லிட்டில் இந்தியாவில் உள்ள அல் முஸ்தஃபா உணவகத்தில் எலிகள், கரப்பான்பூச்சிகள் காணப்பட்டதை அடுத்து, அந்த உணவகத்தின் உரிமம் இரண்டு வாரங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 23ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 5ஆம் தேதி வரை அந்த உணவகம் மூடப்பட்டிருக்கும் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது.
11 லெம்பு சாலையில் அமைந்துள்ள அல் முஸ்தஃபா உணவகத்தில் சிங்கப்பூர் உணவு அமைப்பு அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, உணவு பாதுகாப்புத் தரநிலை தொடர்பான பல விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.
சோதனையின்போது உணவகத்தில் எலிகளையும் கரப்பான்பூச்சிகளையும் அதிகாரிகள் கண்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவிக்கப்பட்டது.
உணவு தயாரிக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக்க கடைக்காரர் தவறியதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறியது.
அந்த உணவகம் 12 மாதங்களுக்குள் 16 தண்டப்புள்ளிகளைப் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. இதன் விளைவாக, அதற்கு $1,100 அபராதம் விதிக்கப்பட்டது.