில் ஏறத்தாழ 90 விழுக்காடு கப்பல்களுக்கு வேறு பாதையில் செல்லும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
செங்கடல் நெருக்கடிநிலை காரணமாக கப்பல் போக்குவரத்துச் செலவினம் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த செலவினத்தை ஈடுசெய்ய விற்பனை செய்யப்படும் பொருள்களின் விலையை நிறுவனங்கள் உயர்த்தினால் சிங்கப்பூரில் பணவீக்கம் அதிகரிக்கக்கூடும் என்றும் அதன் பாதிப்பு ஜனவரி மாதத்திலேயே தெரியவரலாம் என்றும் மேபேங்க் வங்கியின் பொருளியல் நிபுணர் பிரயன் லீ தெரிவித்தார்.