தாமான் ஜூரோங்கில் வேன் ஒன்று மோதியதால் 12 வயது சிறுமி ஒருவர் உயிர் இழந்தார். இரண்டு பள்ளிகளுக்குச் சில நிமிடங்கள் தொலைவில் அந்த விபத்து நேர்ந்தது.
23 வயது ஆடவரான வேன் ஓட்டுநர், கவனக்குறைவாக ஓட்டி மரணத்தை விளைவித்ததற்காகக் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
யுவான் சிங் ரோட்டில் நேர்ந்த அந்த விபத்து குறித்து தனக்கு பிற்பகல் 3.50 மணிவாக்கில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. அந்த மாணவியின் மரணம் சம்பவ இடத்திலேயே உறுதிசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் ஒருவர் இங் டெங் ஃபொங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். காயமடைந்தவர் மற்றொரு பாதசாரியா பயணியா என்பது தெரியவில்லை. இருப்பினும், மேல்விவரங்களுக்காக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் காவல்துறையைத் தொடர்புகொண்டுள்ளது.
ஜூரோங் உயர்நிலைப் பள்ளியும், யுவபாரதி அனைத்துலகப் பள்ளியும் சம்பவ இடத்திற்கு அருகில் அமைந்துள்ளன.
உயிரிழந்த சிறுமி அனைத்துலகப் பள்ளி ஒன்றில் பயின்றதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.