சமையல் இவருக்குக் கைவந்த கலை. அந்தத் திறனோடு அன்பும் ஒருங்கிணைய, தனது முதலாளியின் குடும்பத்திற்கு அன்றாடம் அறுசுவை உணவை சமைத்துத் தருகிறார் அகிலா சுப்பிரமணியம், 40.
அதனால், சமையல் போட்டி ஒன்று நடைபெறுவதைக் கேள்வியுற்றதும் அகிலாவை அதில் பங்கேற்கும்படி வெகுவாக ஊக்குவித்தார் அவரது முதலாளி உமாமகேஷ்வரி அழகப்பன், 41.
கரையோரப் பூந்தோட்டத்தில் டிசம்பர் 10ஆம் தேதி, இல்லப் பணியாளர்கள் நிலையம் (சிடிஇ) வெளியிட்ட சமையல் குறிப்பு நூலில் அகிலாவின் ‘சிக்கன் கறி கவுனி அரிசி’க்கான செய்முறைக் குறிப்பும் இடம்பெறுகிறது.
இல்லப் பணிப்பெண்கள் 42 பேர் தங்கள் முதலாளிகளோடு பங்கேற்ற சமையல் போட்டியின் நிறைவாக, மனிதவள, கல்வி துணை அமைச்சர் கான் சியோ ஹுவாங் இந்நூலை வெளியிட்டார்.
சமையல் குறிப்பு நூலை https://bit.ly/CDEdigitalcookbook எனும் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
நூல் வெளியீட்டு விழாவில் போட்டியின் தலைசிறந்த 10 சமையல் குறிப்புகளையும் அமைச்சர் கான் அறிவித்தார்.
“எங்கள் இருவருக்கும் இது புதிய அனுபவம். அகிலா தன் உற்றார் உறவினரை அழைத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டதைக் கண்டு நாங்களும் இன்பமடைந்தோம்,” என்றார் உமாமகேஷ்வரி.
அனைத்துலகக் குடியேறிகள் தினத்தை முன்னிட்டு ‘சிடிஇ’ , இரட்சணிய சேனையுடன் இணைந்து கரையோரப் பூந்தோட்டத்தில் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தது. அதன் ஓர் அங்கமாக நூல் வெளியீடு இடம்பெற்றது.
கரையோரப் பூந்தோட்டக் கொண்டாட்டங்கள்
1,000க்கு மேற்பட்ட வெளிநாட்டு இல்லப் பணியாளர்களும் முதலாளிகளும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கரையோரப் பூந்தோட்டத்தின் ‘ஃபிளவர் டோம்’, ‘கிளவுட் ஃபாரஸ்ட்’ ஆகியவற்றுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டது.
இவ்வாண்டின் கருப்பொருள், ‘நல்லிணக்கத்தில் சுவைகள்’ என்பதாகும். அதனையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட கேளிக்கை நிகழ்ச்சியில் அமைச்சர் கான், 20 குடும்பங்களோடும் அவர்களது இல்லப் பணிப்பெண்களோடும் கலந்துகொண்டார்.
இல்லப் பணிப்பெண்கள் நிகழ்ச்சிகளைப் படைத்தனர். இரட்சணிய சேனை தயாரித்திருந்த உரையாடல் அட்டைகளின் உதவியோடு தம் இல்லப் பணிப்பெண்களுடன் சுவாரசியமான, அர்த்தமுள்ள உரையாடல்களில் முதலாளிகளின் குடும்பங்கள் பங்கேற்றன.
முதலாளி, இல்லப் பணியாளர்களின் பிணைப்பு வலுவானது
இதற்கு முன்பு, செப்டம்பர் முதல் டிசம்பர் மாதம் வரை இவ்வாண்டு வெளிநாட்டு இல்லப் பணியாளர்களுக்குப் பல்வேறு நடவடிக்கைகள் நடைபெற்றன.
சமையல், ரொட்டி, கேக் செய்யும் வகுப்புகளும் அவற்றில் அடங்கும். சுமார் 120 முதலாளிகளும் அவர்களது இல்லப் பணியாளர்களும் 5 வாரங்களில், உள்ளூர் உணவு வகைகளையும் இல்லப் பணியாளர்களின் தாய்நாட்டுப் பண்பாடுகள் ஒன்றிய உணவுகளையும் சமைக்கக் கற்றுக்கொண்டனர்.