ஜனவரி 23ஆம் தேதி மாலை 5 மணி அளவில் ரிவர் வேலி வட்டாரத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 4 வயது ஸாரா மெய் ஒர்லிக் மாண்டார்.
இதுதொடர்பாக, 40 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை கூறியது.
அவர் கவனக்குறைவுடன் கார் ஓட்டி சிறுமிக்கு மரணம் விளைவித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இதையடுத்து, இன்ஸ்டிடியூஷன் ஹில் வழியாகச் செல்லும் 150 மீட்டர் நீளமுள்ள சாலைப் பகுதியில் சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குக் குடியிருப்பாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
வேகத் தடை உட்பட மற்ற சாலைப் பாதுகாப்பு அம்சங்களை அந்தச் சாலைப் பகுதியில் அமைத்துத் தர வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
அந்தச் சாலைப் பகுதியில் ஓரளவு செங்குத்தான பாதையும் வளைவு ஒன்றும் இருப்பதை குடியிருப்பாளர்கள் சுட்டினர். இதனால், அங்கு வாகனங்கள் மிகவும் வேகமாகச் செல்லும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறினர்.
அங்குள்ள கூட்டுரிமை வீடுகளிலிருந்து வெளியேறும் கார்கள் ஓரளவு செங்குத்தான சாலையில் கீழ்நோக்கி மிகவும் வேகமாகச் செல்வது வழக்கம் என்று அவ்வட்டாரக் குடியிருப்பாளர்கள் குறைகூறினர்.