சிங்கப்பூரில் டிசம்பர் 3 முதல் 9ஆம் தேதி வரையிலான வாரத்தில் 56,043 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அதற்கு முந்தைய வாரத்தில் பதிவான 32,035 தொற்று எண்ணிக்கையைவிட இது 75 விழுக்காடு அதிகம்.
கொவிட்-19 தொற்று மூன்று வாரங்களாக அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில், வரும் செவ்வாய்க்கிழமையிலிருந்து (டிசம்பர் 19) தொற்று விவரங்களை அன்றாடம் வெளியிடப்போவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தங்களுக்கு உடல்நலம் நன்றாக இருந்தாலும் கூட்டமான இடங்களில், குறிப்பாக உட்புறங்களில் முகக்கவசம் அணிந்துகொள்ளும்படி பொதுமக்களிடம் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இந்த வாரயிறுதியில் சிங்கப்பூர் எக்ஸ்போ அரங்கம் 10ல் இரண்டாவது கொவிட்-19 சிகிச்சை வளாகத்தை தான் திறக்கப்போவதாக அமைச்சு தெரிவித்தது.
கொவிட்-19 நோயாளிகளுக்காக படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த ஏற்பாடு உதவும். நோயாளிகள் அங்கு சேர்க்கப்பட வேண்டுமா என்பதை மருத்துவர்கள் முடிவெடுப்பர்.
ஆடம் சாலையில் உள்ள கிராஃபர்ட் மருத்துவமனையில் ஏற்கெனவே ஒரு சிகிச்சை வளாகம் செயல்பட்டு வருகிறது.
இவ்விரு சிகிச்சை வளாகங்களும் மொத்தம் 80க்கும் அதிகமான நோயாளிகளைச் சேர்க்க முடியும். தேவை ஏற்படும்போது, புதிய சிகிச்சை வளாகம் விரிவுபடுத்தப்படலாம்.
மேலும், படுக்கைகளுக்கான அதிகரித்துவரும் தேவையைப் பூர்த்திசெய்ய மருத்துவமனைகள் நடவடிக்கை எடுக்கவுள்ளன.
“சுகாதாரப் பராமரிப்பு ஆற்றலைப் பாதுகாக்க, அவசரகாலத் திட்டமிடுதலுக்கு பொது மருத்துவமனைகளுடன் சேர்ந்து சுகாதார அமைச்சு பணியாற்றி வருகிறது,” என்று அமைச்சு குறிப்பிட்டது.
சராசரியாக, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் விகிதம் அன்றாடம் 350 என்ற எண்ணிக்கைக்கு உயர்ந்துள்ளது. முந்தைய வாரம் இந்த எண்ணிக்கை 225ஆக இருந்தது.
டிசம்பர் 9ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில், கொவிட்-19 நோயாளிகள் 23 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர். இவ்வாண்டுக்கான ஆக அதிக எண்ணிக்கை இது. டிசம்பர் 9ஆம் தேதிக்கு முந்தைய வாரம் இந்த எண்ணிக்கை ஒன்பதாக இருந்தது.
கொவிட்-19க்காக மருத்துவமனைகளில் மொத்தம் 763 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர்.
வெளிநாடு செல்லும் பயணிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செய்துகொள்ளும்படி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
விமான நிலையத்தில் முகக்கவசம் அணிந்துகொள்வது, பயணக் காப்புறுதி வாங்கிக்கொள்வது, காற்றோட்ட வசதி இல்லாத கூட்டமான இடங்களைத் தவிர்த்துக்கொள்வது உள்ளிட்டவை அத்தகைய நடவடிக்கைகளில் அடங்கும்.