அரசாங்கம் மீண்டும் கொவிட்-19 தொடர்பான கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தத் திட்டமிடுவதாக இணையத்தில் பரவும் தகவல் பொய்யானது என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருக்கிறார்.
டிசம்பர் 11ஆம் தேதி, ஃபேஸ்புக்கில் அவர் அவ்வாறு பதிவிட்டுள்ளார்.
வர்த்கப் பொருள்களைத் தாம் அங்கீகரிப்பதாகக் கூறும் சில பதிவுகளும் தகவல்களும் பொய்யானவை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என வலியுறுத்திய திரு வோங், இணையத்தில் பரவும் தகவல்களைப் பகுத்துணரும்படி கேட்டுக்கொண்டார்.
இந்த ஆண்டில் அரசியல் தலைவர்களின் பெயரைப் பயன்படுத்திப் பொய்யான தகவல் பரப்பும் சம்பவங்கள் இடம்பெற்றன.
மனிதவள மூத்த துணை அமைச்சர் கோ போ கூன், தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், சுகாதார அமைச்சர் ஓங் யி காங், உள்துறை, சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணை அமைச்சர் சுன் ஷுவெலிங், பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சக்தியாண்டி சுபாட் ஆகியோரின் பெயர்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டன.
அரசாங்கம், 2020ஆம் ஆண்டு சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தீவிர கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது.
தற்போது கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் அத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்ற வதந்தி இணையத்தில் பரவுகிறது.