இல்லப் பணிப்பெண்ணை, ‘நீ ஒரு குப்பை’, ‘நீ மனிதரே அல்ல’ என்றெல்லாம் வசைபாடியதையும் தலைமுடியை இழுத்து, அறைந்து, குத்தி துன்புறுத்தியதையும் நீதிமன்றத்தில் சிங்கப்பூர் மாது ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்தோனீசியப் பணிப்பெண்ணை ‘அறிவில்லாதவள்’ என்றும் டான் சியவ் மெய் என்ற அந்த மாது திட்டியுள்ளார்.
அண்டை வீட்டுக்காரர் காவல்துறைக்குத் தகவல் அளித்த பிறகே பணிப்பெண் துன்புறுத்தப்பட்டது பற்றிய விவரம் தெரியவந்தது.
கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளையும் அழிக்க டான் முயற்சி செய்துள்ளார்.
மலேசியரும் சிங்கப்பூர் நிரந்தரவாசியுமான 41 வயது டான், தன் மீது சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளையும் திங்கட்கிழமை நீதிமன்ற விசாரணையில் ஒப்புக்கொண்டார்.
பணிப்பெண்ணுக்கு வேண்டுமென்றே காயம் விளைவித்தது, மனஉளைச்சலை ஏற்படுத்தியது, தகாத வார்த்தைகளால் திட்டியது, நீதிமன்ற நடவடிக்கைகளுக்குத் தடையாக இருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன.
டானின் கணவர், 43 வயது இந்தோனீசியப் பணிப்பெண்ணை வேலைக்கு அமர்த்தியிருந்தார். ஆனால் பணிப்பெண் டானுக்கு அன்றாட வேலைகளைச் செய்து வந்தார்.
2020 ஜூனில் நடந்த ஒரு சம்பவத்தில் கோபமடைந்த டான், பணிப்பெண்ணின் தலைமுடியை பின்னால் இருந்து இழுத்துள்ளார்.
பணிப்பெண் கத்தியபோது அவரை டான் அறைய முயற்சி செய்தார். ஆனால் பணிப்பெண் தடுத்துவிட்டதால் அறை கையில் விழுந்தது.
2020 ஜூன் 13ஆம் தேதி பணிப்பெண்ணை தகாத வார்த்தைகளால் அவர் பலமுறை திட்டியுள்ளார். டானின் துன்புறுத்தல்களைத் தாங்கமுடியாத பணிப்பெண் உதவிக்கு குரல்கொடுத்துள்ளார்.
2020 ஜூன் 15ஆம் தேதி அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து காவல்துறைக்கு அழைப்பு வந்தது.
அதில் தனது அண்டை வீட்டுக்காரர் அடிப்பதாக பணிப்பெண்ணிடமிருந்து உதவி கேட்டு குரல் வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர், பணிப்பெண்ணை விசாரித்தனர். ஆனால் அதனைத் தடுக்க பலவகையில் டான் முயற்சி செய்தார்.
நீதிமன்ற விசாரணையில் டான் சார்பில் வாதிட்ட ஃபோர்ட்ரெஸ் சட்ட நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் ஜேம்ஸ் யோங்கும் மார்க் இயோவும் தனது கட்சிக்காரர் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டதால் குற்றங்களை இழைத்துள்ளதாகத் தெரிவித்தனர்.
இதற்கு ஆதாரமாக ஐந்து மருத்துவ அறிக்கைளையும் குறிப்புகளையும் அவர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
விசாரணைக்குள் இருக்கிற மற்றொரு சிறிய விசாரணை முடிந்த பிறகு குற்றவாளிக்குத் தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிகிறது.